Tuesday, March 05, 2019

“பொன் நரகம்”





நகரத்தினை ஒட்டிய அந்தப் பகுதியில், அப்போது தான், புதிதாய் குடியேறியிருந்தேன்.   பெருநகரத்தின் முக்கிய வழித்தடத்திலிருந்து சில நூறு மீட்டர்களே தள்ளி இருந்தாலும், நகரத்திற்கும் தனக்கும், ஒரு சம்பந்தமும் இல்லாதது போலவே அது இருக்கிறது.

பெரிய, பெரிய வீடுகள். ஒவ்வொன்றும்,  கோடிகளை விழுங்கியிருக்கும். அசர வைக்கும் கட்டிடங்கள், சுருக்கி எழுதப்பட்ட அரண்மனைகள். மக்கள் வசிக்கிறார்களா இல்லையா என்பதே தெரியாத, பண்டிகை நாட்களுக்கும், சாதாரண நாட்களுக்கும்,  எந்த ஒரு பெரிய வேறுபாடும் இல்லாத, வாகனங்களின் இரைச்சல், பந்து விளையாடும் அல்லது கூட்டமாய் சைக்கிள் ஓட்டும் குழந்தைகளின் சத்தம், பள்ளி, கல்லூரிப் பேருந்துகளின் பெருமூச்சுகள், இப்படி  எதுவுமே இல்லாது,  காற்றடித்தால் மட்டுமே விழித்தெழுந்து, இலை உழுப்பும், தூங்குமூஞ்சி மரங்களோடு, ஆழ்ந்த அமைதியை உள்ளடக்கிய,  புழுதியில்லாத, பெருந்தெருக்கள்..

எப்போதாவது ஓரிருவர் நிற்கும், ஒரு மளிகைக் கடை, சத்தமே இல்லாமல் ஆனால் ஒரு நாளின் எல்லா நேரங்களிலும் திறந்திருக்கும்  ஒரு தையற்கடை.  60தைக் கடந்த ஒரு தையற்காரர். அவ்வப்போது பெரும் இரும்புக் கதவுகளுக்குப் பின்னிருந்து வெளிப்பட்டு, மீண்டும் உள்ளே புகுந்து கொள்ளும்  பெரிய பெரிய கார்கள்.

குடியிருப்பின் நடுவில் இருக்கும் செல்வ விநாயகர் கூட ஒரு ஒழுங்கில் தான் அவர்களோடு குடியிருந்தார். சரியாக காலை, மாலை இரு நேரங்களிலும் 6.30 மணிக்கு அடக்கமாய் மணியடிக்கும். யாராவது ஓரிருவர் நின்று கொண்டிருப்பார்கள். அமைதியாய், தீபாரதனையையும், நைவேத்தியத்தையும் ஏற்றுக் கொண்டு, அருள்பாலித்து வந்த அந்த விநாயகருக்கும் அந்தப் பகுதி மக்களுக்குமான  உறவுகூட வித்தியாசமாக இருந்தது.

அன்று ஏனோ, நான்கு மணிக்கே விழித்துவிட்டேன்.  எப்பொழுதும் உறங்கியே கிடக்கும் தெரு பரபரப்பாய் இருந்தது. ஆங்காங்கே,  தண்ணீர் ஏற்றும் மோட்டார்களின் சத்தம், வாசல், கிறீச்சிடும் கதவுகள், வாசல் தெளிக்கும் சத்தம், ஆனால் இவையெல்லாம் கூட, ஒரு நிதாமான அமைதியுடன். கிட்டத்தட்ட எல்லா விட்டு வாசல்களிலும், ஸ்வெட்டர் போட்டுக் கொண்டு, காதிற்கு மப்ளரோ, குல்லாயோ, துண்டோ கட்டிக் கொண்டு நிதானமாய், தன் வீட்டு வாசலில் விழுந்து கிடக்கும் இலைதழைகளை நளினமாய் கூட்டி, பக்கத்து வீட்டுக்கும் தன் வீட்டுக்கும் இடையிலான புள்ளியில் சரியாக நிறுத்துவதுமாய், வாசல் தெளிப்பதுமாய், குறுக்கும் நெடுக்குமாய் நான்கு கோடுகளை கோலமாய் போட்டு விட்டு, வாசலில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதுமாய், பெரும் உயிர்ப்போடு இருந்தது. 

அதே போல, ஸ்வெட்டர் குல்லாயோடு, ரகசியமாய் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டு, அந்தத் தெருவின் இந்த முனையில் இருந்து, அந்த முனை வரை, மென்மையாய் நடைப்பயிற்சி செய்யும் ஒரு  கூட்டம்.

ஆனால், காலை ஆறரை மணிக்கு தெருவில் ஒருவரும் இல்லை.  ஒட்டுமொத்தமாய் எங்கொ போய் மறைந்திருந்தனர். தொடர்ச்சியாக ஒருவாரம் கவனித்தும் பார்த்துவிட்டேன்.  ஒரு மாற்றமும் இல்லை. 

இது என்ன ஆச்சரியம், பகலெங்கும் உறங்கியும் ஓய்வெடுத்தும், பின்னிரவில் விழித்து, இரவு முழுவதும் உயிர்ப்போடு திரியும், nocturnal life வகையை சார்ந்தவர்களோ? இன்னொன்றையும் கவனித்தேன், அங்கே இருப்பவர்கள் அனைவரும் 60 வயதைக் கடந்தவர்கள்.

அவ்வப்போது, காய்கறிக்காரர், பழைய இரும்பு, பழைய பேப்பர் வியாபாரிகளின் சத்தம் மட்டும் கேட்கும். ஆனால் யாரும் அவர்களை சட்டை செய்ததுபோலவே இருக்காது.  யாருமற்ற வேளையில் பகற் பொழுதில், இருப்பைக் காட்டவோ, பயத்தைப் போக்கிக் கொள்ளவோ கரையும் காகங்கள் போலவே, அவர்களும் கடந்து போவதாக, நான் நினைத்துக் கொள்வேன்.

அன்று வழக்கத்திற்கு மாறாக, எதிர் வீட்டு வாசலில் ஒரு வயதானவர் நின்று, அங்கிருந்த ஒரு ஆக்டிவா வண்டியை உற்றுப் பார்ப்பதும், பின்னர், தெருவைப் பார்ப்பதுமாக இருந்தார்.  ஏதோ உதவி எதிர்பார்ப்பவர் போல இருந்தார்.  நான் அவரைக் கவனிப்பதைப் பார்த்தவுடன் லேசாக சிரித்துத் தலையை அசைத்தார்.

ஏன் சார்? எதும் பிரச்சனையா?

இல்லை, இந்த வண்டி பங்க்சர் ஆயிடுச்சு. நகத்த முடியல, கொஞ்சம் ஓரமாய் தள்ளி நிறுத்தனும்….என்றபடியே,  என்னைப் பார்த்தார்.

