Wednesday, September 26, 2018

சிறு கோட்டுப் பெரும் பழம்….

அன்பிற்குரியவனே,

வரையறுக்கப்பட்ட ஒரு சட்டத்திற்குள்,  குறுக்கும் நெடுக்குமான உணர்வுக் கட்டங்களில், ஒருவரை ஒருவர் உவகையோடு தேடித் துரத்துவதும், ஒருவர் மற்றொருவரை முடக்கிப் புஜம் உயர்த்துவதும், நீ முயன்று என்னைச் சுற்றி இறுக்குவதும், முயன்று நான் தப்பிச் சென்று,  பதிலுக்கு  உன்னை சுற்றி வளைப்பதையும்,  விழிப்புணர்வின் எல்லைகளை , விருப்போடு உடைத்துத் தள்ளி, ஒவ்வொன்றாய், ஒருவரிடம் மற்றொருவர், இழந்து இழந்து,  இறுதியில், ஒருவருக்குள் ஒருவராய்,  இருவருமே கரைந்து போய் ஒன்றுமில்லாமல் போகும், அந்த விளையாட்டுக்கும்  ”சதுரங்கம்” என்றே பெயர் சொன்னாய்.

பொதுவாக,  இருவர் மட்டுமே ஆடும் ஆட்டம் என்று சொல்லிவிட்டு, இன்னொன்றையும் சொன்னாய், இது,  “ நாம் இருவர் மட்டுமே ஆடும் ஆட்டம்”, என்றும் சொன்னாய்.

அந்த ஒரு நாளில், அந்த ஒரு ஆட்டத்தையும், நீயே துவக்கி வைத்தாய். உன் ஆசை தீர முன்னேறினாய்.. இந்தச் சதுரங்க ஆட்டத்தைப் பற்றி விளக்கமாய் பேச ஏதுமில்லை, ஆட ஆடவே உனக்கு, ஆட்டம் புரியும்,  என்று சொல்லி, நேரடியாய் என்னைக் களமிறக்கினாய். அதற்கு முன்பாக அது குறித்த இயல்பான கிளர்ச்சி  மட்டுமே எனக்குள் இருந்தது.

ஆட்டமும் புதிது, ஆடும் களமும் புதிது.  ஆட்ட விதிகளையும், வழிமுறைகளையும் எழுத்திலும், பேச்சிலுமே அறிந்திருந்த நான், உன்னிடம் தோற்றுக் கொண்டே இருந்தேன். நீயும் அதைத்தான் எதிர்பார்த்து இருந்திருப்பாய். நண்பர்களிடமிருந்தோ, புத்தகங்களிலிருந்தோ, இணையங்களிலிருந்தோ, புதிது புதிதாய், ஆட்ட நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு வந்து, என்னிடம் பரிட்சித்துப் பார்த்தாய்.  ஒவ்வொரு முறையும் உன் ஆட்ட முறையை மாற்றி, என்னைத் திணறடித்தாய். என்னை அறியாமல் நானும் இந்த ஆட்டத்தில் ஒரு பெரு விருப்பு கொள்ளத் தொடங்கினேன்.  ஏதேதோ கற்றுக் கொடுத்தாய். எல்லாமே எனக்குப் புதிதுதான்.

ஒவ்வொரு முறை நீ வெட்டிச் சாய்க்கும் போது, புத்துணர்வோடு நான் கிளைத்து எழுந்தேன்.  உன்னைச் சுற்றி வளைத்து, அசையமுடியாமல் முடக்கிப் போட்டு, உன் தவிப்பை ரசித்தேன். நீ, முயன்று என்னைச் சாய்க்க, நான் மீண்டு எழ, நீ, மீண்டும் சாய்க்க, விழ, எழ எனும் அந்த,  அலகிலா விளையாட்டை, அனைத்தும் மறந்து, ஆடி மகிழ்ந்தோம்.

இடையில் கொஞ்ச காலம், உற்பத்திக் கடமைகளால் துவண்டபோது,  உன்னோடு அதிகமாக, நெருங்க முடியவில்லை.  ஆனாலும் வாய்ப்புகளை உருவாக்கி, என்னோடு விளையாடவே விரும்பினாய்.  நானும் என்னால் முடிந்தவரை, உனக்காக, உன்னோடு விளையாடினேன்.

