Showing posts with label சமூகம் அனுபவம். Show all posts
Showing posts with label சமூகம் அனுபவம். Show all posts

Wednesday, February 01, 2012

அறனெப்படுவது யாதெனில்


இந்த மாத பண்புடன் மின் இதழில் வந்திருக்கும் கட்டுரை:-

 

சில வாரங்களுக்கு முன்பு ஒரு நாள்,, நண்பர் விஜயராகவன்  புத்தகம் ஒன்றை என்னிடம் கொடுத்தார். வாங்கி வீடு திரும்பியவுடன், குழந்தைகளோடு பேசும்போதும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போதும், இரவு உணவு அருந்தும் போதும்,, திரும்பத் திரும்ப மேசையிலிருந்த அந்த புத்தகத்தை மிட்டாய்க்கடை வாயிலிலிருக்கும் சிறுவனைப் போலவே ஆசையோடு பார்த்துக் கொண்டே இருந்தேன்.  அது என்னை பெரும் தொல்லைக்குள்ளாக்கியது. நாளை மெதுவாகப் படிக்கலாம் என்ற என் வைராக்கியத்தை உடைத்து சுக்குநூறாக்குவதில் அது வெற்றி கண்டது. காரணம் அந்த அட்டையில் இருந்த அந்தத் தலைப்பு  "அறம்".

பொதுவாக எல்லாச் சிறுகதைகளையும் மேலோட்டமாக படிப்பதும், சிறப்பாக இருப்பதாகத் தோன்றினால், அதில் ஒரு அடயாளமிட்டு வைத்துவிட்டு இறுதியில் மீண்டும் ஒருமுறை நிதானமாக வாசிப்பதும், அதில் முக்கியமானவைகளைக் குறிப்பெடுத்து வைத்துக் கொள்வதும் வழக்கமாக கொண்டிருக்கின்றேன். இந்த முறை முதல் கதையைப் படித்தவுடன் மேலும் அடுத்த கதைக்கு நகரமுடியாத நிலை. எண்ண ஒட்டங்கள் பல்கிப் பெருகத் தொடங்கி விட்டன. மீண்டும் ஒருமுறை வாசித்தேன். அதற்குமேல் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு, படுக்கையில் படுத்தபின்னும் அதிகாலை வரை தூக்கம் வராமல் புரண்டு புரண்டு, ஏதேதோ அறற்றத் தொடங்கியிருக்கின்றேன். தொடர்ந்து இரண்டு நாட்கள் இதே மனோநிலையில் இருந்தேன்.


செட்டி குலமறுத்துச்
செம்மண்ணின் மேடாக்கி
எட்டி எழுகவென்றறம்."

இந்த வரிகள் ஏனோ என்னுள் திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருந்தது.  அதன் பின் சில நாட்களில் ஈரோடு வந்திருந்த ஜெ.மோ அவர்களைச் சந்தித்தேன். பேசிக் கொண்டிருக்கும் போது அவர், அந்த பதிப்பாளர் மட்டுமல்ல அவருடைய குடும்பமே நிலை குலைந்து போய் விட்டன. வாரிசுகள் கூட இன்று முகவரியற்றுப் போய்விட்டனர் என்றதும் எனக்கு ஏதோ போல் ஆகிவிட்டது.  யாரோ ஒருவர் செய்த தவறுக்கு ஒட்டுமொத்த சந்ததியினரும் பாதிக்கப் பட வேண்டுமா? இது எந்த வகையில் ஞாயம்? அறத்திற்கே கூட அறம் கிடையாதா? தவறிழைத்தவனுக்குத் தானே தண்டனை? மற்றவர்களுக்கு அது எப்படி?  இப்படி கேள்விகள் எனக்குள்ளே வந்து போனது.

