Thursday, April 26, 2012

நளவெண்பா -2




தமயந்தியை மணக்கச் சுயம்வரத்திற்கு செல்லும் நளனை  வருணன், இயமன், அக்கினியோடு வரும் இந்திரன் பார்த்து, நாங்கள் ஏவும் வேலைக்கு இசைவு தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றனர். நளனும் என்னவென்று கேட்காமல் இசைகின்றான்.

தமயந்தி எங்களில் ஒருவருக்கு மணஞ்சூட்டுமாறு அவளிடம் தூது போக வேண்டுகின்றனர். 

காதலிக்கிறான் என்று தெரிந்தும், காதலிப்பவனையே தூதாக அனுப்ப முடிவு செய்த இந்திரனின் திறமையையும்,  என்னை மணக்க தூது செல் என்றுசொல்லாமல், எங்களில் ஒருவருக்கு என்று கூறும் தேவர்களின் பொதுவுடமைக் கோட்பாட்டையும் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

செங்கண் மதயானைத் தேர்வேந்தே தேமாலை
எங்களிலே சூட்ட இயல்வீமன் - மங்கைபால்
தூதாக
என்றானத் தோகையைத்தன் ஆகத்தால்
கோதாக வென்றான்அக் கோ.

தேவர்கள் இட்ட பணியைத் தலைமேல் சுமந்து செல்லும் நளனுடைய மனம்  தேவர்கள் பாலும், தன் காதலியின் பாலும் துணி நெசவில் பாவிற்கு இடையே சென்று சென்று வரும் ஊடை நூல் தாங்கும் மூங்கில் குழல் போல் மாறி மாறி சென்று வந்தது.   அட….அட…..என்ன கற்பனை.

தேவர் பணி தலைமேற் செல்லுந் திரிந்தொருநான்
மேவும் இளங் கன்னிபால் மீண்டேகும்- பாவிற்
குழல்போல் நின்று உழலுங் கொள்கைத்தே பூவின்
நிழல் போலுந் தண்குடையான் நெஞ்சு.


வேறு வழியின்றி கொடுத்த வாக்கை காப்பாற்ற, நளன் தமயந்தியை நோக்கிச் செல்கின்றான். காவலர் அறியாமற் செல்லும் பொருட்டு, நளன் தம் உருத்தெரியாமல் எங்கே வேண்டுமானாலும் செல்லும் வகையில், ‘மாலிகாஞ்சனம்” என்னும் மந்திரத்தை உபதேசித்து அனுப்புகிறான் இந்திரன்.

நளனும் தமயந்தியும் சந்திக்கின்றனர்.

நீண்ட கூந்தலை உடைய தமயந்தி தன் காதல் வேட்கையை, விருப்பத்தை தனக்குள்ளே அடக்கி வீட்டுள் தாளிட்டு, வைப்பதுபோல வைத்திருந்தாள்.
பெரிய தாமரை மலர்களை நீலோற்ப மலர் சென்று தீண்டுவது போல், இருவரது கண்களும் ஒன்றோடொன்று பொருந்திய மாத்திரையில் நாணம் ஒழிந்து நின்றாள்.

நீண்ட கமலத்தை நீலக் கடைசென்று
தீண்டும் அளவிற் திறந்ததே- பூண்டதோர்
அற்பின் தாழ் கூந்தலாள் வேட்கை அகத்தடக்கிக்
கற்பின்றாழ் வீழ்ந்த கதவு.
 
நளனின் வலிமையான, அழகான பரந்த நெஞ்சையும், தோள்களையும் தன் கண்களால் பரிசிக்கிறாள் தமயந்தி.  நெஞ்சு தடவும் நெடுங்கண்கள், விஞ்சவே நீண்டதோ?  பெரிய செந்தாமரை மலரில் உள்ள திருமகள் தனக்கு இடமாகக் கொண்டிருக்கும் கடல் போன்ற,  நளனின் அழகாகிய கடலை நீந்திக் கரையேறுவது எப்படி என்று ஆச்சரியப்பட்டதாக எழுதுகிறார் கவிஞர்.

உய்ஞ்சு கரை ஏற ஒட்டுங்கொலோ ஒண் தொடியாள்
நெஞ்சு தடவு நெடுங்கண்கள்- விஞ்சவே
நீண்டதோ வங்ஙனே, யிங்ஙனே நீண் மலராள்
ஆண்டதோள் மன்னன் அழகு.

மிகுந்த அழகுடையவனாக விளங்குகின்ற நளனின் மீது மோகங்கொண்ட தமயந்தி, அவனை இறுகத் தழுவ நினைக்கின்றாள் ஆனால் நாணம் வந்து தடுத்துவிடுகிறது. தான் கொண்ட பெரிய  யானை போன்ற ஆசையை, நாணம் என்ற சிறிய கட்டுந்தறி உள் புகுந்து தடுத்துவிட்டது என்பதாகப் பொருள். எழுந்த காமத்திற்கு “ எடுத்த பேரண்பு” என்றே சொல்லுகிறார். 

மன்னாகத்துள் அழுந்தி வார் அணிந்த மென் முலையும்
பொன் நாணும் புக்கொளிப்பப் புல்லுவான்  என்றுன்னா
எடுத்த பேரண்பிடையே புகுந்து
தடுத்ததே நாணந் தறி.

ஸ்ஸ்ப்ப்பா…………………முடியல…….

பாலாப் பழத்தை பிச்சி சொளையெடுக்கறமாதர இருக்கு, பழத்து மேல இருக்கிற ஆசை படிக்கறது மாதிரியும், எழுதறது அதிலிருக்கற பிசின் மாதிரியும் இருக்குது……...

இப்போதைக்கு முடியாது போல இருக்குது இந்த  நளவெண்பா….. …….வருசம் புடிக்குமாட்டமிருக்குது படிச்சி, முடிக்க.

நன்றி:
நளவெண்பா மூலமும் உரையும்:
வீ. ஆறுமுகஞ்சேர்வை, தலைமைத்தமிழாசிரியர், மதுரை அமெரிக்கன் கல்லூரி
ஆ. கார்மேகக் கோனார், தலைமைத் தமிழாசிரியர், மதுரை சொளராஸ்டிரா ஹைஸ்கூல்,
பு. சிதம்பர புன்னைவன நாத முதலியார் ஆகியோர் இணைந்து விருத்தியுரை எழுதியது.



2 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_23.html) சென்று பார்க்கவும்...

நன்றி...

Dino LA said...

அருமை