கடமையும், காயங்களும் மறைய மறைய, மீண்டும் ஆடும் ஆசை வரத் தொடங்கியது.  நீ கொடுத்து நான் பெற்றதும், நான் கொடுத்து நீ பெற்றதும் நினைவுக்கு வரத் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக, ஆட்டம் பற்றிய நினைவுகள் மீளத் துவங்கி, என்னையும் அதற்குள் இழுத்துக் கொண்டது. நான், ரசித்து ஆடத்துவங்கிய காலகட்டங்களில், என் ஆட்டமுறையும், நுட்பங்களையும் ரசித்த நீ, ஒரு இடத்தில், தடுமாற ஆரம்பித்தாய்.

உனக்குச் சரிசமமாக, நான் ஆட விளையும் போது தான், நீ, என்னில் இருந்து, விலக ஆரம்பித்தாய். என் வேகம் உனக்குள்   பயத்தை  கொடுத்ததா? என்று எனக்குத் தெரியவில்லை. நேரமில்லை, வேலை, களைப்பு, தலைவலி, குடும்பச் சூழ்நிலை, உடல்நிலை, சரியில்லாத மனநிலை, இப்படி எத்தனையோ காரணங்களைச் சொல்லி என்னோடு விளையாடுவதைத் தவிர்த்து வந்தாய்.

ஒரு கட்டத்தில், இந்த வயதிற்கு மேல் என்ன விளையாட்டு?  நான் கொடுத்திருக்கும் இராமாயணம், மகாபாரதங்களைப் பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டு, அவ்வப்போது, யாரோ இருவர் ஆடும் ஆட்டத்துக்கு நடுவராக மாறியிருந்தாய்..

அன்புக்குரியவனே,

ஒரு பின்னிரவில், உன், தோட்டத்து வீட்டின் முற்றத்தில், காலங்கள் கடந்து, தலைமுறை, கண், சாட்சியாமாய் நிற்கும், அந்த தேன் தூறும், பலா மரத்தின் அடியில், பெருங்களிப்பில், நீ சொன்ன அந்தப் பாடல் எனக்கு இப்பொழுதெல்லாம் அடிக்கடி நினைவிற்கு வருகிறது, ”சாரல் சிறு கோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு, இவள் உயிர்தவச் சிறிது,” என்ற அந்தப் பாடலை உனக்குச் சொல்லிக் கொடுத்தது யாரென்று தெரியவில்லை.

அன்புக்குரியவனே,

இங்கே நான், விருப்போடு கற்றவை, அனைத்தும், நீ எனக்குச் சொல்லிக் கொடுத்தவையே.  நான் கற்றிருந்தவைகளை விட, நீ கற்பித்ததைத்தான் நான் மிகக் கவனமாகப் படித்தேன்.  எனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தது, ”நீ மகிழ்வாய் இருந்தால் தான் நான் மகிழ்வாய் இருக்க முடியும்” என்றுதான்.  உண்மையில்,  நானே உணர்ந்தேன், நீ மகிழ்வாய் இருக்கும் போதெல்லாம், நானும் மகிழ்வாய் உணர்ந்தேன். ஏனென்றால்,  எனக்கு, உன்னை மட்டுமே பிடித்திருக்கிறது.

அன்புக்குரியவனே,

இந்த விளையாட்டு உனக்கு ஏன் விருப்பமானதாக இருந்தது? என்று எனக்குத் தெரியாது.  ஆனால் எனக்கு ஏன் விருப்பமானதாக இருக்கிறது  தெரியுமா?, இந்த ஆட்ட நேரத்தில் தான் நீ என்னை உற்று கவனிக்கிறாய்.  உன் மனம் என்னைச் சுற்றிச் சுற்றியே திரிகிறது. என்னை நீ கவனிப்பதையும், என் மனதோடு இயைந்து பயணிக்கும் உன் மனம், உடல், புத்தி மூன்றின் ஒருங்கிணைந்த அந்த செயல்பாடுதான்,  எனக்குப் பிடித்தமானதாக இருக்கிறது.

அன்புக்குரியவனே,

இது வெறும் சதை அடுக்குகளின் உராய்வில், ஏற்படும் உடல் கிளர்ச்சியல்ல.  என்  அசைவுகளை, என மணத்தை, என் பெருமூச்சை, உவகையோடு நீ, நெருங்கிப், பார்த்து, நுகர்வதில் ஏற்படும் மனக் கிளர்ச்சி.

அன்புக்குரியவனே,

விளையாட்டு இங்கே, ஒரு பிரச்சனை அல்ல.  உடல் நெருங்கி, முகம் உயர்த்தி, தோள் தொட்டு, உற்று ஒரு நிமிடம் என்னைப் பார்.  பொங்கிவழிந்தோடும் என் உணர்ச்சிகள் சொல்லும், என் காதலின் தீவிரத்தை.  உன் சிறு அணைப்பில் வடிந்தோடும் என் எல்லா ஏக்கங்களும்.