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம், இன்று மிக உயர்ந்த நிலையில் வாழ்ந்து வருபவர்கள். அதில் ஒருவர் முன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி, அவர் சகோதரர் மாநில அரசின் மிக உயர்ந்த பதவியில் இருந்தவர்., சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்றதாகக் கூறக் கேட்ட கதை இதுதான்.
நான்கு சகோதரர்கள், அதில் ஒருவர் பட்டாளத்திற்கு (இராணுவப் பணி) சென்று தன் சகோதரர்களுக்கு பணம் அனுப்பி, இங்கு பெரும் சொத்துக்கள் வாங்கி மகிழ்ச்சியோடு இருந்து வந்தனர். இராணுவத்திலிருந்தவர், போரில் மரணமடைந்துவிட, மற்ற சகோதரர்கள், மூத்த சகோதரரின் மனைவி மற்றும் ஐந்து குழந்தைகளையும், வீட்டைவிட்டுத் துரத்திவிட்டனர். அப்பெண்மணி நீதிமன்றத்திற்கு சென்றார். இறந்தவரின் சகோதரர்கள் நீதிமன்றத்தில், சொத்துக்கள் அனைத்தும் தங்கள் உழைப்பால் ஈட்டியது என்றும் அப்பெண்மணிக்கு ஏதும் தர இயலாது என்று  உப்புப் பெட்டிமீது நின்று சத்தியம் செய்ததாக கூறப்படுகிறது. (நீதி மன்றங்களில் உப்பு நிறைந்த பெட்டியின் மீது நின்று சத்தியம் செய்யும் வழக்கம் இருந்திருக்கும்போலிருக்கிறது. இன்றும் இருக்கிறதா என்று தெரியவில்லை) பின்னர் அந்தப் பெண்மணியும் ” அறம் உண்மையாயின் அது கேட்கட்டும்” என்று கூறி வெளியேறி, தன் சகோதரர்கள் உதவியுடன், சிறு சிறு வீட்டு வேலைகள் செய்து தன் குழந்தைகளைப் படிக்கவைத்து உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கின்றார்.  தன் அண்ணிக்கும் அவரின் குழந்தைகளுக்கும் தீங்கிழைத்த மற்ற சகோதரர் குடும்பங்கள் இன்று சின்னாபின்னமாகி, இளவயதிலேயே அவர்களின் குழந்தைகள் இறப்பதும், பித்துப் பிடித்து சுயநினைவிழந்து வாழ்வதையும் நானே பார்த்திருக்கின்றேன். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன், அந்தப் பெண்மணியின் குழந்தைகளையும், பேரக் குழந்தைகளையும், மற்ற சகோதரர்களின் வாரிசுகள் அழைத்து வந்து குல தெய்வக் கோவிலில் விளக்கு வைத்து, அவர்கள் ஒவ்வொருவரின் கால்களிலும் (சிறு குழந்தைகளின் கால்களில் கூட வயதான ஆண்களும் பெண்களும்) விழுந்து மன்னிப்பு கேட்டு கதறி அழுத  நிகழ்ச்சி நடந்தது. அதை நேரில் பார்த்தேன் யாரோ செய்த தவறுக்கு அவர்கள் சந்ததியினர் பாதிப்பது எதனால் என்ற கேள்வி எழுகிறது.

"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் " என்றார்களே, அதுபோல அறம் கூற்றுவனைப் போன்றதா? அறம் தவறிழைத்தவனுக்கு தண்டனை தரக்கூடிய நீதிபதியா?  "அறம்" பற்றி யோசிக்கத் தொடங்கினேன்.

"அறஞ்செய விரும்பு" என்ற அவ்வையிலிருந்து தொடங்கியது என் தேடல். அறம் என்றால் நல்லவை என்ற பொருளில் தான் அவ்வை சொல்லியிருக்க வேண்டும்  அறம் என்றால் தானம் என்று பொருள் சொன்ன ஒன்றாம் வகுப்பு ஆசிரியரை நினைத்துக் கொண்டேன். நல்லவற்றைச் செய்யவேண்டும் அவ்வாறு செய்வதனால் அறமே தலையாயிருந்து நண்மை பெயக்கும் என்ற பொருளில் சொல்லியிருப்பார்களோ?