சரிங்க சார், நீங்க நகர்ந்துக்குங்க, நான் தள்ளி வச்சிடறேன்….

அதன்பிறகு, எப்போதாவது சந்திக்கும் போது, நட்போடு ஒரு தலையசைப்பை, அவரும் நானும் தொடர்ந்தோம். அவரிடம் கேட்கவும், அறியவும் எனக்குள் நிறைய இருந்தாலும், ஏதோ ஒன்று என்னைத் தடுத்துக் கொண்டே இருந்தது.

ஒரு ஞாயிறு மாலை, நான் எப்பொழுதாவது செல்லும், அந்தச் சிறுகுன்றின் பாறை ஒன்றில் எனக்கு முன்னேமே அவர் வந்து அமர்ந்திருந்தார். வழக்கமான புன்னகை, லேசான தலையசைப்பு. வழக்கத்திற்கு மாறாய் ஏதோ பேச வருகிறார். அவருக்கு எதிரில் இருந்த பாறைத் திட்டில் நான் அமர

இங்க, நீங்க அடிக்கடி வருவீங்களா?

இல்லைங்க சார், எப்பவாவது…….

பரந்து, விரிந்த பெரு வளி. எதற்காகவும்,  எதிலும் அடைபட்டுக் கொள்ள விரும்பாத இயற்கை…….…ம்ம்ம்

நான் பதிலேதும் சொல்லவில்லை..

அடுத்த அரைமணிநேரம் நாங்கள் இருவரும், எதுவும் பேசாமல், எதிலோ கரைந்திருந்தோம்.

காத்து சிலுசிலுங்குது. புறப்படலாமா? என்றபடியே எழுந்து நின்று, என்னைப் பார்க்க, நானும் அவரைப் பின் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தேன். கீழ் இறங்கும் பாதையில், அவ்வப்போது தடுமாறி, என் தோளையோ, கையையோ,  பற்றிப் பின், மெதுவாக விடுவிப்பதுமாக வந்தார்.

சார் வாங்க, என் கையைப் பிடிச்சிக்குங்க, தரை பூரா, சரளைக் கற்களா இருக்கு…..

இல்லல்ல, வேணாம்….நானே நடந்திருவேன். எத்தனை வருசமா இங்க வர்றேன். பழகின பாதைதான்…….

அதன் பிறகு, அவர் வேகத்தைக் குறைத்துக் கொண்டு, தடுமாறாமல் கவனமாய் நடக்கத் தொடங்கிவிட்டார். இருந்தாலும் ஓரிரு இடத்தில் கால்கள் தடுமாற என் கைகளை அனிச்சையாய் பற்றிப் பின், விலக்கி….. பின், பற்றி…. கடைசியாய் சமதளத்தை அடையும் முன்பு, காலுக்குக் கீழே இருந்த கற்கள், பாரத்தில் இடம்மாற, தடுமாறிச் சரிந்தவரை தூக்கி விட்டுப் பார்க்கிறேன். காலின் ஓரத்தில் சிராய்ப்பு, லேசாய் ரத்தம் எட்டிப் பார்க்கிறது. இடுப்பில் எங்கோ அடிபட்டிருக்க வேண்டும். முகம் வலியைக் காட்டிக் கொடுக்கிறது.

சார்………ரொம்ப வலிக்குதுங்களா?

இல்லையெனும் படியான ஒரு தலையசைப்பு……...

எதுல வந்தீங்க…….

கால் டேக்ஸி……….

சார்…என் கூட வாங்க, நானும் வீட்டுக்குத்தான் போறேன்…..

அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஒரு திட்டில், தலையைக் குனிந்தபடி, அமர்ந்திருந்த  அவர் நிமிர்ந்து,

உங்களுக்கு எதுக்கு, சிரமம்……

சார் அதெல்லாம் ஒன்னுமில்ல, இருங்க என் காரை எடுத்துட்டு வர்றேன்.

கொஞ்ச நேரத்திலேயே,  அவர் ஏதோ அமைதியில்லாதது, போல தெரிந்தது. அதுவரை நாங்களிருவரும் ஏதும் பேசிக் கொள்ளவேயில்லை.

சார்…..தண்ணி குடிக்கறீங்களா? ஏதும் சிரமமா இருக்கா?

வண்டியை தெரு ஓரத்திற்கு சென்று, நிறுத்தி விட்டு, பின்னிருக்கையில்  கிடந்த பாட்டிலை எடுத்து அவரிடம் கொடுக்க, அவர் அமைதியாக கைகளில் வாங்கிப், பின் ஏதோ யோசனையில் மடியில் வைத்துக் கொண்டார்.

ஆர்வோ வாட்டர் தான் சார். இன்னைக்குப் பிடிச்சதுதான்….

தலையை அசைத்து, பாட்டிலைக் கவிழ்த்து, தண்ணீரைக் குடித்துவிட்டு,  என்னைத் திரும்பிப் பார்க்கிறார். கண்ணாடிக்குள் தெரியும் அவர் கண்களில் ஏதோ ஒரு கலக்கம்., அவரை அறியாமலே குடித்த தண்ணீர் எதுக்களித்து வெளிவர, அவர் கையை வைத்து அடைத்துக் கொண்டே, அவசரசமாய்த் திரும்பி கார் கதவை திறக்க முயல,……. மீறி டாஸ்போர்டு முழுவதும்

சாரி…சாரி…என்று தன் கர்ச்சீப்பை எடுத்து அவசரசரமாய் டாஷ்போர்டைத் துடைக்க முயற்சிக்க…

சார் ஒன்னுமில்ல. பதட்டமாகாதீங்க….நான் அப்புறம் தொடைச்சிக்கறேன்.. கொஞ்சம் சாஞ்சு உக்காருங்க என்றபடி இருக்கையை கொஞ்சம் பின் நகர்த்தி, தளர்வாக்க முயற்சிக்கையில் அவர் கண்கள் சொருக, வியர்வை பெருகி வழிகிறது.  அவசரசரமாய், சட்டைப் பையிலிருந்து ஒரு அட்டையை எடுத்து என் கைகளில் கொடுத்தபடியே இருக்கையில் சரிய, அந்த அட்டையில், ஏதோ சில பெயர்கள், கூடவே அவர்களின் செல்ஃபோன் எண்கள்.

கார் முழுதும் முதுமையின் மணம். ஏசியை அவர் பக்கமாக, முழுவதும் திருப்பி, சட்டையின் மேலிரண்டு பட்டன்களைக் கழட்டிவிட்டு, கொஞ்சம் தண்ணீரைக் கைகளில் எடுத்து  அவர் முகத்தில் தெளிக்க….சட்டென்று விழித்தவர் ஒருமுறை கண்களைச் சுழல விட்டு, பின் என்னைப் பார்த்தவருக்கு கடைசி நிமிடங்கள் நினைவிற்கு வந்து விட்டிருந்தது. 