அன்புக்குரியவனே,

நீ கற்றவைகளை ஆசை தீர என்னிடம் சோதித்துப் பார்த்துச் சலித்துவிட்டாய். .  நான்   கற்றதை, களி தீர,  யாரிடம் போய்ச் சோதித்துப் பார்க்கட்டும்?.

அன்பிற்குரியவனே,,

துவக்கத்தில் நீ சொல்லிக் கொடுத்ததை, அப்படியே நினைவில் நிறுத்தி,  உனக்கும் நினைவூட்டுகிறேன்.  இது இருவர் மட்டுமே ஆடும் ஆட்டம், ஆம், “ நாம்,  இருவர் மட்டுமே ஆடக் கூடிய  ஆட்டம் ”.

நானும், அதற்கு மட்டுமே  பழகியிருக்கின்றேன்.


Wednesday, September 19, 2018

பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்து…….









வழக்கமாய் வார இறுதிக்கு வருபவள்,  முன்பாகவே, வந்திருக்கிறாள்.  முகமும் தெளிவாய் இல்லை. வந்தவள், நேரே அவள் அறைக்குள்ளே புகுந்து கொண்டு,  அறையை விட்டு வெளியே வரவேயில்லை. உடலைக் குறுக்கிக் கொண்டு,  போர்வைக்குள் சுருண்டு கிடப்பவளைப் பார்க்க கவலையாக இருக்கிறது.

என்னம்மா? உடம்பு சரியில்லையா?

ம்ம்ம்….இல்லம்மா……

மாப்பிள்ளையோட ஏதும் சண்டையா?

…….நீண்ட மவுனத்திற்குப் பிறகு……”ம்”.

சரி, இந்தக் காப்பியைக் குடி……என்று நீட்டிவிட்டு, அவள் அருகிலேயே அமர்ந்து கொண்டேன்.  வளர்ந்த, படித்த,  பெரிய நிறுவனத்தில் பெரிய பதவியில் இருக்கும், மணமான  மகளிடம் எதை? என்னவென்று எப்படிக் கேட்பது?

சிறிய மவுனத்திற்குப் பிறகு அவளே பேசத் தொடங்குகிறாள்….

நான் எதைச் சொன்னாலும், அப்படியெல்லாம் இல்லை….அதாவது….ன்னு ஆரம்பிச்சு, நான் என்ன சொன்னனோ அதையே வேற வார்த்தையில சொல்லறான்மா….

நான் செய்யறதெல்லாம் முட்டாள்தனமா இருக்குதுங்கறான்மா. சின்னச் சின்ன விசியத்துக்கெல்லாம் ஏதாவது ஒரு காரணம் வச்சு என்னை திட்டறான். நேத்து ஷாப்பிங் போன இடத்துல கூட சண்டை.  அவருக்குத் தெரிந்ததெல்லாம் எனக்கும் தெரிஞ்சிருக்கனும், ஆனா கொஞ்சம் அதிகமாத் தெரிஞ்சிருந்தாலும் பிரச்சனை…..ஒன்னுமே தெரியாம இருந்தாலும் பிரச்சனை. என்ன செய்யறதுன்னே தெரியலைம்மா…..

எனக்குள்ளே சிரித்துக் கொள்கிறேன். நானும் இப்படித்தான். பல ஆண்டுகளுக்கு முன்பு, இதையே தான், என் அம்மாவிடம் சொன்னேன். இன்று என் மகள் என்னிடம்.

குமறுன்னு இல்லாம வாக்கப்பட்டேன், மலடுன்னு இல்லாம பிள்ளப் பெத்துக்கிட்டேன்”, அதுக்கு மேல ஒண்ணுமில்ல,  ”உழவும் தரிசும் ரெடத்திலே, ஊமையும் செவிடனும் ஒரு மடத்திலே”ம்பாங்க,   என்ன தாயி செய்யமுடியும். அனுசரிச்சுப் போயித்தானே ஆகனும்.

என் அம்மா, என்னிடம் இப்படித்தான் சொன்னாள். படிக்காதவள் பாவம், அதற்கு மேல் தெளிவாகச் சொல்ல, அவளுக்குத் தெரியவில்லை,

எங்கோ படித்த வரிகளை நினைவுபடுத்தி அவளுக்குச் சொல்லுகிறேன்.  

Men are not really complicated.  They are very simple, literal creatures. They usually mean what they say.  We spend hours in trying to analyze what they have said. Really it is obvious. Take him literally.

