Friday, February 04, 2011

எழவு........எத்தனை பெரியார் வந்தாலும் உங்களைத் திருத்த முடியாதுடா...



போன வாரத்தில ஒருநா, எங்கூரு பெரிய மனுசர் ஒருத்தரு வூட்டுக்கு, போயிருந்தனுங்க. முன் அறையில, நம்மூரு கெவருமெண்டு பஸ்ஸில இருக்கறமாதர ஒரு தாடி வச்ச சாமியாரு, கைல ஏடெல்லாம் வச்சிகிட்டு நிப்பாருங்கல்ல, அதுல கூட “பொறப்பொக்கும் எல்லாவுசுருக்கும்னுஎழுதியிருக்குமுங்கல்ல, அந்த போட்டா மாட்டியிருந்துச்சுங்க.  நான் பார்க்கப் போன பெரிய மனுசரும், அந்த கரைவேட்டி கச்சைக்காரர் தானுங்க.

அவரும், நம்மளை மதிப்பா கூட்டிகிட்டுப் போயி சோத்து மேசையில உக்காரவச்சு, பொங்கலு, பனியாரம், வடை எல்லாம் போட்டு, சாப்பிடச் சொன்னாரு. ஆனா பாருங்க, அவரு ஒரு கிண்ணத்தில கொஞ்சூண்டு கஞ்சியூத்தி, அதை கரண்டியில மொண்டு குடிச்சிகிட்டே சொன்னாரு.. சக்கரை எச்சாப் போச்சுங்க..அதுனால காலைல கோதுமைக் கஞ்சிதானுங்க. எனக்கு ஆகாரம்னார்..

அடக் கொடுமையே...எல்லாப் பலகாரத்தையும் செஞ்சி அடுத்தவனுக்குப் போட்டுப் போட்டு, இவர மோட்டுவளையப் பார்க்க வச்சிட்டானேன்னு வெசனப் பட்டாலும்,  சரி, நமக்கு கெடச்சதுல கவனமா இருப்பமுன்னு இருந்தனுங்க..

பொறவு, பேசிகிட்டே முன்னுக்க வந்து உக்காந்தோம்.  அப்ப, அவரோட மேனசரு வந்து, வேலை வேணும்னு யாரோ வந்திருக்கறதா சொன்னாரு.  நாங்க உக்காந்திருந்த அந்த அறையில, நேர்முகத் தேர்வு நடந்தது. வேலை கேட்டு வந்தவரப் பார்த்தா, ராசா கணக்கா இருந்தாருங்க. (நம்ம லச்சத்து எழுபத்தஞ்சாயிரம் கோடி ராசா இல்லீங்க, நெசமாலுமே ராசாவாட்டம் இருந்தாரு).

நம்ம தொழிலதிபரும், அவரு அறிவுக்கெட்டுன அளவு கேள்வி கேட்டாரு. இதுல இன்னொரு விசியத்தையும் சொல்லோனும்.  நம்மாளு ரொம்ப நாளா இ.கை.பெ.(அதானுங்க கை நாட்டு).  இப்ப கொஞ்ச வருசமாத்தான் எழுதிப் பழகி, காசோலைல கையெழுத்துப் போடற அளவு வளந்திருக்காரு..  அதுலையும், அவரோட பேரில் இருக்கிற  கடேசி எழுத்துல வார கொம்பு, காசோலைக்கு வெளில, மேசைல தான் இருக்கும். 

இவுரே, இத்தனை கேள்வி கேட்டதும் எனக்கு வந்தவரை நெனச்சு ரொம்ப வெசனமாப் போச்சு. வந்தவரும் எல்லாத்துக்கும் பவுசா பதில் சொல்லிகிட்டே இருந்தாரு. 

கடேசியா ஒரு கேள்வி கேட்டாரு பாருங்க...நீங்க என்ன சாதின்னு?

வேலை கேட்டு வந்தவரு தட்டுத் தடுமாறி, பதில் சொல்லத் தயங்கிக் கிட்டே ஏதோ ஒரு சாதிப் பெயரைச் சொன்னாரு.  
 சரி...நான் வேலை காலி இருந்தால் உன்னைய கூப்பிடறேன். இப்போ ஏதும் காலி இல்லை,. 
என்று சொல்லி வந்தவரை அனுப்பிப் போட்டு எங்கிட்ட சொன்னாரு
..
.இந்தப்...........பயலுகளெல்லாம் நமக்கு ஒத்து வரமாட்டானுங்க.........பொழங்கற சாதியா இருந்தாத்தான் பரவாயில்லீங்க”.  ன்னாரு...


அடங்கொன்னியா, பொழங்கக்கூடாத எனம்னு எவண்டா சொன்னான்? அவனும் மனுசந்தானேடா. மாட்டைப் புடிச்சாந்து நடுவூட்ல வச்சி  கெரகப் பிரவேசம் செய்யறீங்க.  நாயைக் குளிப்பாட்டி நடுவூட்ல வச்சி கொஞ்சறீங்க. இப்பத்தாண்டா புரியுது நீயேன் மோட்டுவளையப் பார்த்துகிட்டு சோறு குடிக்கறேன்னு நினைச்சுகிட்டனுங்க..

..இந்தக் கெரகம் புடிச்சவனூட்லயா சோறு தின்னோம்னு ஆயிப்போச்சுங்க...எழவு எத்தனை பெரியார் வந்தாலும் உங்களைத் திருத்த முடியாதுடான்னு நினைச்சுகிட்டு ஓடிவந்து போட்டனுங்க.