Thursday, October 14, 2010

அழிக்கப்படும் புராதனங்கள்- மாவட்ட ஆட்சியருக்கு ஒரு வேண்டுகோள்

புதுக்கோட்டை புராதனங்கள் அபாய நிலையில்!!!

Posted by fourthpress on October 13, 2010

சிதறாமல் அமர்வாரா ஜைனர்? ஜைனர் புடைப்பு சிற்பங்கள் கொண்ட ஆளுருட்டி மலை


புதுக்கோட்டை மாவட்டமே, தொன்மையானது என்றால் அது மிகையாகாது. ஏனெனில், கற்கால மனிதர்கள் வாழும் குகைகள், புதை பொருள் தாளிகள், cane circle எனப்படும் கல் வளைவுகள், நடுகற்கள் ஆரம்பித்து, ஜைன குகைகள், புடைப்பு சிற்பங்கள், மூலிகை ஓவியங்கள், முதல் தமிழ் மூல எழுத்துக்களாம் பிராம்மி எழுத்துக்கள், முதல் காலச் சோழர்களின் கோயில் ஆகியவை நிரம்பிய, சித்தன்னவாசல், குடுமியான் மலை, நார்த்தாமலை, கடம்பர்மலை, ஆளுருட்டிமலை ஆகியவை நிரம்பிய பகுதி புதுக்கோட்டை. அந்தப் பெயர் இனி நிலைக்குமா என்பது சந்தேகமே. கடந்த சில மாதங்களாக மிக அதிகமாக கல் குவாரி காண்டிராக்டர்களால், அடி முடி காணாமல், தொல்லியல் துறையின் சட்டங்கள், தடுப்பு சட்டங்கள், (ban) ஆகியவை மதிக்கப் படாமல், இந்த காலத்தால் அழியாத புராதனச் சின்னங்கள் பெயர்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் அதிரும் குண்டுகளால், குகைகளும், நிற்கும் இடங்களும் மக்கள் நடமாடுகையிலேயே ஆட்டம் கொண்ட வண்ணம் உள்ளது. இப்படியே தொடர்ந்தால், மத்தியத் தொல்லியல் துறையால் காக்கப்படும் இச்சின்னங்களும் குவாரிக் கற்களாக இரையாகும் நாள் வெகுதூரமில்லை. மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளையும், அங்குள்ள காவலர்களையும் தொடர்பு கொண்ட போது, யாரிடம் முறையிட்டாலும், அரசியல் பலமிக்க கல் குவாரிக் காரர்களை தடுக்க முடியவில்லை என்று வருத்தமே தெரிவிக்கின்றனர். இனியும் தாமதியாமல், தமிழ் நாடு அரசு தொல்லியல் சின்னங்கள் உள்ள மலைகள் முழுவதையுமே காப்பதற்கான சட்டம் இயற்றி,(இல்லை இருக்கும் சட்டத்தை தூசி தட்டி எடுத்து) உடனேயே இந்த காலவரையற்ற குண்டுவெடிப்புகளை தடுக்காவிட்டால், தமிழகத்தின் தொன்மைக்குப் பெருமையாக விளங்கும் இச்சின்னங்கள் இனி புகைப்படங்களாக மட்டும் காணும் நிலை உருவாகிவிடும். அரசு உடனடியாக கவனிக்குமா?

வெடித்து வைக்கப்பட்டுள்ள கற்குவியல்கள் தகர்க்கப்பட்ட கற்குவாரிகள் படுகைக்கு மிக அருகே




 மாபெரும் அழிப்பு நடவடிக்கையை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு மின் அஞ்சல் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வலைப்பதிவர்கள் அனைவரும் தங்கள் வலைப் பக்கங்களில் இதை மறு வெளியிடு  செய்து தருமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.