நன்னெறி பாடிய கருணை சிவப்பிரகாசர்.




கொள்ளுங் கொடுங்கூற்றங் கொல்வான் குருகுதன்முன்
உள்ளங் கனிந்தறஞ்செய்து உய்கவே-



என்றார். இங்கேயும் நல்லது செய்யவேண்டும் என்று சொன்னதாகவே தோன்றியது.  நல்லது என்பது எதையாவது யாருக்காகவாவது தருவது என்ற பொருள் எல்லா இடத்திலும் மறைந்து தோன்றத் தான் செய்கிறது. இதை தான, தர்மம், என்ற பொருள் மதிப்பீடு சார்ந்ததாகவே பார்த்துப் பழகிவிட்டோமோ என்றும் தோன்றுகிறது..

அப்படி என்றால் அறம் என்றால், நண்மை செய்வது, பிறருக்கு ஏதாவது பிரதிபலன் பாராமல் தருவது, என்ற பொருளில் கொள்வது சரியானதுதானே. மூன்றாம் நூற்றாண்டில் கொங்கு மண்ணிற்கு வந்த சமணர்கள் கொடைதான் இந்தப் பெயர் " அறமோ"? என்ற என்னமும் பின் தொடர்கிறது. சமணப் பள்ளி இருந்த  "அறச்சாலையூர்" என்ற ஊர் ஈரோடுக்கு அருகில் இருப்பதும், அறச்சாலையம்மன் என்ற பெண்தெய்வத்தின் கோவிலும் இங்கிருக்கின்றதே, நண்மை செய்வோர்க்கு நல்லது அல்லது செய்வோர்க்கும் தண்டனையும் தருவதே அறம் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. ஒரு சமூகத்தை நல்வழிப்படுத்தவும், ஏற்ற தாழ்வுகளுக்கு சமாதானம் சொல்வதற்குமான காரணிகளாய் உருவாக்கப்பட்டிருக்க வேன்டும் இவையெல்லாம்.அறம் மறுப்பவன் தண்டிக்கப் படுவான், என்ற கருத்தினாலே உருவாக்கப் பட்டவைதானே இந்த தெய்வ உருவங்களெல்லாம்.


அப்பத்தா இப்படிச் சொன்னாங்கன்னா, அப்புச்சி வேற மாதர சொல்லறாரே.....



அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பது இல்லாயின் நன்று.

அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.


இப்படி சொல்லிகிட்டே வந்தவரு, திடீர்னு மெரட்ட ஆரம்பிக்கிறார்......

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.


தலைப்பாகை, நீள கோட்டு, மேலே அங்கவஸ்திரம் அணிந்து, கையில் அழகான ஒரு வாக்கிங் ஸ்டிக்கோடு கம்பீரமாக நடந்து வந்து, கப்பலோட்டிய தமிழனய் வசனம் பேசியபோதும், சிறையிலே கட்டம் போட்ட கைதி உடையணிந்து செக்கிழுத்த செம்மலாய் வ.உ..சியாக வே வாழ்ந்து காட்டினார் சிவாஜி கணேசன்.

வெள்ளிப் பனிமலை மீதுலாவுவோம் அடி
மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்..

என்ற பாடலில் மெய் சிலிர்த்துப் போனோம்.  வ.உ.சி யே நேரில் வந்திருந்தால் இந்த அளவிற்கு அவரைக் கொண்டாடி இருப்போமா? என்பது சந்தேகமே.