மீண்டும் கண்களை  மூடிக்கொள்கிறார்.

திடீரென்று, என் கையில் இருந்த அந்த அட்டையை அவசரமாய் பிடுங்கி   அதையே உற்றுப் பார்த்து, கண்களை மூடிக் கொள்கிறார். அப்போது தான் கவனித்தேன், அந்த அட்டையின் மற்றொரு புறத்திலிருந்த, ”சாய்பாபா” எங்களிருவரையும்,  வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சார்……………..சார்……………

ஹாஸ்பிட்டல் போலாமா?  பக்கத்துல கே.எம்.சி.ஹெச் இருக்கு அங்க போகட்டுமா?

வேண்டாம், என்று தலையை ஆட்டியவர், கொஞ்சம் அமைதியாய் இரு. என்று எனக்கு கையைக் காட்டுகிறார்.

ஓரிரு நிமிடங்களில் விழித்து எழுந்தவர், சாரி….உங்களுக்கு சிரமம் கொடுத்திட்டேன், என்றபடியே மீண்டும் டாஷ்போர்டு ஈரத்தைத் துடைக்க ஆரம்பித்தார்

சார்….சார்…விடுங்க அப்புறமா நான் கழுவிக்கிறேன்…..நீங்க சாஞ்சு சவுகரியமா உக்கார்ந்துக்குங்க… வீட்டுக்கு பக்கத்துல வந்திட்டோம்..

அவர் வீட்டின் ஓரமாய், வண்டியை நிறுத்திவிட்டு, அவர் இருக்கைப்பகுதிக் கதவைத் திறந்து, அவர் தோளை ஒரு கையால் பற்றி, மற்றொரு கையால் அவர் கைகளைப் பற்ற, அவர் உதறிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்க்கிறார். 

இல்லையில்லை…நானே வந்திருவேன்… நீங்க கொஞ்சம் கதவை மட்டும் திறந்துவிடுங்க என்றபடி தன் வீட்டின் சாவியைக் கொடுத்தார்.

பெரிய ஹால்.  உயர்தரமான சோபாக்கள். அலங்காரங்கள். அந்த அறைமுழுவதும் பணம் பொருளாய் மாறிக் கொட்டிக் கிடந்தது. மிக நாகரீகமான உடையில், ஒரு இளம் தம்பதியினர், அருகே அழகான ஒரு பெண் குழந்தை அதன் முன்னிரண்டு பற்களை இழந்தும், வாய் திறந்து, எந்தக் கவலையுமில்லாமல், சிரித்துக் கொண்டிருக்கும் பெரிய படம்.

உட்காருங்க என்று சொல்லியபடியே,  அவர் அமர

அறைக் காற்றில் ஏதோ ஒரு சலனம், ஒரு நிமிடம் உடல் நடுங்கி, பின் தளர்வாகிறேன்.  எதிரில், மெலிந்த, வெளிர்ந்த ஒரு வயதான, பெண்மணி.

நான் எழுந்து வணக்கம் சொல்ல,  எதிரே இருந்தவர் திரும்பிப் பார்த்து,

தம்பி எதிர்த்த வீட்டில இருக்காரு.  வாக்கிங் முடிஞ்சி வரும்போது பார்த்தேன், இவர் தான் கொண்டு வந்து விட்டாரு.

நான் ஏதோ சொல்லத் துவங்க, எதிரிலிருந்தவரின் வலது கை அவசரவசரமாக, ஏதும் சொல்ல வேண்டாம் என்பதைப் போல இடவலமாய் ஆடியது.

வார்த்தைகளை விழுங்கிவிட்டுத், தலையை மட்டும் அசைக்கிறேன். காற்றுச் சலனம் மென்மையாய் சுழன்று உள்ளே நகர்ந்தது.

அவர், மெல்லிய குரலில், ஏதாவது சொன்னா அவ பயந்துக்குவா. எனக்கு ஒன்னுமில்லை. கொஞ்சம் அசிடிட்டி அவ்வளவு தான். ஒரு பேண்டோஸெக் சாப்பிட்டாப் போதும், சரியாயிரும்.

காற்றுச் சலனம் மீண்டும் வந்தபோது, ஒரு தட்டில் ஓரிரண்டு பிஸ்கட்டுகள்,  டம்ளரில் கொஞ்சம் தண்ணீர்.

காபி……என்ற ஒரு வார்த்தை, மட்டுமே எனக்குக் கேட்டது.

தண்ணீரை  கொஞ்சம் குடித்துவிட்டு, இல்லைங்கம்மா, நான் புறப்படறேன். இன்னொரு நாள் வர்றேன்.

இருவரும் தலையசைத்து விடை கொடுக்க, அங்கிருந்து வெளியேறி நடக்கிறேன்.

ஓரிரண்டு வாரங்களுக்குப் பிறகு, அதே மலையடிவாரம், அதே பாறைத் திட்டு, நாங்களிருவரும்……………. எங்களுக்கிடையே பேரமைதி.

திடீரென்று நீங்க என்ன செய்யறீங்க?

சார் நான் நகராட்சிப் பள்ளியில தமிழாசிரியர்.  அப்பா அம்மா நசியனூர் பக்கத்தில கிராமத்தில இருக்காங்க. மனைவி, இரண்டு குழந்தைகள். இந்தப் பகுதிக்கு இப்பத்தான் குடிவந்திருக்கேன்.

அவர் கண்கள் மிளிர,  நாங்களும், டீச்சர்ஸ்தான். கவர்ன்மெண்ட் ஹை ஸ்கூல்ல மேத்ஸ் சொல்லிக் கொடுத்தேன்.  வீட்டுல அவங்க, பஞ்சாயத்து ஸ்கூல்ல சயின்ஸ் டீச்சர்.  பையன், எம்டெக் முடிச்சு, அமெரிக்கா போயி 10 வருசமாச்சு. 

திடிரென்று உற்சாகமாகி, உங்க வீட்டுக்கெதிரா, இருக்காரே ஸ்டீபன், அவரும் டீச்சர்தான். நம்ம தெருவுல இருக்கற பெரும்பாலானவங்க டீச்சர்ஸ், கவர்ன்மெண்ட் எம்ப்ளாயீஸ் தான். பாலகோபால் சயின்ஸ், ஜெகன்நாதன் காமர்ஸ், பி டி ஜேம்ஸ், எல்லாருமே டீச்சர்ஸ்தான்.   

உங்களுக்கு ஒன்னு தெரியுமா? நம்ம பழைய கலெக்டர் சுந்தரேசன் இருந்தாரே அவர் என்னோட ஸ்டூடண்ட்.

