Wednesday, January 26, 2011

குற்றமென்ன செய்தேன் கொற்றவளே…..குற்றமென்ன செய்தேன்?..








நான் யாருக்கு என்ன தீங்கிழைத்தேன். என்னால் பாதிக்கப்பட்டவர்கள் யார்?  மத்தியின் முன் மாநிலமாக அல்ல, வெளியே திராவிடம் பேசி, உள்ளே தேசியம் காக்கும் லட்சக் கணக்கான திருடர்கள் முன்னனி கட்சியின் பிரஜைகளில் ஒருவனாக கேட்கின்றேன்.  எதிர்த்து வாக்களித்தேனா? நீங்கள் வரும்போது வரவேற்பு ந்டாத்தி பாதபூசை செய்யாமல் இருந்தேனா? கொள்ளையடித்ததில் பங்கு கொடுக்காமலிருந்தேனா? என்ன குற்றம் செய்தேன் கொற்றவனே..என்ன குற்றம் செய்தேன்? ...................

 கூற மாட்டீர்களா? நீங்கள் கூற வேண்டாம்......................

இதோ அறங்கூறும் அமைச்சர் செகத் ரட்சகன் இருக்கின்றார், மறவர் குடிப்பிறந்த மாணிக்கம் கோழைமணி இருக்கின்றார், டை” மண்டும் கூட இருக்கின்றார்.  கொள்ளையடித்துக் கொள்ளையடித்து, கோமான்களாகிய மக்கள் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள்.  கோமணம் உருவப்பட்டதுகூடத் தெரியாமல், வேடிக்கை பார்க்கும் தன்மானத் தமிழர் கூட்டம் இருக்கின்றது..அவர்கள் கூறட்டும்.....என்ன குற்றம் செய்தேன்??

 நான் எழுதாத இலக்கியமா? இத்தனை ஆண்டுகாலமாக,தமிழ் திரைப்படத்துறைக்கு நான் செய்தது கொஞ்சமா? நஞ்சமா?  சுத்தியின் சத்தம்” என்ற அந்த ஒரு காவியத்திற்கே குறைந்தது 10 ஆஸ்கார் விருதுகள் வழங்கப் பட்டிருக்க வேண்டும்....பார்ப்பண சூழ்ச்சியின் விளைவாக எனக்கு அது கிடைக்காமல் போனதை உலகம் அறியும்.

 வாழும் வள்ளுவர்ன்று என் மக்களால் கொண்டாடப்படுவதை அறிந்தும், மாநிலத்தின் நலனை கருத்தில் கொள்ளாமல், ஏதேச்சதிகாரத்தோடு நடந்து கொள்ளுவதாகவே நான் கருதுகின்றேன்.  இந்த மாற்றாந்தாய்ப் போக்கை மத்திய அரசாங்கம் கைவிட வேண்டும்... அறிஞர்அண்ணா அன்றே சொன்னார்....
 தம்பி...கக்கக்க....காகக்க்க......காக்கா கக்கா கா.
 
ஆடையிழந்து, அம்மணமாய்த் திரிந்த தமிழன்னைக்கு, லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் செலவு செய்து, செம்மொழியாடை கட்டியவன் நான் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது....
ஈழத்தில் போர்நிறுத்தம் இல்லையென்றால், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் என்று சொல்லி காலையுணவுக்குப் பின் தொடங்கி மதிய உணவுக்குள் போராட்டத்தை கை விட்ட கதை உலகறியும். பாலுக்கும் காவலாய், பூனைக்கும் தோழனாய் நடித்து என் ராஜ விசுவாசத்தை அவ்வப்போது வெளிக்காட்டிக் கொண்டுதான் இருக்கின்றேன். 

சமீபத்தில் கூட உங்கள் ஆட்சிக்கு ஆபத்து வந்தபோது உடுக்கை இழந்தவன் கை போலே....அங்கே வந்து தம்பி ராசாவைப் பலி கொடுத்து உங்க அரசினை காப்பாற்றினோம் என்பதை நினைவூட்டக் கடமைப் பட்டிருக்கின்றேன்.
 