கதர் துணியால் தைக்கப் பட்ட கை வைத்த பனியன், இடுப்பிலே ஒரு பழைய வேட்டி, செருப்பில்லாத கால்கள், ஒரு சிறிய வீட்டில், கைகளில் மண்ணெண்ணை கேன்கள், பொது மக்களுக்கு மண்ணெண்ணை விற்பனை செய்து, அதன் மூலம் ஈட்டிய பணத்தில் தன் குடும்பத்தை காப்பாற்றி வந்தார் வ.உ.சி என்ற செய்தி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. சுதேசி கப்பல் கம்பெனியில்  தொடங்கி, அருந் தமிழுக்கு அவர் ஆற்றிய பணிகள் எத்தனை எத்தனை?  ஒரு கப்பல் நிறுவனம் நடத்தியவர் , சாதாரண மண்ணெண்ணை வியாபாரம் செய்து பிழைக்கும் நிலைக்கு ஆளானது எப்படி?  சரி எப்படியோ? அவர் அதை எப்படி எடுத்துக் கொண்டார் என்பதை விட நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதே இங்கு முக்கியம்.  ஒரு வேளை அவரும் ஏதாவது பெருந்தவறு செய்தவராக இருப்பாரோ? யாரையாவது ஏய்த்துப் பிழைத்திருப்பாரோ?  ஆனால் அப்படியெல்லாம் அவர்மீது குற்றச் சாட்டுகள் வரவில்லையே....பின் எப்படி இப்படி

இதுக்கும் அப்புச்சி ஒரு பதிலு வச்சிருக்காரு.........

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்



நல்லவர்கள் மோசமான நிலைக்கு போவதும், கெட்டவர்கள் நல்ல நிலையில் வாழ்வதைப் பார்க்கும் போது "கலி முத்திப் போச்சு" என்று நம் ஊரில் பேசுவார்கள். ஆனால் அப்புச்சிக்கே இதுக்கு காரணந் தெரியலை,  அதனாலதானோ என்னவோ செவ்வியான் கேடும் நினைக்கப் படும்(ஆராயப்படவேண்டியது) என்கிறார். அப்புச்சிக்கே தெரியலைன்னா அப்புறம் நமக்கெங்கே........
.
அறஞ்சூழும், அறம் கூற்றாகும், அப்புடி இப்புடின்னு ஊருக்கெல்லாம் கதை சொன்னவரு, அவரு குடும்பத்திற்கு அதை சொல்லிருந்தாருன்னா திகார் பக்கம் போற வேலை இருந்திருக்காது பாருங்க.

சரி நமக்கெதுக்கு அரசியலெல்லாம்................

மொத்தத்திலே, அறமோ?, மறமோ? எதையாவது சொல்லி, எழுதி பயமுறுத்தி எங்களை மாதிரி அப்பாவி பொது மக்களை அயோக்கியப் பயங்ககிட்ட இருந்து காப்பாதுங்கடா சாமீ...................எங்களால இவனுங்க செய்யறத சகிச்சிக்கவும் முடியல, எதிர்க்கவும் முடியல.





Thursday, December 29, 2011

நெஞ்சு பொறுக்குதில்லையே...........


 இப்படித்தான் பாருங்க, ஒருநா மாலையில, அலுவலகத்திலிருந்து வூட்டுக்குப் போயிச் சேந்த நேரம், முன்னாடி பட்டாசலையில கோந்திருந்த எளைய மவன் உள்ளுக்க நொழையும்போதே, ஒரே சத்தம். தென்ன சாமி சத்தம்னு? கேட்டா, அவுங்காத்தா, அவங்கேட்ட ஏதோ ஒன்னை வாங்கித் தரலையாம். சரி கண்ணு நா வாங்கித்தாரேன்னு சமாதானப் படுத்திப் போட்டு, பண்ணையக்காரிகிட்டப் போயி, ஏங்கண்ணு, கொழந்தை கேட்டா வாங்கித் தாராணுமல்ல, அவங்கோட என்ன ரவுசு உனக்குன்னு? கேட்டேன்.  கண்ணாமுழி ரெண்டும் வெளியவர மாதர ஒரு மொறை மொறைச்சுப் போட்டு, உள்ளுக்கப் போயிட்டா. 
                                                                    