கத்துக் குடுக்கறதுங்கறது ஒரு கலை.  எல்லாருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கறதில்லை.  அவர் குரல் அவரறியாமல் உயர்கிறது.  அப்படி ஒரு பெருமிதம் அந்தக் குரலில். ஏதேதோ, பேசிக் கொண்டே இருக்கிறார்.  தன்னுடைய கதையையும், தான், கற்றுத்தந்த மாணவர்களில், பலர், இன்று பெரிய மனிதர்களாக இருப்பதை பற்றியும் சொல்லிக் கிட்டே வந்தவர், இடையில் ஒரு நிமிடம் பேச்சை நிறுத்தி,

கட்டுத் தரையைக் கூட்டி, சாணி வழிச்சிப் போட்டுட்டு, கிழிஞ்சு, பட்டன் இல்லாத டவுசரை அரணாக் கயிறுல சுருட்டி விட்டுகிட்டு, 3 மைல் நடந்து போயி, சத்துணவுன்னு போட்ட கோதுமைக் கஞ்சியைக் குடிச்சுதான் படிச்சு வளர்ந்தோம்.   படிச்சி, வேலை வாங்கி, கலியாணம் கட்டி, குழந்தைகளைப் பெத்து வளர்த்தி,  அவங்களைப் படிக்க வச்சு, அவங்களுக்கு கல்யாணம் செஞ்சு வச்சு, எவ்வளவோ சிரமப்பட்டிட்டோம். அதனாலதான், இன்னைக்கு நல்ல நிலைமைல,   நிம்மதியா வாழறோம், என்று சொல்லியபடியே தன் கண்ணாடியைக் கழற்றி, கண்களைத் துடைத்துக் கொண்டு, என்னை நிமிர்ந்து பார்த்தவரிடம்,  கேட்க எனக்கு ஒரு கேள்வி  இருந்தது.

நான், என்ன கேட்கப் போகிறேன், என்பது அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்.   ஒரு நிமிடம் என்னை உற்றுப் பார்த்துவிட்டு,

ஒருமுறை, காற்றை ஆழமாய் உள்இழுத்து, வெளியே விட்டு, அமைதியாய், வேண்டாம் என்பதாய் தன் வலது கையை இட வலமாக அசைக்கிறார்.  அந்த நாளுக்குப் பிறகு,  நாங்களிருவரும் பேசிக் கொள்வதேயில்லை.




ருசி……………

சொந்தங்களோடும் நட்புகளோடும் ஆண்டாண்டாய் சொந்த ஊரில், வாழ்பவனின் சிக்கல் இவர்களுக்கு எங்கே புரியப் போகிறது. ஒருவருடத்திற்கு சுமாராய் 50 முகூர்த்த நாட்கள் என்று வைத்துக் கொண்டால், குறைந்த பட்சம் 200 அழைப்புகள். சராசரியாக ஒரு முகூர்த்ததிற்கு முன்று அல்லது நான்கு அழைப்புகள். தூரத்தில் மண்டபம் இருந்தால், முதலில் அந்த இடத்திற்குச் செல்வதும், அப்படியே குறைத்து, குறைத்து, வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் திருமண மண்டபத்திற்கு கடைசியாய்ச் செல்வது. ஒருவேளை ஏதாவது ஒரு காரணத்தால், நேரமாகிப் போனாலும், காலையில் முதல் வேலையாக இரவு விட்டுப் போன இடத்திற்கு சென்று வந்துவிடுவது இப்படியே ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை.


பலநேரங்களில் சோம்பேறித்தனத்தால் திருமணங்களுக்குச் செல்லாமல் விட்டுவிட்டு, பின்னாளில் அவர்களைச் சந்திக்கும் போது ஊரில் இல்லை அவசரமாய் வெளியூர் பயணம் என்று பொய் சொல்வதற்கும் நான் தயங்கியதில்லை.


நேற்றும் அப்படித்தான். உள்ளூர் திருமணங்களைக் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து பவானி சென்றாகி விட்டது. கூடவே பயண வழி பேச்சுத் துணைக்காய் பதின்ம வயது மகனும். 


இப்படித்தான் ஒரு முறை ஒரு திருமணவீட்டிற்கு சென்று வீடு திரும்பும்போது, 


சமையல் சூப்பர்ப்பா. வயித்துல இடமே இல்லை. ரொம்ப சாப்பிட்டேன். ஒன்னு ரெண்டு ஐட்டத்தைச் டேஸ்டு கூட பார்க்கலைப்பா.


இல்ல கண்ணு, சுவைங்கறது இட்லிலையோ, தோசைலையோ ருமாலி ரொட்டியிலையோ இல்லை. அதுக்கு குடுக்கற குழம்புலதான் இருக்குது. குழம்பு மேல இருக்க ருசி ஆசையில நாம் நிறைய சாப்பிட்டுடறோம். இனிமே, கொஞ்சமா அதை எடுத்துகிட்டு, நிறைய குழம்போ, சாம்பாரோ தொட்டு சாப்பிட்டு பழகிட்டம்னா, அந்த ருசி மீதான ஆசை தீர்ந்துடும். வயிறும் பத்திரமா இருக்கும்.


ஆமாப்பா இனி அப்படித்தான் சாப்பிடனும்….


இப்படி அவ்வப்போது என் அனுபவங்களையும், பல நேரங்களில் பட்ட அவமானங்களையும், நாட்பட்டும் தீராத வலிகளையும் கூட சொல்லித் தீர்த்துக் கொள்வது வழக்கமாகிவிட்டது.


அந்தத் திருமணவீட்டிற்குள் நுழைந்து, மணமகனான நண்பனோடும் நட்புகளோடு அரட்டையும், படங்களும் கூடவே செல்ஃபியும் எடுத்து முடிந்தாகிவிட்டது.. இன்னும் இரு திருமண நிகழ்ச்சிக்களுக்கும், போக வேண்டிருக்கிறது. மணி 7.40. எப்படியும் 9 மணிக்குள் மற்ற இரண்டு நிகழ்வுகளையும் முடித்து கடைசியாய் செல்லும் திருமணவீட்டிலோ, அல்லது எங்கே அதிகமாய் பசி உணர்வை, மூக்கு மூளைக்கு அனுப்பி வைக்கிறதோ அங்கு, அல்லது நிம்மதியாய் வீட்டிற்குச் சென்று மதிய வைத்த சாம்பாரில் இரண்டு இட்லியோடு இரவு உணவை முடித்தால், பெருந்துயரைக் கடந்த உணர்வில் அன்றைய நாள் முடிவடையும். 


உண்பதென்னவோ இரண்டு இட்டிலிதான். அதுக்கே மூனு வேளையும், மெட்ஃபார்மின் 500 மிலி கிராமைத் தொட்டுக்கலைன்னா சீக்கிரம் சொர்க்கத்துக்கு போக வேண்டியிருக்கும் என்று உறுதியாய் சொல்லியிருக்கின்றார் குடும்ப மருத்துவர். 


