தண்ணீர் விட்டா வளர்த்தோம்.....சர்வேசா
கண்ணீரால் வளர்த்தோம்
நேற்றைய செய்தி தாள்கள், ஊடகங்கங்கள், இணையங்கள், எங்கு காணினும் ஆசிரியர் தின விழாச்
செய்திகள், வாழ்த்துக்கள். டாக்டர் ராதா கிருஷ்ணன் பிறந்த நாள் விழா செய்தி தொகுப்புகள். பள்ளிகளில் ஆசிரியர்கள் ஆட, பாட, மாணவர்கள் வேடிக்கை பார்க்க, மாணவர்கள் ஆசிரிய ஆசிரியைகளைப் பற்றி கவிதை மழை பொழிய சிறப்பாக முடிந்தது ”ஆசிரியர் தினம்”
இந்த கொண்டாட்டங்கள் குறித்த எந்த வருத்தமும் எனக்கில்லை. 1947க்கு முன்னர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத, சுதந்திரப் போராட்டத்தில் எந்த ஒரு சிறு பங்களிப்பும் செய்திராத, ஆதிசங்கரர் தொகுத்த இந்து மத சாரத்தை ஒருங்கிணைத்து இந்து தத்துவ ஞான மரபு குறித்த புரியாத புத்தகங்கள் எழுதினார் என்பதைத் தவிர என்ன செய்துவிட்டார்? சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்.
உலக தத்துவ ஞானிகளில் ஒருவர் என்று உருவகப்படுத்தப்பட்ட இவரின் தத்துவங்களும் தீர்க்க தரிசன வரிகளும் இன்று எங்கே போயிவிட்டன். சோசலிச கொள்கைகளில் நம்பிக்கை கொண்டு மத வாதத்திற்கு எதிராக இருந்த பண்டித நேரு அவர்களாலேயே நிராகரிக்கப் படமுடியாத அளவிற்கு திடிரென சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் குடியரசுத் தலைவராக வளர்ந்த கதையின் பின்னனி குறித்து பலரும் பேசுவதை எழுதுவதை கேள்விப்பட்டிருக்கின்றேன்.
இந்த விவாதங்களுக்கு நான் வரவில்லை.......
வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் நேற்று
"ஒருநாடு உரிமையோடு விளங்க வேண்டுமென்றால் முதலில் அதன் பொருளாதாரச்
சுரண்டலைத் தடுக்க வேண்டும்; இரண்டாவதாகத் தாய்மொழியின் வாயிலாக அறிவை
வளர்க்க வேண்டும். இந்த இரண்டும் எல்லா நாடுகளுக்கும் பொதுவான உணமை. இதனை
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே நன்றாக உணர்ந்து வாழ்க்கையில் காட்டித்
தொண்டு செய்தவர் வ.உ.சி"
என்று டாக்டர் மு.வ. அவர்கள் சொன்னது போல் நாடு
மொழி இரண்டிற்கும் பெருந்தொண்டாற்றிய பெருமகன்.
நன்றி-தமிழ் விக்கி
வ.உ.சி யின் பிறந்தநாளை அனைவரும் மறந்து
போனதுதான் வருத்தப்பட வேண்டிய விசயம். தமிழக அரசோ, காங்கிரஸ் கட்சியோ
யாரும் இதைப் பற்றி கவலைப் பட்டதாக தெரியவில்லை.
அருந்தமிழுக்கு அவர் ஆற்றிய பணிக்காகக்கூட அவரை நினைத்துப் பார்க்கவில்லை தமிழக தமிழறிஞர்கள்.
சிறையில் இருந்த நாட்களிலேயே தமிழ் இலக்கிய இலக்கணங்களில் கவனம்
செலுத்தத் தொடங்கிய வ.உ.சி. அவர்களால் தமிழன்னைக்குக் கிடைத்த அணிகலன்கள்
பல.
- வ.உ.சிதம்பரம் பிள்ளை தற்சரிதம் (சுயசரிதம்)
- திருக்குறள் மணக்குடவர் உரைபதிப்பு
- மனம் போல் வாழ்வு (மொழி பெயர்ப்பு தத்துவ நூல்)
- அகமே புறம் (தத்துவம்)
- மெய்யறம் (ஆன்மீகப்புரட்சி நூல்)
- திருப்பொய்கையார் இன்னிலை (பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. அதன் உரைநூல்)
- தொல்காப்பியம் இளம்பூரணர் உரைபதிப்பு
- வலிமைக்கு மார்க்கம் (மொழிபெயர்ப்பு நூல்)
- சாந்திக்கு மார்க்கம் (தத்துவம்)
- சிவஞானபோத உரை (சைவ சித்தாந்த உரை நூல்)
- மெய்யறிவு (அற நூல்)
வாழ்ந்த வள்ளுவனையே ஏற்காத காரணத்தால் மறக்கடிக்கப் படுகிறாரோ? இல்லை மழுங்கிப் போகத் தொடங்கிவிட்டானோ தமிழன்..........
(கடவுள் வாழ்த்தில் தொடங்கி முதல் நான்கு அதிகாரங்களை வள்ளுவர் எழுதியிருக்க வாய்ப்பில்லை. இது ஏதோ இடைச் செருகல் என்று முதன்முதலில் சொன்னவர் வ.உ.சி. )