என்னாடா இது வம்பாப் போச்சு,ஒன்னைச் சமாளிக்கப் போயி, இப்ப ரெண்டைச் சமாளிக்க வேணுமாட்டருக்கேன்னு மலைச்சுப் போயிட்டனுங்க.  சரி என்ன பண்டறது, ரவைக்குச் சோறு வெணுமில்ல, அப்புடியே பின்னாடியே போயி, சமாதானப் படுத்திக் கேட்டா, விளையாட்டுப் பொருள் ஏதோ புதுசா வந்திருக்குதாமா, ஐஞ்சாயன்ரன்ருவா வெலையாம். அவங்கோடப் பள்ளியோடத்தில படிக்கிற எல்லாருகிட்டயும் அது இருக்காம், அதனால அதை வாங்கியே கொடுத்தாகனும்னு அடம்புடிக்கிறான்னு சொன்னா. சரி கண்ணு! ஏதோ கொழந்தை ஆசைப்படறான் வாங்கிக் கொடுத்துப் போடுன்னு நாஞ்சொல்ல, ஆமா, இப்புடியே செல்லங் குடுத்துக்  கெடுத்துப் போடுங்கன்னு என்னையுந் திட்டிப் போட்டுப் போயிட்டா.

நல்ல சோத்துக்கு வழியில்லாத காலத்தில, பள்ளியோடத்துக்கு பசியோட போவானேன்னு எங்கம்மா,  நாலணாவுக்கு குச்சிக் கிழங்க(மரவள்ளிக் கிழங்கு) வாங்கி, இட்டிலி குண்டாவுல  வேவவச்சு, ஆவி பரக்க திங்கக் கொடுத்து பள்ளியோடத்துக்கு அனுப்பிச்சது நாபககத்துக்கு வந்தது. ”கொடிது, கொடிது இளமையில் வருமை”ன்னு எங்க பாட்டியாயா எந்த காலத்திலயோ சொன்னது நெனவுக்கு வந்திச்சு. வெளையாட்டா எல்லாத்தையும் கடந்து வந்தாச்சு. நம்ம குழந்தைகள், அந்த சிரமத்தப் படக்கூடாதுங்கறதுல கவனமா இருக்க வேண்டியிருக்குன்னு நினைச்சுகிட்டுத் தூங்கப் போயிட்டனுங்க.

ஊருக்கு வெளியே  சிறு நூல் நெசவு தொழிற்சாலை நடத்திவார நானு, வெடியறதுக்கு முன்னாடியே அங்கபோறது வழக்கம். நம்மள மாதர சிறு தொழிற்சாலைங்க இருக்கற இடமது. மில்லு வாசக் கதவுக் கிட்ட, ஒரு ஓரத்தில்  ஒரு துணிமூட்டை சாத்தி வச்சிருந்த மாதர இருந்தது. இந்த நைட் வாச்சுமேன் குளுருக்கு இப்புடி போத்திகிட்டு கோந்திருக்கானோன்னு பார்த்தா, ஒரு 10,12 வயசுப் பையன். ஒறையற பனியில  இங்கெங்கடா வந்தாயிவன்னு ஒரே ரோசனை.  யாரப்பா நீ?ன்னு கேட்க, அவன் வாயிலருந்து ஒரு வார்த்தையும் வரலை. கண்ணுல முட்டிகிட்டிருந்த தண்ணி கொட்ட ஆரம்பிச்சுது. வாச்சுமேனைத் தேடுனா, அவன் மில்லுக்குப் பின்னால இருக்கற பாய்லர்கிட்டப் போய், அந்தச் சூட்டோட கதகதப்புல தூங்கிட்டிருந்தான். எழுப்பி டீ வாங்கியாறச் சொல்லி அந்தப் பையனுக்கு கொடுத்துபோட்டு விசாரிச்சா, எந்த மவராசனோ வேலைக்கு சேத்திகறன்னு அந்தப் பையன வரச்சொல்லிபோட்டு, இவங்கதவப் பூட்டிட்டு போயிட்டான். உத்தரப் பிரதேசத்தில இருக்கற கோண்டா மாவட்டத்தில இருந்து தெனக் கூலி 50ரூவாயிக்கு ஆசைப்பட்டு அந்தப் பையன் ரயிலைப்புடிச்சு இங்க இரவு 11 மணிக்கு வந்து சேர்ந்திருக்கிறான். எங்கெங்கயோ சுத்தி வழி கண்டுபுடிச்சு விடியக்காலைல இங்க வந்து சேர்ந்தது தெரியவந்துச்சு. 