ஒரு அம்மாவாக இதைத்தானே சொல்ல முடியும். இப்படியான ஆறுதல்கள் தானே அவளை உயிர்ப்புடன் வைத்திருக்கிருக்கும்.

போம்மா….உனக்கு அவனைப் பத்தி எதுவும் தெரியாது.  சொன்னாலும் நம்ப மாட்ட…………

அப்பா மாதிரி அன்பா, அமைதியா, பொறுப்பா இருந்திருந்தா,  எவ்வளவு நல்லாயிருந்திருக்கும்? எவ்வளவு தப்பு செஞ்சாலும் கூப்பிட்டு அமைதியா உக்காரவச்சு, பொறுமையா, விளக்கமா பேசுவாரு. 

ம்ம்ம்ம்…. நானும் அப்படித்தான் நெனைச்சேன்.  என் புருசன், என் அப்பா மாதிரி இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும். ஆனா எங்கம்மா சொன்னா, அவ புருசன், அவங்கப்பா மாதிரி இருந்திருந்தா நல்ல இருந்திருக்கும்னு.

குழப்பமும் அதிர்ச்சியும் அவளிடத்தில்…….. நான் பதில் ஏதும் சொல்ல வில்லை. என் சேலைகளுக்கிடையே  வைத்திருக்கும் என் டயரியை எடுத்து வந்து அவளிடம் நீட்டினேன்.  ஆச்சரியத்துடன் வாங்கித் திறந்து பார்க்கிறாள். எனக்குத் தெரியும்,  அதற்கு மேல்  எனக்கு அங்கே வேலையில்லை.

அந்த டயரியைப் பிரித்துப் பார்க்கிறேன். முதல் பக்கத்திலிருந்தே எழுதத் தொடங்கியிருக்கிறாள் என் அம்மா.  அப்படி என்னதான் எழுதியிருப்பாள்…..


முதல்அத்தியாயம்

எங்கிருந்தோ அடித்த காற்றில், பறந்து வரும் தூசிகளும் மழைநீரும் எப்படியோ,  என்னையும் இழுத்து வந்து அந்த மண்ணில் போட்டுவிட்டன.  அடிப்படையில், ஏதோ ஒரு கிளையில் காய்த்து, அது பழுத்து, வெடித்துச் சிதறியபோது, விடுதலை பெற்றுச் சுதந்திரமானேன். ஆம், நான் ஒரு விதை.  நான் விழுந்த இடமெங்கும் குப்பை, தூசி, இதுவரை அறிந்திடாத மண்வாசம், இவையெல்லாம் எனக்கு மொத்தத்திலும் புதிது. 

எனக்கு மரத்தைத் தெரியும், கிளையைத் தெரியும், பூவைத்தெரியும், காயைத் தெரியும், அது கனிந்து வரும் கனியைத்தெரியும். மண்ணும், மற்ற ஊர்வனவும் எனக்குப் புதிதானவைதான். இருந்தாலும், விழுந்த இடத்தில் முளைத்து வரத்தானே வேண்டும். 

ஈரம் என்னையும், மண்ணையும் இணைத்தது. நாங்கள் இருவரும் பின்னிப்பிணைந்து களித்துக் கிடந்தோம்.  அதுவும் கொஞ்ச காலம் மட்டுமே. சூரியன் கொதித்துக் கிளம்ப, மண்காய, முடிந்த அளவு ஈரத்தை உறிஞ்சி எடுத்து ஒரு நிலைக்கு மேல், என்னையும் இறுக்கிப் பிடித்து இருந்தது. மயங்கிக் கிடந்த அந்த நாட்களை நானும் ரசிக்க வில்லை, மண்ணும் ரசிக்கவில்லை. ஆனால் பிரிக்கமுடியாதபடிக்கு இருந்தோம்.

இப்படியே நாட்கள் கழிந்த பின்னால் பெய்த மழையில், மண் தன் ஈரத்தை மீண்டும் என் மீது காட்டி, களிப்புச் சுவையை நினைவூட்டியது, ஆனால் அது ஏனோ என்னை ஈர்க்கவில்லை. என் பிரச்சனையைப் போய் எந்த மரத்திடமும்  சொல்லமுடியாது.  அதுதான் என்ன செய்யும்?

மண் எப்பொழுதும் நீர் தேடித்திரியும். மண்ணின் குணம் வேறு, என் குணம் வேறு. என்ன செய்வது? இனி மண் இன்றி  நான் இல்லை. என்னைத் தாங்கிப்பிடித்து வேறூன்ற வைத்து, கிளை பரப்பி, பூ பூத்து, காயாகி, கனிந்து இன்னொரு வித்தையும் வெளிக்கிளப்பி விட்டதே.