அப்பா பசிக்குது, இந்த கலியாண வீட்டிலேயே சாப்பிட்டறலாம்..
ரொம்ப பசிக்குதா? அடுத்த கலியாண வீட்டுல சாப்பிட்டுக்கலாமே. மணி 8 கூட ஆகலை.


இல்லைப்பா, பசிக்குது, இங்கயே சாப்பிடலாம்…


ம்ம்ம்…சரி


ஒரு சிறிய காத்திருப்பு. இப்போதெல்லாம் திருமண வீடுகளில் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவர் பின்னாலே போய் நின்று கொண்டு, சீக்கிரம் சாப்புட்டு இடத்தைக் காலி செய்யுடா என்று சொல்லாமல் சொல்வதும், சாப்பிட்ட எச்சில் இலையை எடுப்பதற்கு முன்பே அந்த இடத்தில் சென்று அமர்ந்து கொள்வதும் கொஞ்சம் கூட அருவருப்பைக் கொடுப்பதில்லை. .


பந்தியிலே அனைத்தையும் பரிமாறிவிட்டு, சமைத்த அனைத்தும், எல்லா இலைகளிலும் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, போததற்கு வரிசைக்கு இரண்டு பேர் நின்று கொண்டு தேவைகளைக் கேட்டு, பரிமாறும் பந்தி கவனிப்பு நாட்களும் 

உண்ணீர் உண்ணீர் என்று ஊட்டாதார் தம் மணையில் உண்ணாமை கோடி பெறும் என்ற அவ்வையின் வரிகளும் இப்பொழுதா நினைவுக்கு வரவேண்டும். நல்ல வேளை, அப்படி எந்த சிக்கல்கள் எல்லாம் இங்கில்லை
நல்ல சுவையான உணவு. 10ரூ உளுந்து வடைக்கே நான்கு கப் சாம்பார் வாங்கி, வடையை அதில் கரைத்துக் குடிக்கும் எனக்கு, அது நல்லதொரு விருந்துதான்.


சாப்பிடும் போது, பேசக்கூடாது. கவனம் தட்டுல இருக்கற, சோத்துல இருக்கணும். அப்பத்தான் ருசி தெரியும். பராக்குப் பாத்துகிட்டு, புத்தகம் படிச்சிகிட்டு, சோறு திண்ணா ருசி எப்படிப்பா தெரியும் என்பார் என் தாத்தா. மீதமிருக்கும் ஒரு ரொட்டித் துண்டை, ஒட்டு மொத்த குடும்பமே சாப்பிடவேண்டிய சூழலிலும், சாப்பாட்டு மேசையைத் துடைத்து, அதன் மீது ஒரு பழைய துணியை அழகாய் விரித்து வைத்துக், காலியாய் கிடக்கும் ஒரு கண்ணாடி சீசாவின் மேற்புறத்தில், வாசலில் இருக்கும் ஏதாவது ஒரு பூவைக் கொஞ்சம் காம்பு, இலை, தண்டோடு பறித்து வைத்து, அழகாக்கி, குளித்து, கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு, முறையாய் கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு, இருக்கும் அரை ரொட்டித் துண்டை கத்தியாளும் முற்கரண்டியாலும் வெட்டி உண்பது ஆங்கிலேயர்களின் பாணி என்று சொல்லுவார்கள். இவரும் போன பிறவியில் அப்படிப் பிறந்திருப்பாரோ என்னவோ?


ஒரு பள்ளி ஆசிரியரான அவர், பள்ளியிலிருந்து வந்து, ஒரு சொம்பு தண்ணியைக் குடித்துவிட்டு, மூன்று நான்கு வீடுகளுக்கு ட்யூஷன் சொல்லிக் கொடுத்துவிட்டு, வீட்டுக்கு வந்தவுடன், குளித்து, துவைத்த வேட்டியும், பழைய கிழிந்த வேட்டியில் தைக்கப்பட்ட கை வைத்த பனியனையும் போட்டுக் கொண்டு, திருநீறு அணிந்து, சாமி கும்பிட்டு, சாப்பிட உட்காரும் போது, நாங்கள் அனைவரும் அவருக்காக காத்திருப்போம். ஒட்டு மொத்த குடும்பமும் ஒன்றாய் அமர்ந்து உண்ணும் காலத்தில், கரண்டி, குழம்புக் குண்டாவில் உராய்வது கூட அவருக்கு பிடிக்காது. கவனம் சிதறுகிறது என்பார். , சிறு சத்தம் கூட வராது. குண்டாவுக்கு வலிக்காத அளவில் தான் கரண்டிகள் பயன்படுத்தப்படும். தரையில் ஒரு பொருளை வைக்கும் போதும், எடுக்கும் போதும் கூட சத்தமில்லாமல் தான் நடக்க வேண்டும். தின்றதென்னவோ குச்சிக் கிழங்கும், நொய்யரிசிக் கஞ்சியும்தான்.


என் அப்பா இன்னும் மோசம். இலையிலிருந்து கடைசி வாய்ச் சோற்றை எடுக்கும் போது, சரியாக அவரிலையில் புதிய சோறு இருக்க வேண்டும். இலையப் பார்த்து சோறு போடாம என்ன கழட்டற வேலை உனக்கு, என்று இலையோடு சேர்த்து தூக்கி எறிவார். இலையையும் அவர் முகத்தையும் கைகளையும் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு முறை கையை வேண்டாம் என்று அசைப்பார். ஏதாவது வேண்டுமென்றால், ஒரு முறை நிமிர்ந்து பார்ப்பார். எல்லாமே சைகைகளிள் தான். உடனே அவருக்கு என்ன வேண்டும் என்பதை இலையைப் பார்த்து, முடிவு செய்து அதை அளவாய் வைக்க வேண்டும். ம்ம்ம்… என்று சத்தம் நீளமாக வந்தால் இன்னும் கொஞ்சம் வைக்க வேண்டும். ம்… என்ற சத்தம் அதன் அளவில் அரை மாத்திரை குறைந்தால் போதும் என்று பொருள். 


ம்ம்ம்ம்…அதெல்லாம் ஒரு கனாக் காலம். 


பந்தியிலே அமர்ந்தவுடன் ஒவ்வொன்றாய் வந்தது. வழக்கம் போல தலை குனிந்தபடி, சாம்பாரில் நசுக்கி ஊற வைத்த தோசைத் துண்டை எடுத்து வாயில் போட்டு, அதன் சுவையை உணரத் தொடங்கும் முன் யாரோ நம்மைப் பார்ப்பது போன்ற உணர்வு. நிமிர்ந்து பார்த்தால் எதிர் வரிசையில் யாரும் தெரிந்தவர்கள் இல்லை. கொஞ்ச நேரத்தில் மீண்டும் அதே உணர்வு. நிமிர்ந்து பார்த்தால், அவரவர் வேலையில் அவரவர் கவனம். மீண்டும் ஒருமுறை கூர்ந்து ஒவ்வொருவராகப் பார்க்கிறேன். 