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்...ஆனால், தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் சொல்லித்தந்த பாடம் நினைவில் இருப்பதால் இத்தோடு விட்டு விடுவோம்...

 அடுத்த குடி அரசு தினத்திற்கு நான் இருப்பேனோ இல்லையோ தெரியாது...உங்களின் அடிவருடியாக, அடிமையாக இத்தனை நாள் காலத்தை ஓட்டிவிட்ட எனக்கு..பதவிகளின் மீது பெரிய ஆசை கிடையாது.  காலம் முழுவதும் மக்களின் கண்ணீரைத் துடிக்கும் கைக் குட்டையாகவே வாழ விரும்புகின்றேன்.  ஆனாலும், கட்சி கண்மணிகள் நேற்றிரவு இருந்தே, கொதித்துப் போயிருப்பதாலும், ஆரியர்களின் சூழ்ச்சி என்று தமிழினம் பொங்கியெழாமல் இருக்கவேண்டுமே என்ற கவலையினாலும்  இதை எழுதுகிறேன்.....

கமல பூட்டன், கமல விபூட்டன் இல்லையென்றாலும் பரவாயில்லை.....குறைந்த பட்சம் கமலத்திரு (பத்ம பூஷன், பத்ம விபூஷன், பத்மஸ்ரீ......நாங்க கிரந்தம் பயன்படுத்தம் மாட்டமில்ல..அதான் தமிழ படுத்தி எடுத்து விட்டோம்) பட்டமாவது அளித்திருப்பீர்கள் என்று எதிர்பார்த்திருந்தோம்... ஆனால் மீண்டும் பெரிய அண்ணன் தோரணையில் நடந்து கொண்டீர்கள்.  சரி அண்ணா சொன்னது போல.......தம்பி...மறப்போம்....மன்னிப்போம்....

இனியாவது உடனடியாக, அடுத்த மாத இறுதியில் ஒரு நல்ல நாளில் மீண்டும் குடி அரசு தின விழா நடத்தி, எனக்கு ஏதாவது ஒரு பட்டம் கொடுத்து, பெருமையடைந்து கொள்வதோடு மட்டுமன்றி,  இந்நிகழ்வு வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் எதிர்கால சந்ததிகளுக்கு நேரு குடும்பத்தின் பெருமைகளை பறைசாற்ற ஒரு வாய்ப்பாக அமைவது நிச்சயம்..


Wednesday, January 19, 2011

தமிழ் மணத்தை ஏன் குறை சொல்ல வேண்டும்?



தமிழ் மணம் விருது-2010ல் இறுதிக்கட்டத் தேர்வில் பதிவர்களை நடுவர்களாக நியமித்தது குறித்து வரும் விமர்சனங்கள் ஏற்புடையதாகத் தெரியவில்லை. தாங்கள் எப்படி பணியாற்றினோம் என்பது குறித்து நடுவர்களாக இருந்த பதிவர்கள் (கோவி, ஜோதிஜி) மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர். குறிப்பிட்ட பிரிவுகளில் போட்டியிடாத பதிவர்களிடம் வேறு இரண்டு பிரிவுகளில் தேர்வான இடுகைகளை அளித்து மதிப்பெண் பெற்று, அதே போல் இன்னொரு பதிவரிடமும் மதிப்பெண் பெற்று, அவைகளைத் துணைக்கு வைத்து தேர்வுக் குழு தேர்வு செய்ததாகவே என் புரிதல் உள்ளது.
  
அடுத்து, பதிவர்களின் இடுகைகளுக்கு வேறு எழுத்தாளர்களையோ, வலைப்பதிவு தொடர்பு அல்லாதவர்களையோ நடுவர்களாக நியமித்திருந்தாலும் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் எழத்தான் செய்யும். வலைப் பதிவு எழுத்திற்கும், மற்ற எழுத்தாளர்களின் எழுத்திற்கும் நிரம்ப வித்தியாசங்கள் இருக்கும் பட்சத்தில், வலைப் பதிவு எழுத்துக்களை ஆய்வு செய்ய, எடை போட வலைப்பதிவு எழுத்து மனோபாவம் கொண்ட பதிவர்களே சரியான தீர்வாக இருப்பார்கள்.