அன்புடன் 
ஆரூரன் விசுவநாதன்


நன்றி:-http://fourthpillar.wordpress.com/


புதுக்கோட்டை ஆட்சியர் மின் அஞ்சல் முகவரி:-
collr.tnpdk@nic.in மற்றும் collrpdk@tn.nic.in


To
The Collector,
Pudukottai Dist.
Order immediatly to stop quarrying. Such a monument can not be built by present or future govt. Such monuments are telling poetry, history of geography of glorious past.
Regds:\



collrpdk@tn.nic.in 


Friday, October 01, 2010

இலக்கிய இன்பம்


பல்வேறு சிறப்புக்களை தன்னுள்ளே பொருந்தியிருக்கும் மொழி நம் தமிழ் மொழி என்பதில் சந்தேகமில்லை. ஒரு பொருளை அல்லது பயன்பாட்டைக் குறிக்க பொதுவான சொற்கள் இருப்பினும், நம் மொழியில் சிறப்புப் பெயர்களால் குறிப்பிடப்படுவது சிறப்பே.

ஒருவன் - ஒருத்தி என்ற சொற்களை ஆண்பால் - பெண்பாலைக் குறிக்கப் பயன்படுத்துகிறோம்.  ஒருவர் என்ற சொல் இருபலரையும் குறிக்குமுகமாக பயன்படுத்தப் படுவது நம் சொல் வளத்தினை உலக்குக்குப் பறைசாற்றுகிறது. 

“ ஒருவனுக்கும் ஒருத்திக்கும் உருவென்றால் அவ்
  வுருவை இக் தொருத்தன் என்கோ? ஒருத்தி என்கோ?
  இருவருக்கும் உரித்தாக ஒருவர் என்றோர்
  இயற்சொல் இல தெனின் யான் மற் றென் சொல் வேனே.”

                                     -குமரகுருபரர்


இலை என்ற ஒற்றைச் சொல் பொது வழக்காக இருப்பினும் இதற்கு நான்கு வேறு சொற்களும் உண்டு.  மா,  வாழை முதலின ”இலை” என்றும்..நெல், கேழ்வரகு முதலியன ”தாள்” என்றும், கரும்பு, சோளம் போன்றவை “தோகை” என்றும், தென்னை, பனை போன்றவை ”ஓலை” என்றும் வழங்கபடுகிறது.

பூ என்ற பொதுப்பெயர் அரும்பும் போது “அரும்பு” என்றும், பேரரும்பான போது “போது” என்றும் மலர்ந்த பின் மலர் என்றும், வீழ்ந்தபின் “வீ” என்றும் வாடிய பின் ”செம்மல்” என்றும் அழைக்கப் படும்.

போதொடு நீர் சுமந்தேத்தி, புகுவார் அவர்பின் புகுவே-அப்பர்

அரும்பு என்னும் ஒரு நிலைக்கே, அதன் அளவையொட்டி, அரும்பு, மொட்டு, முகிழ், முகை, மொக்குள் என்ற பல்வேறு சொற்களால் அறிப்படுகின்றன.


”உடலால் இருவர், உயிரால் ஒருவர் ”, ”ஈருடல் ஓருயிர்” என்ற பதங்களெல்லாம் வெறும் பிதற்றல்களாக போயிருக்கும் இந்நாளில், தலைவனும் தலைவியிம் எவ்வாறு ஒன்றாயிருந்தனர் என்பதை “மருவிய பாங்கி மதியிடம் படுத்தல்” என்னும் அகப்பொருள் துறையின்கண் அமைந்த  கச்சியப்ப முனிவரின் இந்தப் பாடல். 

உயிர் எழுத்துக்களில் மட்டுமன்றி மெய்யெழுத்துக்களிலும் அகரம் கரந்து உறைகிறது.  “ அகர முதல எழுத்தெல்லாம்” என்ற வள்ளுவரின் கருத்துக்கு விளக்கம் தருவது போல் அமைந்துள்ளது .

  ” பன்னீருயிரும் பதினெண் உடலும் பயின்று இயக்கும்
    அந்நீர் என அடல் வேலோன் தனக்கும், அமிழ்து உயிர்க்கும்
    முந்நீர் தரள முறுவல் முரி புரு வத்திவட்கும்
    நன்னீர் உயிர் ஒன்று, மெய்யிரண்டாகி நயந்ததுவே”  

இனிமை என்பது தமிழுக்கு “ழ” கரத்தால் மட்டும் ஏற்பட்டதன்று, எழுத்தினிமை போன்றே, சொல்லினிமை, செய்யுளினிமை, அணியினிமை, இலக்கியவினிமை, இசையினிமை, கூத்தினிமை எனப் பிற இனிமைகளுமுண்டு.

                                    -தேவநேயப் பாவாணர், - தமிழ் வரலாறு.