எதிரில் ஒரு பெரியவர். 65 வயதிருக்கலாம். துவைத்து ஆனால் தேய்க்கப் படாத பழைய வேட்டி சட்டை. மழிக்கபடாமல் சில வாரங்கள் ஆன தாடி, ஒரு சாதாரண கிரமாத்து நெசவாளி போன்ற தோற்றம். மென்மையான உடல்வாகு, ஆம் அந்த திருமண மண்டபம் இருந்த பகுதி, நெசவுத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. 


அவர் பார்வை மட்டும் ஏனோ அங்கும் இங்கும் அலைந்த படியே. இலையைப் பார்ப்பதும், ஓரு துண்டு தோசையைப் பிய்த்து உண்ணாமல் கைகளிலேயே வைத்துக் கொள்வதும், பின் நிமிர்ந்து எதிரிலிருப்பவர்களை ஒருமுறை பார்ப்பதும், உணவு பரிமாறுபவர் எங்கிருக்கிறார் என்று பார்ப்பதும், பிறகு மீண்டும் அதே துண்டு தோசை, எதிரிலிருப்பவர்கள், பரிமாறுபவர், இப்படி ஓரிரு முறைகள் தொடர்ந்து.


ஆர்வத்தில் கவனிக்க ஆரம்பித்தேன். அவர் பிச்சைக் காரரைப் போலவோ, திருட வந்தவர் போலவோ இல்லை. இலையில் ஒரு தோசையும், கொஞ்சம் சேமியாவும் இருந்தது. சாம்பாரும் கூட இருந்தது. ஆனால் அவர் முகம் பரிமாறுபவரைத் தேடியது, பின் நான் கவனிப்பதையும் பார்த்தார். நான் தலைகுனிந்து கொள்ள, அவரும் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டார். கொஞ்ச நேரத்துக்கு இதே விளையாட்டு.


அப்பா…

ம்ம்ம்….

அப்பா…..

ம்ம்ம்ம்…பேசாம இலையப் பாத்து சாப்பிடு….

அப்பா….அங்க பாருங்க

சரி...ஒழுங்கா இலையப் பார்த்து சாப்பிடு

இல்லப்பா….

தெரியும்….நீ அமைதியா இரு…..

கொஞ்ச நேர அமைதிக்குப்பின்….

அப்பா…அப்பா…அங்க பாருங்க……...தாங்க முடியாத ஆச்சரியம் அவனுக்கு…

கண்ணு அமைதியா சாப்பிடு…

அவரு ஏன்பா அப்படி செய்யறாரு

அப்புறமா சொல்லறேன்…நீ இலையப் பார்த்து சாப்பிடு


உணவு பரிமாறுபவர் சப்பாத்தி கொண்டு வருகிறார். அந்தப் பெரியவர் ஒன்றை வைத்ததும் இன்னொன்று வைக்கச் சொல்லுகிறார். பரிமாறுபவர் நகர்ந்தவுடன் என்னைப் பார்க்கிறார். நான் தலைகுனிந்து பார்க்காதவாறு இருக்க சுற்றும் முற்றும் பார்க்கிறார். யாரும் கவனிக்க வில்லை.


அவர் கண்களில் தயக்கம், கூச்சம், அவலத்தில் கொதிக்கும் மனம், அவமானப்பட்டுவிடுவோமோ, என்ற அச்சம். அவர் கண்கள் ஏனோ ஒளிர்வது போல எனக்குத் தோன்றியது. வலது கையில் இரண்டு சப்பாத்திகளையும் சுருட்டி எடுத்து, மேசைக்கடியில் இருக்கும் இடது கையில், உள்ளிருப்பது வெளியில் தெரியும்படியான, ஒரு பாலித்தின் பை. அதில் அந்த சப்பாத்திகளைப் போட்டுவிட்டு, மீண்டும் தோசை ஒரு துண்டைப் பிய்த்துக் கொண்டு, என்னைப் பார்க்கிறார், எதிரிலிருப்பவர்கள் அனைவரையும் பார்க்கிறார். யாரும் கவனிக்காததால், மீண்டும் பரிமாறுபவரைக் கண்கள் தேடுகின்றன.. 


கடவுளே, எதற்காக இப்படி ஒரு காட்சியை என் கண் முன் காட்டுகிறாய். உணவு உள்ளே செல்ல மறுக்கிறது. கண்கள் ஏனோ கலங்குகிறது. அமைதியாய் சாப்பிடுங்கள். போகும் போது, நிறைய கட்டித் தருகிறேன், என்று சொல்ல ஆசை. நன்றாய் சாப்பிடுங்கள், இனி நான் உங்களைப் பார்க்க மாட்டேன். வேண்டியதை பைகளில் நிரப்பிக் கொள்ளுங்கள் என்று மட்டுமே, எனக்குள்ளேயே சொல்லத்தான் முடிந்தது.


ஆனால் ஒன்று நிச்சயம், மழைக்காகிதப் பையில் அவர் சேமித்து வைத்தது, கண்டிப்பாக அவருடைய நாளைய தேவைக்காக இருக்காது என்றுதான் நினைக்கின்றேன். ஒருவகையில் இவர்கள் தேவனுக்கு நெருக்கமானவர்களாகத் தெரிகிறார்கள். இவர்களின் தேவைகள் எப்பொழுதும் சேர்த்து வைக்க முடியாதவை. இதைத்தான் தேவனும் மத்தேயு வழியாகச் சொல்லியிருப்பாரோ


ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையதினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.’ - மத்தேயு 6:34


இவருக்கு இணையான ஒருவர் இவர் வருகைக்காக குளித்து முடித்து, கந்தல் சீலையை துவைத்துக் கட்டிக் கொண்டு திருநீறு பூசிக் கொண்டு தட்டோடு காத்துக் கொண்டிருக்க வேண்டும். இலையை அப்படியே மூடி வைத்து விட்டு, எழுந்து வெளியே காத்திருக்கின்றேன். அவரைப் பின் தொடர்ந்து சென்று ஏதாவது உதவ முடியுமா என்று பார்ப்பதற்காக. 


அவரைக் காணவில்லை. வெளியே வந்த மகன் கேட்கிறான், அந்த தாத்தா, வெறும் இட்டிலி தோசை, சப்பாத்தி எடுத்துகிட்டுப் போறரு. கொழம்போ, சாம்பாரோ எடுத்துகிட்டுப் போகலையே….