நடுவர்களாக இருந்த பதிவர்களின் மேல் இருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பையொட்டியே,இந்த விமர்சனங்கள் வந்திருப்பதையும் காண முடிகிறது.வலைப்பூ என்றால் என்னவென்றே தெரியாத ஆளை நடுவராக நியமித்து, அவர் யாரென்று தெரிய வந்தால் அவரின் சாதியோ, இனமோ, அரசியல் பார்வையோ அல்லது அவர் கொண்டிருக்கும் கொள்கையோ, யாரோ ஒரு பதிவருக்கு பிடிக்காததாகப் போனால், அங்கேயும் இதே குரல் கூடவோ, குறையவோ ஒலிக்கத்தானே செய்யும்.

குறையோ, விமர்சனமோ வைக்கும் முன்பாக, எதனடிப்படையில் வைக்கிறோம் என்பது முக்கியம். இறுதிக்கட்டத் தேர்வில் இருந்த நடுவர்கள் மேல் கொண்டிருக்கும் பார்வையின் விளைவே, இந்த விமர்சனங்களுக்கு அடிப்படையாக இருப்பதாகவே நம்புகிறேன்.

உண்மையை சொல்லவேண்டுமெனில் பல காரணங்களை முன்னிருத்தி சில பதிவர்கள் மேல் எனக்கும் மாறுபட்ட கருத்து இருந்தாலும், அவர்கள் இடுகை அழுத்தமான, ஆழமான பார்வையோடு, ஏற்றுக் கொள்ளும் வகையில், மனதிற்கு திருப்தியாக இருக்கும் போது அதற்கு வாக்களித்தும் இருக்கிறேன். 
  
இது வரை தமிழ்மணம் குறிப்பிட்ட ஒரு சார்பு நிலை எடுத்ததாக வலையுலகத்திற்கு வந்த மூன்று ஆண்டுகளில் ஒருபோதும் நான் உணர்ந்ததில்லை. மேலும் இதுவரை எதுகுறித்தாவது கேட்கும் போது தமிழ்மண நிர்வாகிகள் விளக்கமாக, வெளிப்படையாகவே பதிலும்  அளித்துவருகின்றனர். பதிவர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தோடு மூன்றாவது ஆண்டாக போட்டியை நடத்தி வரும் தமிழ் மணம், நடுவர்களை நியமித்ததை ஆதரிப்பது நமது கடமை. இந்தப் போட்டியின் வெற்றியே மற்ற திரட்டிகளையும் இது போல் நடத்த ஊக்குவிக்கும், அதன் பொருட்டு இன்னும் பதிவர்களுக்கும் சில ஊக்கம் கிடைக்கும் என்பதையும் மறவாமல் இருப்பது அவசியம்.


பொதுவாகவே, ஒரு போட்டியை நடத்தும் அமைப்பிற்கு வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும்  அதிகாரம் இருக்கின்றது என்ற அடிப்படையை உணராமல் பேசுவதும் எழுதுவதும் முட்டாள்தனமானது.

எந்த ஒரு அமைப்பின் மீதி நமக்கு நம்பிக்கையில்லையோ , அந்த அமைப்பின் சட்ட திட்டங்களை ஏற்றுக்கொண்டு இணைந்து செயல்படுவதாக கூறிக் கொண்டு, ஓட்டுப் பட்டிகளை  இணைத்துக் கொள்வதும் மறுபுறம், அந்த அமைப்பை விமர்சிப்பதுமான  இரட்டை முகம் நமக்கு வேண்டாமே.

ச்சீச்சீ இந்த பழம் புளிக்கும் என்னும் விதமான செயல்பாடுகள் சில குள்ள நரிகளுக்கு வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்கலாம்.
பதிவுலக நண்பர்களே, நமக்கு இது தேவையில்லை.