அவனுடைய இயல்பும், என்னுடைய இயல்பும் எப்பொழுதுமே எதிரெதிரானவை.  நிதானம் என் இயல்பென்றால், வேகம் அவன் இயல்பு. எதையும் ஏற்பது என் இயல்பென்றால், எதையும் எடுத்தெறிவது அவன் இயல்பு. என் எல்லாச் செயல்பாடும் மனதிலிருந்துதான், அவன் இயல்புகளோ மூளை மடிப்புகளில் இருந்துதான். இணைந்த புதிதில் ஒருவொருக்கொருவர் ஆச்சரியப்பட்டு, வியந்தோம், ரசித்தோம்.  ஆனால் தொடர்ந்து அப்படி இருக்க முடியவில்லை.

என் நிதானம் அவனுக்கு எரிச்சல், அவன் வேகம் எனக்கு பயம்.  கலை என் காதல், அவனுக்கோ காசு.  எனக்கு ஓவியங்கள் மீதும், அவனுக்கு ஓவியாக்கள் மீதும்.….

துவக்கத்தில் எல்லாம் சரியாய்த்தான் இருந்தது.  பிசகிய புள்ளி மிகச்சரியாகத் தெரியவில்லை என்றாலும், கிட்டத்தட்ட புரிந்து கொள்ள முடிந்தது.

மண்ணின் மீதான அச்சம் எனக்கிருந்தாலும், எதிர்பார்ப்பு என்னிடம் இல்லை.  ஆனால் மண்ணுக்கோ நிறைய எதிர்பார்ப்புகள் இருந்ததை மறுத்துவிடமுடியாது. விதை குறித்த கற்பனைச் சித்திரங்களை மண் எப்படியோ தனக்குள் வளர்ந்துக் கொண்டிருந்தது. மண்ணைப் பொறுத்தவரை விதை என்பது, அதன் வீரியத்திற்கான வடிகால்.

ஆண்  தான் பார்க்கும் அல்லது கேள்விப்படும் நிகழ்வுகளைக் தன் முன் அனுபவங்களோடு கோர்த்துப் பார்த்து, இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்து அதன் பின்புலத்திலேயே செயல்படுகின்றான்.  அவனுக்கு ஒன்று புரிவதேயில்லை, இருவர் இணைந்து பயணிக்கும் போது ஒவ்வொருவரின் செயல்பாடும் அவரவர் அனுபவத்தின்பாற்பட்டது என்பது.

என்னை முட்டாளாகப் பார்ப்பதில் தான் அவனுக்கு எவ்வளவு மகிழ்ச்சி.  எப்போதாவது என்னையறியாமல் என் புத்திசாலித்தனம் வெளிப்பட்டுவிட்டால், ம்ம்…..ம் இதெல்லாம் கூட உனக்குத்தெரியுமா? யாரு சொல்லிக் கொடுத்தா? என்ற நையாண்டி கலந்த பாராட்டில் எதோ ஒரு வன்மம் தெரியும்.

முதலில் என்னை முட்டாளாக்கும் முயற்சியில் இறங்கியவன். இயலாத பொது  முடக்கும் விதமாக என் குறைகளைப் பெரிதுபடுத்தத் தொடங்கினான்.. உறவுகளில் இருக்கும் பிரச்சனைகள், பொருளாதார சூழ்நிலை, இயலாமை, இப்படி எந்தவொரு வாய்ப்பு கிடைத்தாலும் அதைப் பயன்படுத்தி என் வாயை அடைக்கச் செய்து வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்துக் கொள்கிறான். நான் முடங்கப் பழகிக் கொண்டேன்.

அத்துடன் அந்த முதல் அத்தியாயம் முடிவடைந்திருந்தது.

அதற்காகவே காத்திருந்தவள் போலக், காப்பிக் கோப்பைகளோடு உள்ளே வரும் அம்மாவின் முகத்தை உற்றுப் பார்க்கிறேன்.  வழக்கமான, எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாத முகம், என் பார்வையைத் தவிர்த்தபடி அருகே அமர்கிறாள்.

தூரத்தில் எங்கோ பாப் மார்லி  கதறிக் கொண்டிருக்கிறார்…..

Man to man
Is so unjust


Tuesday, September 11, 2018

அவிபலி










என்ன இருந்தாலும், நீங்கள்  என்னைப் பலி கொடுத்திருக்கக் கூடாது அப்பா…………..