”அவருக்கு எப்படிப்பா ருசி மீதான ஆசை தீரும்”


இல்ல கண்ணு, .அவருக்கு ஆசை, உசுருமேல. அதற்கு ருசி அவசியமில்லை
அவனுக்கு புரிந்திருக்காதுதான். . அவன், குச்சிக் கிழங்கும் நொய்யரிசிக் கஞ்சியும் குடித்து வளர்ந்தவனில்லையே……

சொல்லிய பாட்டின், பொருளுணர்ந்து ……

அவள் எனக்கு அக்கையா, அம்மையா, என்றெல்லாம் தெரியாது. ஆனால் நினைவு தெரிந்த நாளிலிருந்து, எல்லாவற்றையும், நான் அவளிடம் மட்டுமே பகிர்ந்து கொண்டிருக்கின்றேன். நடுங்கும் குளிரில், குளித்த ஈரத்தோடு, அவளிடம் மட்டுமே ”எங்கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க” என்று பிதற்றியிருக்கின்றேன்..


”அவளிடம் நான், கேட்டதெல்லாம் கிடைத்திருக்கிருக்கிறது. அவள்தான் கொடுத்தாளா என்றெல்லாம் தெரியாது. நான் கேட்பேன். அது கிடைத்துவிடும். அதனால் சொல்லுகிறேன், அவள் கேட்டதையெல்லாம் தருபவள்.. ஆனால் நான் பலமுறை தேவையில்லாதையும் அவளிடம் கேட்டிருக்கின்றேன். அதையும் அவள் தந்தே இருக்கின்றாள்.


. வேண்டி, நீ யாது அருள் செய்தாய்,
யானும், அதுவே வேண்டின் அல்லால்,
வேண்டும் பரிசு ஒன்று உண்டு எனில்,
அதுவும், உன் தன் விருப்பு அன்றே 

அப்படி ஒரு நம்பிக்கை எனக்கு, அவள் மீது

.
அன்று ஒரு நாள், பள்ளியிலிருந்து திரும்பும் போது, அடிவயிற்றில் ஒரு பெருவலி. கால்கள் துவள்கின்றன. தொடைச் சதைகள் கழன்று, உதிர்ந்து போவது போல ஒரு நடுக்கம். ஒருபக்கம் வித்தியாசமான மன எழுச்சி, மற்றொரு பக்கம் வலியின் உக்கிரம். கால்கள் நடுங்க, கண்ணீர் எந்த நிமிடமும் வெளிவரத் தயாரான நிலையில், கூட அவளைத்தான் தேடினேன். உடன் வந்தவர்களைத் தவிர்த்து, மர நிழலில் ஒரு நிமிடம் கண்களை மூடி, “ஆத்தாளை எங்கள் அபிராம வள்ளியை”….


இதோ வந்துவிட்டாள். மென்மையாய்ச் சிரித்தபடியே, மையிட்ட தன் பெரிய கண்களை விரித்து, ஒரு நொடி மூடி, தலையை ஒரு புறமாய் வெட்டிச் சாய்த்து மீண்டும் சிரிக்கின்றாள். அப்புறமென்ன, அவள் தான் கூடவே வருகிறாளே……..
பல ஆண்டுகளுக்குப் பிறகொரு நாள், இப்படித்தான், கை, கால்கள் நடுங்க, பதட்டமும், படபடப்புமாக, பலபேர் என்னையே உற்றுப் பார்க்க, ”கண்ணா நீ பேகனே” பாடச் சொன்னபோது, புன்னகையோடு மறுத்து, “ஆத்தாளை எங்கள் அபிராம வள்ளியை” என்று பாடிக் கொண்டிருந்த போது, அவளே வந்து விட்டாள். அதேபோல், மையிட்ட தன் பெரிய கண்களை மலர்த்தி, ஒரு நொடி மூடி, தலையை, ஒருபுறமாய்ச் சாய்த்து, மீண்டும் சிரிக்கின்றாள்.


சரி இவள் தான் இருக்கிறாளே என்ற நம்பிக்கையில், கழுத்தையும் நீட்டி, பிள்ளையையும் பெற்றாகிவிட்டது. இந்தக் கொஞ்ச காலத்தில் அவளை எப்படியோ மறந்திருந்தேன். புதிது புதிதாய்ப் பிரச்சனைகள் வர, மீண்டும் அவள் நினைவிற்கு வருகின்றாள். வெயிலில் தானே நிழல் தேவைப்படுகிறது. இப்படி ஒரு பயித்தியக்காரனை என் தலையில் கட்டி விட்டவளை சும்மா விடக்கூடாது. எவ்வளவுதூரம் நம்பிக்கையோடு இருந்தேன்.
சரி அவள் மட்டும் என்ன செய்வாள், தேடித்திரிந்து, விரதமிருந்து, தவம் செய்து, ஒரு பித்தனையல்லவா மணந்திருக்கிறாள். அவனுக்காகவே வாழ்ந்தும் இருக்கிறாள்.. அவனோடு, சண்டையிட்டுச் சலித்துமிருக்கிறாள்


ஆவேசமாய் கிளம்பி வந்து சேர்ந்த போது, ஆத்தாளை எங்கள் அபிராம வள்ளியைப் என்று பாட மனது வரவில்லை. கண்ணீர் பொங்க, ஆத்திரத்தோடு, திட்டித் தீர்க்க, இதோ, மீண்டும் அவள் வந்துவிட்டாள். அதே கண், கழுத்து அசைவுகள்…..அதே சிரிப்பு. ஆத்திரமாய் வருகின்றது எனக்கு. எதிரே இருந்த தூணில் சாய்ந்து அமர்ந்து, கொண்டுக் கேலியாய்ச் சிரித்தபடியே…

ஏன் மகளே, என்னைப் பற்றி இப்பொழுதெல்லாம் பாடுவதில்லை?….”

பாடு மகளே………..அந்தப் பட்டனின் பாட்டை ஒருமுறை பாடு 


என்ன செய்வது இவளை? எப்படியான துயரத்தில் இருக்கின்றேன், இவள், தன்னைப் புகழ்ந்து பாடச் சொல்லி, ஏகாந்தமாகக் கேட்டு ரசிக்க நினைக்கின்றாள். பொருமையிழந்து, விம்மி, வெடித்து, அழத் துவங்குகிறேன். கலைந்த தலையோடும், வியர்வையில் நனைந்த உடையோடும், கண்ணீரில் கறைந்த மையோடும், மொத்தமாய் உடைந்து வந்திருக்கிறேன். இவள் என்னைப் பாடச் சொல்லுகிறாள்…….


ஆத்தாளை! எங்கள் அபிராம வள்ளியை ! அண்டம் எல்லாம்

ம்ம்ம்… அருமை….அருமை..

பூத்தாளை! மாதுளம் பூ நிறத்தாளை! புவி அடங்கக் காத்தாளை

ம்ம்ம்…..சபாஷ்

வரும் கோபத்தில் என்னசெய்வதென்றே தெரியவில்லை. முழு சக்தியையும் திரட்டிக் கொண்டு, கத்தத் துவங்கிறேன்….