விரைவில் இந்தியத் தாய்த் திருநாடு வல்லரசாகும் என்று மேடைக்கு மேடை பேசித்திரியும், அரசியல்வாதிகளை நினைத்தால் கோபமும் வெறுப்பும் கொப்பளிக்கிறது. ஒரு வேளைச் சோற்றுக்கு வழியில்லாம், தினக்கூலி ஐம்பதைத் தேடி ஈராயிரம் மைல் கடந்து வந்து, மொழி தெரியா ஊரில், கடுங்குளிரில் எதிர்கால இந்தியா சுருண்டு படுத்திருக்க, வெட்கப் படவேண்டியவர்களெல்லாம் வீராப்புப் பேசித் திரிவதை என்னவென்று சொல்வது. விடுதலை பெற்று, மக்களாட்சி மலர்ந்ததாக மார்தட்டத் தொடங்கிய இந்த 65 ஆண்டுகளில் இன்னும் குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி ஏட்டளவிளேயே இருப்பது வேதனைக்குரிய ஒன்று. வருமான வரியோடு புதிதாய் கொண்டுவந்த கல்வி வளச்சிக்கான சிறப்பு  வரி (educational cess)என்ற பெயரில் கடந்த பல ஆண்டுகளாக திரட்டப் பட்ட தொகை யாருடை வளர்ச்சிக்கு சென்று சேர்ந்தது என்று தெரியவில்லை.  குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்புச் சட்டம் செயல்படும் விதமும் பாராட்டுக்குரிய ஒன்று. தொழிற்கூடங்களில் குழந்தைத் தொழிலாளிகள் இல்லை என்ற பலகையை எல்லா நிறுவனங்களும் பொருத்தி வைத்திருக்கின்றனவா என்று பார்ப்பதோடு அதன் பணி முடிவடைந்து விடுகிறது.


மேட்டுப் பாளையத்தில இருந்து ஊட்டிக்கு போற வழியில இருக்கற ஒரு உண்டு உறைவிடப் பள்ளியோடத்தில கொண்டுபோயி குழந்தைகளைச் சேர்க்கோணும்னு பண்ணையக்காரி ஒரே ரவுசு. சரின்னுபோட்டு, விண்ணப்பம் வாங்கப்போனா, அந்தப் பள்ளிக்கோட வாசலில 100,200 கார் வருசையா நின்னுகிட்டிருந்தது. நாலாங்கிளாஸ் படிக்கிற ஒரு கொழந்தைக்கு, விண்ணப்பப் படிவம் ஆயரத்து இருநூறு ரூவா. வருசக்கட்டணம் ஒன்னரை லட்சன்ருவா. எங்கபோயி முடியுமோ இதுன்னு வெசனமாப் போச்சு.   போனவருசத் தலைவரு சமச்சீர் கல்வி கொண்டாந்துட்டதுல நட்டப் பட்டதென்னவோ நாமதான். புதுசு புதுசாப் படிப்பு. சி பி எஸ் சிங்கறாங்க, ஐ சி எஸ் சி ங்கறாங்க, ஒன்னும் வெளங்கள. பஞ்சாயத்துபோர்டு பள்ளியோடத்துல படிச்சு, சீமையில(அமெரிக்காவில்) வேலைபார்த்துகிட்டிருக்கற நம்ம மாப்பு நாபகத்துக்கு வந்தாரு. என்னத்தச் சொல்லறது எல்லாம் காசப்புடிச்ச சனியன் செய்யற வேலை.