அவிபலி, நவகண்டம், தூங்குதலைக் கொடுத்தல், என்பதைப் பற்றி பலரும் பரவலாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதைப்பற்றிச் சொல்ல என்னிடமும் சில வரிகள் இருக்கின்றன. நானும் அப்படித்தான் ஒரு நல்ல நாளில் பலி கொடுக்கப்பட்டேன். அது ஒரு அற்புதமான அனுபவம்.  இதில் விசித்திரம் என்னவென்றால், நான் பலியாகப் போகின்றேன் என்பதும் எனக்குத் தெரியாது, ஏன் பலி கொடுக்கப்பட்டேன் என்பதும், எனக்குத் தெரியாது. எனவே இதை அவிபலி என்று சொல்லலாமா? கூடாதா? என்றும் தெரியவில்லை.


இந்தப் பழக்கம் வேட்டையாடி இனக்குழுவில், இருந்து வந்திருக்க  வேண்டும். தன் கொள்கைக்காக, தன் குடும்ப நலனுக்காக, தன் குழுவின் வெற்றிக்காக ஆட்டுக் கிடாயையோ, ஆண் எருமையையோ, சேவலையோ பலி கொடுப்பதும், அது வளர்ந்து, பின்னாளில் மனிதர்களைப் பலிகொடுக்கும் வழக்கமாக மாறியிருக்கலாம். இதைத்தான் அவிபலி என்று தொல்காப்பியமும் கூறுகிறது. இதே காரணங்களுக்காக கடவுள் முன் தன் உறுப்புகளைத் தானே அரிந்து  படையலாக்குதல், என்ற நவகண்டமும் வந்திருக்கலாம். விஜயாலயன் கல்வெட்டு ஒன்றில் நிசும்ப சூதனி என்ற கொற்றவைக்கு கோவில் எடுத்த செய்தியும் அதற்கு பலி கொடுத்ததையும் கல்வெட்டு சொல்லுகிறது.


அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அரிவராலோ,
அரிந்த சிரம் அணங்கின் கை கொடுப்பராலோ,
கொடுத்த சிரம் கொற்றவையைப் பரவுமாலோ,
குறையுடலம் கும்பிட்டு நிற்குமாலோ.
என்கிறது கலிங்கத்துப் பரணி.


மெய் வரு காளி முன்னர், மெய் உறுப்பு அனைத்தும் வீரன், கொய்வரு நிலையில் கொய்து கொடுத்தனன் என்ப மன்னோ”
என்று அரவானின் களப்பலியை வில்லி பாரதம் பேசுகிறது.

அவிபலி என்பது பெரும்பாலும் கொள்கை விருப்போடு  செய்து கொள்வது, அல்லது குடும்பத்தின் அல்லது சமூகத்தின் வேண்டுகோளின்படி செய்வது, இதை அப்படிச் சொல்வதை விட, நிர்பந்தத்தின்படி  ஒருவரைச் செய்து கொள்ள வைப்பது, என்று சொல்வதும் பொருத்தமாக இருக்கும்.  பன்னெடுங்காலமாய் தொடரும் ஒரு பழக்கமிது.  இறப்பிற்குப் பின்னால் அந்த உயிர் என்னவாகும் என்ற கேள்வியும் அது சார்ந்த பயமும், அவன் நினைவில் கல் நட்டு, விளக்கு வைத்து  வழிபடுவதும், அவன் குடும்பத்துக்கு நிதி ஆதாரங்களைச் செய்து கொடுப்பதும் வழக்கில் இருந்திருக்கின்றன

அப்படி ஒன்றும் பெரிதான கொள்கையோ, கோரிக்கையோ எனக்குள் இருந்ததில்லை. ஆனால் என்னைச் சுற்றி இருந்தோர்க்கு ஏதோ ஒன்று இருந்திருக்க வேண்டும்.  என்னை யார் கேட்டார்கள்?, நெருங்கிய சுற்றமும் குடும்பமும் இணைந்து அவர்களாகவே முடிவு செய்திருந்தார்கள்.

அவர்கள் முடிவெடுத்த ஓரிரு நாளில்,  குடும்பத்தின் சிறு சிறு சிக்கல்கள்,கவலைகள் என் முன்னால் பெரிதுபடுத்தப்பட்ட திரையில் காட்டப்பட்டன.  அவர்கள் சொல்வதை நான் அப்படியே கேட்டுக் கொண்டு செயல்படுவதன் மூலம், எதிர்காலத்தில் நானும், என்  குடும்பமும் பெறப்போகும் பெரும்பலன்களும் விரித்துரைக்கப்பட்டன. ஆனால்  என்னுடைய சிறு சிறு கேள்விகள் கூட, அவர்களைப் பெரும் பதட்டத்துக்குள்ளாக்கியது. முடிந்த அளவிற்கு நான் பெரிதாய் யோசிக்காத அளவிற்கு என்னைப் பார்த்துக் கொண்டார்கள்.