அங்குச பாசம் குசுமம் கரும்பும், அங்கை
சேர்த்தாளை! 


நிறுத்து………நிறுத்து…….மீண்டும் ஒருமுறை அந்த வரிகளைப் பாடேன்……


மனம் முழுக்க வேதனையும், வலியும் நிறைந்து வழிகிறது. என்னை நானே சுட்டுப் பொசுக்கிக் கொண்டாலொழிய இது தீராது. எல்லாவற்றிலும் குற்றம் கண்டு பிடிக்கும் கணவன், என் ஏழ்மையை, குத்திக் காட்டி, வார்த்தைகளால் கிழிக்கும் அவன் தாய், போதாதற்கு அவ்வப்போது என் உடல் போதாமை……. நிரந்தர வறுமை…….எத்தனை நாள் தான் இந்த நரகத்தில் வாழ்வது?
உன்னையே நம்பிய என்னை ஏன் இப்படிப் பாடாய் படுத்துகிறாய்? என்று ஒரு வார்த்தை கேட்டுவிட்டு என்னை நானே கொன்றொழித்துக் கொள்ள நினைத்து இங்கே வந்தாள், இவள்……


ம்ம்ம்…பாடு மகளே………..

அங்குச பாசம் குசுமம் கரும்பும் , அங்கை
சேர்த்தாளை

அசட்டுப் பெண்ணே…. என்றாவது இதன் பொருள் உணர்ந்து பாடியிருக்கிறாயா? 


போடிப் பயித்தியக்காரி…… என்ன நிலையில் நான் இருக்கின்றேன். இவளைப் புகழ்ந்து பாட வேண்டுமாம், கூடவே பொருளும் சொல்ல வேண்டுமாம்…..குரல்வளையை கடித்துத் துப்ப வேண்டுமென்று தோன்றுகிறதே. ஒன்றும் சொல்லாமல் அவளையே உற்றுப் பார்க்கிறேன்.
எட்டி என்னை அருகே இழுத்து, தன் தோளில் சாய்த்துக் கொண்டு, ஒரு கையால் என்னை அணைத்துக் கொள்கிறாள். அதற்காகவே காத்திருந்தது போல நானும், அவளுள் ஒடுங்கிக் கறைய விரும்பி, இன்னும், இன்னும், நெருக்கமாய் இறுக்கிக் கொள்கிறேன். 


என்னை, கொஞ்சம் விளக்கி தன் முன்னே நிறுத்தி என் முகத்தைப் பார்த்தபடியே……..

மகளே……

உயிர்கள் எல்லாவற்றிர்க்கும் மூலாதாரமாய் இருக்கும் என் கையில், காமத்தைத் தூண்டும் தாமரையும், உடலைப் பசலையாக்கும் மாம்பூவும், பிற உணர்வுகளை நீக்கும் அசோகப் பூவும், படுக்கையில் கிடத்தச் செய்யும் முல்லைப் பூவும், விரகத்தில் ஆழ்த்தக் கூடிய நீலோற்பமும் கொண்ட மாறன் கணைகள் ஐந்தும் எதற்காக? என்று யோசித்தாயா?


முக்தம் என்பது, கையிலிருந்து விடுபட்டுச் செல்லும் ஆயுதம் அம்பு, போன்றவை. அமுத்தம் என்பது, கையில் வைத்துக் கொண்டே பயன்படுத்துவது வாள், போன்று. முக்தா முக்தம் என்பது, கையிலிருந்து விடுபட்டுச் செல்லும், ஆனால் மீண்டும் கைக்கே திரும்பி வந்துவிடும். பாசக்கயிறு சக்கரம் போன்று. பாசமும், அங்குசமும், கரும்பு வில், இந்த மூன்றும் எனக்கெதற்கு?


இப்போது என்ன சொல்ல வருகின்றாய்? நொந்து கிடக்கும் என்னிடம் தத்துவ விசாரமெல்லாம் எதற்காக? உன்னைப் பாடிப் பாடித்தானே நொந்து கிடக்கின்றேன்.


மகளே……… 

.எதையும் அசைத்துப் பார்க்கும் பாச அங்குசம் என்னிடம் இருக்கிறது. மலர் அம்புகளும் கரும்பு வில்லும் இருக்கிறது. இதெல்லாம் எனக்கே தேவைப்படுகிறது.

எதிர்காலத்தில் பிரச்சனை வரும் என்று நினைத்தால், முக்தத்தால் முன்னமே விரட்டியடி. மீறி வந்துவிட்டால் அமுக்தத்தால் அறுத்துப் போடு. முக்தாமுக்தத்தைச் சரியாய் பயன்படுத்து.


என்ன எழவோ? ஒன்னும் புரியலை…..


ஆண், யானை தான். நாம் பாகன்கள். யானையும் பாகனும், ஒன்றாய் வாழ வேண்டியது தான், நாகரீக சமூகத்தின் கட்டமைப்பு. யானைக்கு மதம் இயல்பு.. அது அத்து மீறும். இழுத்துக் கட்டி வைக்க முடியாது. அவிழ்த்து விடவும் முடியாது. பாசக் கயிற்றை வீசி கட்டுக்குள் வை. வெகுண்டு ஓடும் போது, கயிற்றை தளர்வாக்கு. நிதானிக்கும் போது கயிற்றைக் கறந்து கொள். அங்குசத்தை அளவாய் பயன்படுத்து.


யானை, எப்போதோ, எங்கிருந்தோ, யாரோலோ கிடைத்த அனுபவச் சுவட்டில் மிடுக்கு காட்டும். கிறுக்கதனங்களை முன்னிறுத்தும். நான் தான் பெரியவன் என்று அலட்டிக் கொள்ளும். கொஞ்சம் அன்பாய் கேட்டுப்பார், சந்தித்த அவமானங்களையும், வலிகளையும் கொட்டிக் குமுறி அழும். குழந்தையைப் போல, கொஞ்சி விளையாடும். கிரங்கிக் கிடக்கும். அதுதான் யானையின் இயல்பு.


சில நேரங்களில் வீம்பு காட்டும். பெரும் எடையைக் கட்டி இழுக்கும். உடல் அளவாலும், வலுவாலும், எளிதாய் நம்மைப் பாதுகாக்கும். எதிர்ப்பவரை மிரட்டிப் பணியவைக்கும். கோட்டைக் கதவுகளை தன் மத்தகங்களால் முட்டிப் பெயர்த்து எறியும். போரில் பெருவிருப்பு காட்டும். வெற்றிக் களிப்பில் இராச நடை போடும். இத்தனை வலிமையும் பெருமையும் இருந்தாலும்………..
ஓரடி அங்குசத்திற்கு அடிமைதானே…..….


என்னையறியாமல்…….


இப்போது, நான் பாடத் துவங்குகின்றேன்