இந்திய அரசியலமைப்புச் சட்ட நிர்ணய சபை மாநில அரசுகளின் அதிகாரங்கள், மத்திய அரசுகளின் அதிகாரங்கள் என்று பிரித்து வகைப்படுத்தியபோது, பள்ளிக் கல்வியை மாநிலங்களின் அதிகாரங்களுட்படுத்தியது சரிதான என்ற கேள்வி எழுத் தொடங்கியுள்ள நேரத்தில். ஒரே மாநிலத்தில், ஒரே வகுப்பில் படிக்கும் இரு மாணவர்களின் கல்வித்தரம் வேறுவேறாக அமைந்திருப்பது கேலிக்குறியது. இந்த லட்சணத்தில் ” ஒரே இந்தியா” என்று உணர்ச்சி பொங்கும் கூக்குரல்கள் நாடெங்கும். உண்ணும் உணவில், உடுத்தும் உடையில், வாழ்க்கை முறையில் ஏற்றதாழ்வுகள் இருப்பதைக் கூடச் சகித்துக் கொள்ளலாம், ஆனால் வருங்கால இந்தியா எனச் சித்தரிக்கப் படுகின்ற, குழந்தைகளுக்கு அடிப்படை அறிவு கொடுப்பதில் கூட ஏற்றதாழ்வு இருப்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை.  “வலுத்தவன் வாழ்வான்” என்ற காட்டுமிராண்டித்தனங்கள் தொடர்வது, வளர்ந்த நாகரீகச் சமுதாயத்தின் வெட்கக் கேடுகள். மிகுந்த பொருட்செலவில் நல்ல பள்ளிகளில், நல்ல பாடத்திட்டங்களில் பயிலும் குழந்தைகளோடு போட்டியிட முடியாமற்போகும், பொருளாதரத்தில் பின் தங்கிய பெரும்பாண்மைச் சமுதாயத்தின் இளந்தளிர்கள், எதிர்காலத்தில் கள்ளியாய், முட்செடியாய் மாறிப்போகும் சூழ்நிலை கண்முன்னே தெரிகிறது. அடுத்த தலைமுறைக்கான சமூக விரோதிகளை உருவாக்கும் பணியை அரசாங்கங்கள் தொடங்கிவிட்டதாகவே தோன்றுகிறது.  சமூக ஏற்ற தாழ்வுகள் இவர்களுக்கு அவசியமான ஒன்று. இல்லையென்றால் நலத்திட்டங்கள் என்ற பெயரில் எப்படிக் கொள்ளையடிப்பது?.


எதையோ பேசப்போக, எங்கெங்கயோ போயிடுச்சு நெனப்பு. சரி, விசியத்துக்கு வருவோம். மறுக்கா, ஒரு நா, அந்தப் பையனை தெருவில பார்த்தேன். என்னப்பா? எப்படி இருக்க, என்ன செஞ்சுகிட்டிருக்கன்னு கேட்டேன். பிளாஸ்டர் ஆப் பாரிஸ்னு  ஒரு மாவுப் பொருளு, அதைக் கொழைச்சு, அச்சுல அழுத்தி எடுத்து, வூட்டுள்ளார இருக்கற வரவேற்பரையில சீலிங்ல ஒட்டிகிட்டா அழகா இருக்குமாம். அதைச் செய்யற வேலையாம் அவனுக்கு. நாளொன்னுக்கு சோத்துக்குப் போக 30ரூவா குடுக்கறாங்களாம். இந்தூருல வேலை முடிஞ்சி போச்சு, நாளைக்கு திருப்பூருக்கு போகோணும். அங்கொருத்தரு பெரியவூடு கட்டிகிட்டிருக்காராம், அங்கயே போயித் தங்கி, வேலை செஞ்சி கொடுக்கோணும்முன்னு சொல்லிப் போட்டு அவஞ் சொன்னான், அண்ணா, இந்த மாசம் எங்கம்மா அப்பாவுக்கு, 800ரூவா அனுப்பப் போறேன். அங்க தம்பி தங்கசியோட சோத்துக்குக்கூட நெம்ப சிரமப்பட்டுகிட்டிருக்காங்க. இங்க இருக்கற தபாலாபீஸ்ல குடுத்தா, எங்கூருல இருக்கற அப்பா அம்மாகிட்ட கொண்டுபோயிக் குடுத்துருவாங்களாமா? நெசமாவுமே குடுத்துருவாங்களா?ன்னு கேட்டான்.  என்ன பதில் சொல்றதுன்னே தெரியலை எனக்கு. ஆமான்னு தலையாட்டிட்டு, அவனை பக்கத்துல இழுத்து, என்னோட சேர்த்து இருக்கிக் கிட்டேன்.