எதிர்காலத்தில் நான் அனுபவிக்கப்போகும் சொர்க்கலோகம் குறித்தான கற்பனைகளும் கூடவே சந்தேகங்களும் எனக்குள்ளே  வரத்தொடங்கின.  இதற்காகவே நெருங்கிய உறவில், ஏற்கனவே அவிபலி கொடுத்த  குடும்பங்களைச் சார்ந்த, சிலரைப் பிடித்துக் கொண்டு வந்து என்னோடு இருக்க வைத்தனர்.  அவர்களும் சொர்க்கம், தேவலோகம், இந்திரன், காமதேனு, கற்பக விருட்சம், ஐராவதம், போன்ற வற்றையெல்லாம் எனக்கு எடுத்துச் சொன்னார்கள்.


கோனேரி ராயனின் அரச பயங்கரவாதத்தை  எதிர்க்கும் வண்ணம், திருவரங்கம் தெற்கு கோபுரத்திலிருந்து அழகிய மணவாள தாசன் ஸ்ரீ கார்யம் அப்பாவையங்கார் கீழே குதித்து அரங்கனை அடைந்தாராம். தொடர்ந்து இரண்டு ஜீயர்களும் அவ்வாறே.


சுல்தானியப் படையெடுப்பையடுத்து, திருவரங்கன் ஆலயப் பண்டாரத்தைக் கொள்ளையடிப்பதைத் தடுக்க, எம்பெருமானடியார் என்ற தேவரடியார், சுல்தானியத் தளபதிக்கு இச்சையூட்டி, கிழக்கு கோபுரத்தின் மீதேற்றி அவனைக் கட்டித் தழுவியபடி கீழே குதித்து உயிர் துறந்ததாக வரலாறு.


17ஆம் நூற்றாண்டிலே, தில்லை நடராசர் ஆலயத்திற்குள் கோவிந்தராசப் பெருமானுக்குத் தனிக் கோயில் எடுக்கச் செஞ்சி நாயக்கர்கள் முயன்ற போது, தீட்சதர்கள் 20 பேர் தில்லைக் கோபுரத்தின் மீதேறிக் குதிக்க முற்பட, அரசுப் படை அவர்களைச் சுட்டுக் கொன்று தற்கொலையைத் தடுத்ததாக ஆவணங்கள் பேசுகின்றன.


சொக்கநாத நாயக்கர் ஆட்சியின் போது வறட்சியும் பஞ்சமும் வந்து, வரி கொடுக்க இயலாமல் மக்கள் துவண்டபோது, சாமி தூக்குவோரின் கூலிக்கு வரி விதித்ததைத் தாளாத கோவில் ஊழியர் மதில் மேல் ஏறிக் கீழே குதித்து இறந்தார்.


திருவரங்கம் கிழக்குக் கோபுரத்தின் வடபுற நிலைக்காலில் இருந்து பெரியாழ்வார் கூட…..


நவாப் சாகிப் ஆட்களோடு ஆங்கிலப் படை திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் நுழைவதைத் தடுக்க வைராளி முத்துக் கருப்பன் மகன் குட்டி என்பவனை உயிர்த்தியாகம் செய்ய வேண்ட, சமூகத்திற்காக அவனும் அவ்வாறே செய்தான். எல்லப்ப முதலி மகன் ஆண்டராவளி முதலியும் இதைச் செய்தான்.

 தெய்வேந்திரபட்டர், குட்டிபட்டி பட்டர்
சிதம்பரம் பிள்ளை, விழுப்பாத ரய்யர் ஆறுகரைப்
பேர் உள்ளிட்டாரும் கூடி வயிராவி முத்துக் கருப்பன்
மகன் குட்டி வயிராவியை கோபுரத்திலேறி விழச்
சொல்லி அவன் விழுந்து பாளையம் வாங்கிப் போன
படியினாலே அவனுக்கு ரத்தகாணிக்கைப் பட்டயம்
எழுதிக் கொடுத்தோம்...! என்று ஒரு கல்வெட்டு பேசுகிறது.