அரண்மனை போன்ற வீடுகளும், அலுவலகங்களும் பொழிவோடும், நம்மை அசரவைக்கும் அழகோடும் அமைந்திருந்தாலும், அவற்றை எந்தப் பிஞ்சுக் கரங்கள், ஒரு வேளை உணவுக்கான கனவில் உருவாக்கிக் கொடுத்திருக்கும்  என்று நினக்கும் போது, எல்லாம் மறந்து போய் அருவெறுப்பான எண்ணங்களே எங்கும் தோரணமிட்டுத் தெரிகின்றன.  பழங்கதைளும் புராணங்களும் கட்டமைத்தச் சமூகமும் அதன் விழுமியங்களும் தொடர்வதில், ஒரு நண்மை இருப்பதாகவே தோன்றுகிறது. பத்து வயது கிராமத்துச் சிறுவன் தன் உழைப்பின் மூலம் ஈட்டிய பொருளில், தன் குடும்பத்திற்கு ஒரு சிறுதொகையை, அனுப்பி வைப்பது என்பதே அவற்றின் வெற்றி.  தாய் தந்தையரை தோளிலே சுமந்து சென்று காப்பாற்றிய சிரவணின் கதை, போன்றவற்றைச் சொல்லிச் சொல்லி, சமூகம் தன் கட்டுமானத்தை விடாப்பிடியோடு வலுப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது. இந்தியப் பாரம்பரியம், கலாச்சாரம் என்ற கற்பனைகளைக் கட்டமைத்து, ஏய்த்துப் பிழைப்பதும், தர்மம், நியாயம் என்ற பெயர்களைச் சொல்லி அடுத்தவர் உழைப்பைத் திருடித் திண்பதிலே வெற்றி காண்பதை காணும்போதெல்லாம்,  நெஞ்சு பொறுக்குதில்லையே...............

பத்து வயதுச் சிறுவனுக்கு அடிப்படையான உணவும், உறைவிடமும், கல்வியும் கொடுக்க முடியாமல், போன ஒரு மனிதன், தன்னால் பிறந்தான், தனக்குப் பிறந்தான் என்று பெருமைப்பேசித் திரிவதும், அவனின் உழைப்பில் கிட்டும் சிறு தொகையை ஏற்றுச் செலவழிப்பதும் எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதாகிறது.  இப்படி எத்தனையோ மனிதர்களை விளிம்பு நிலைக்குத் தள்ளி, பச்சிளங் குழந்தைகளைத் தொழிலாளிகளாக்கி, “முப்பதுகோடி சனங்களின் சங்கம், முழுமைக்கும் பொதுவுடமை” என்று பேசித் திரிவதினாலோ, வல்லரசாகி, உலக நாடுகளின் நன்மதிப்பை பெற்றுவிடுவதினாலோ நாம் வளர்ந்த சமூகமாகி விடமாட்டோம்.

பிஞ்சுக்கரங்கள் தொழிற்சாலைகளில் கடுமையாகப் பாடுபடுவதும், புத்தங்கங்கள் ஏந்த வேண்டிய கைகளில், திருப்புளியும், மசியும் படர்ந்திருப்பது வேதனையளிக்கிறது. அந்த மசியும்,கரியும், இந்த தேசத்தின் மீது பூசப்பட்டதாகவே உணர்கிறேன்.

நெஞ்சு பொறுக்குதில்லையே.......