குட்டி வயிராவிக்கும்  வேறு வழியிருந்திருக்காது. அவனை யோசிக்கவே விட்டிருக்கமாட்டார்கள். எனக்குத்தான் அனுபவம் இருக்கிறதே. நானொன்றும் கதைகளைப் படித்து, அவிபலி குறித்துப் பேசவில்லை. அனுபவத்தில் பேசுகிறேன். தேவேந்திர பட்டர், குட்டி பட்டர், சிதம்பரம் பிள்ளை,விழுப்பாதரய்யர், ஆறுகரைப்பேர் மற்றும் ஊரே திரண்டு வந்து வயிராவி முத்துக் குட்டியைக் கேட்டுக் கொண்டதால் அவனும் அவர்களோடு சேர்ந்து அவன் மகன், குட்டி வயிராவியைக் கேட்டுக் கொண்டதால், அவன் கோபுரத்தின் மீதேறிக் குதித்தான். என் கதையும் இதேதான்.  பெயர்களும் உறவுமுறையும்  தான் வேறு வேறு. 


தன் அவயங்களை தானே ஒன்றொன்றாக அறுத்துப் பலியிடுபவனாகவோ? தன் நம்பிக்கைக்காக, அல்லது தன் சமூகத்தின் நம்பிக்கைக்காக, அல்லது தன் குடும்பத்தின் வேண்டுகோளுக்காக, அல்லது வேறு எதோ ஒரு காரணத்திற்காக மதிலேரிக்குதிப்பவனை,  கத்தியை நிலத்தில் ஊன்றி அதன் மீது வீழ்பவனை, களப்பலியாக தன்னையே ஒப்புக் கொடுக்கிறவனைப் பற்றி என்ன பெரிதாய்ச் சொல்லிவிடமுடியும்.

”அவிபலி” இது ஒன்றும் இரவோடிரவாக, யாருக்கும் தெரியாமல்  கயிற்றில் தொங்குவதோ, அரளி விதையைக் குடிப்பதோ அல்ல.  பலியாகுபவரை அழைத்து மஞ்சள், ஏலம், பச்சைக் கற்பூரம், சந்தனம் கரைத்த நீரிலே நீராட்டி, திருநீறும் குங்குமம் சாற்றி, புத்தம் புதிய பட்டாடைகள் அணிவித்து, ஆபரணங்கள் பூட்டி, பரிமள களப கஸ்தூரி பூசி, வெற்றிலை பாக்கு கையில் கொடுத்து,  கொம்பு, காளம், மல்லாரி,  சங்கு, மேளம் என பஞ்ச வாத்தியங்கள் முழங்க, பஞ்ச தீவட்டிகளோடு, மாற்று நடை சாற்றின் மேல் நடந்து, நடன சங்கீதங்களோடு, மாநகரின் நான்கு வீதிகளிலும் உலா வர வழியெங்கும்  உற்றார், ஊரார்  மலர் தூவி,  வாழ்த்த, சமய முதலி முன்னின்று நற்கதி அடைய என்று வாழ்த்த ”நற்பலி” நடந்தேறும்.

என்னையும்  இப்படித்தான் பலி கொடுத்தார்கள். என்னவொரு வித்தியாசம் எனக்கான காரணம் வேறாக இருந்ததோடு,  அவிபலியாக்கப் பட்ட பின்னும் தொடர்ந்து முளைத்தெழும் என் உறுப்புகளை அரிந்து அரிந்து நவகண்டம் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன் இன்று வரை.   


பொதுவாகக் ஆட்டுக் கிடாயை, சேவலை, வாராளி முத்துக் கருப்பன் மகன் குட்டியை, எல்லப்ப முதலி மகன் ஆண்டவராளியை என போத்தைத்தானே பலி கொடுப்பார்கள். பெட்டைகளைப் பலியிடுவது வரலாற்றிலும் வழக்கில்லையே. அப்படியே இருந்தாலும், என்னை நீங்கள் பலி கொடுத்திருக்ககூடாது அப்பா………

எந்தக் குலத்தைக் காக்க, எந்த  சமூகத்தின் மீதான நம்பிக்கையில், எந்தச் சாமியின் மனங்குளிர, என்னைப் பலி கொடுத்தீர்களோ அந்தச் சாமியும், அதுகுறித்தான நம்பிக்கையும் இனியாவது பலி கேட்காமலிருக்கட்டும்.
  
நல்லதொரு நாளில், தோட்டத்துத் தெற்கு வலவில் இருக்கும் அந்த ஒற்றை வேப்ப மர நிழலில் எனக்கான ஒரு நடுகல்லைத் தேடியெடுத்து நட்டுவைத்து விடுங்கள். அது, இன்னும், உங்கள் மீதான என் நம்பிக்கைக்கும் அன்பிற்குமான அடையாளமாக இருந்துவிட்டுப் போகட்டும்.