Thursday, April 12, 2012

நளவெண்பா










சிறு வயதில், கோவில் விழாக்களில், நளன் தமயந்தி கதை என்னும் கூத்து நடத்தப் படும்போது பார்த்திருக்கின்றேன். அப்பொழுதெல்லாம் அது எனக்குப் புரியவும் இல்லை.  நள வெண்பா, இராமயணம், பாரதம், பகவத்கீதை போன்றவற்றை வீட்டில் வைத்திருக்கக் கூடாது. படிக்கவும் கூடாது என்ற நம்பிக்கை கொங்கு மண்டலத்தில் ஒரு சாராரிடம் உண்டு.  ,

நளவெண்பாவில் நிறைந்திருக்கும் கவிதையுணர்ச்சி, மொழி ஆளுமை, காட்சிப் படுத்துதல், போன்ற பலவும் நம்மை வியப்பில் ஆழ்த்தியது உண்மை. 

மொத்த நளவெண்பாவுக்கு உரை எழுதும் அளவிற்கு நான் தமிழ் படித்த புலவனும் இல்லை, அதற்குண்டான பொறுமையும் எனக்கு இல்லை.  எனவே நான் ரசித்த சிலபல பாடல்களை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

புகழேந்திப் புலவர்:

தொண்டை நாட்டிலே பிறந்து, பாண்டியன் வரகுணன் அவையிலே இருந்தவர், சோழன் குலோத்துங்கன், பாண்டியன் வரகுணன் மகளை மணந்த போது இவரும் குலோத்துங்கன் அரசவைக்கு வந்து ஒட்டக் கூத்தருடன் பல இலக்கிய மோதல்களை நடத்தியவர்.

ஒட்டக் கூத்தரோடு மன வேறுபாடு கொண்டிருந்த காலத்தில் மள்ளுவ நாட்டைச் சார்ந்த குறுநில மன்னன் சந்திரன் சுவர்க்கியின் ஆதரவோடு வாழ்ந்து வந்தார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க நள வெண்பா இயற்றியதாக கூறப் படுகிறது.

விநாயகர், நம்மாழ்வார், திருமால், சிவபெருமான், முருகன் ஆகியோர் பெயரில் கடவுள் வணக்கம், எழுதி பின் அவையடக்கம் நூலாசிரியர்  பற்றிய குறிப்போடு தொடங்குகிறது.

சுயம்வர காண்டம்
கலி தொடர் காண்டம்
கலி நீங்கு காண்டம்
என்ற மூன்று காண்டங்களை உள்ளடக்கி எழுதப் பட்டிருக்கிறது

கதைச் சுருக்கம்:

மகாபாரதக் கதையோடு பின்னப் பட்ட ஒரு கதையாகவே நளவெண்பா தொடர்கிறது.  வனத்திலே தங்கியிருக்கும் தருமனைக் காணவருகிறார் வேத வியாசர். நாடாண்ட தான் இப்படி வனம் புகுந்தது குறித்து வருத்தப் படுகிறார் தருமர்.  இது போன்று நாடிழந்து வனமேகி வாழும் நிலை ஏன் ஏற்பட்டது?, இது போன்ற துயர் வேறு யாருக்கும் வந்திருக்கிறதா இவ்வுலகத்திலே என்று தருமர் கேட்க, நளனின் கதையைச் சொல்லத் தொடங்குகிறார் வேத வியாசர்.

நிடத நாட்டுச் சிறப்பைச் சொல்லி, மாவிந்த நகர்ச் சிறப்பைச் சொல்லித் தொடங்குகிறார். அதன் மன்னன் நளன்.

நளன் சிறப்பு:

ஓடாத தானை நளனென்றுளன் ஒருவன்
பீடாரும் செல்வப் பெடை வண்டோ- டூடா
முருகுடைய மாதர் முலை நனைக்கும் தண் தார்
அருகுடையான் வெண்குடையான் ஆங்கு.

நளன் செங்கோல்:

சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறம்கிடைப்பத்
தாதவிழ்பூ ந்தாரான் தனிக் காத்தான்- மாதர்
அருகூட்டும் பைங்கிளியும் ஆடற் பருந்தும்
ஒருகூட்டில் வாழ உலகு.


வேனிற்காலம் தொடங்கும் நாளில்,நளன் ஒருநாள் பூஞ்சோலைக்கு உலாவப் போகிறான், அங்கே ஒரு அன்னப் பறவையை காண்கிறான். அதைப் பிடித்து வரும்படிக்கு கூறுகிறான். அந்தப்புற சேடிப் பெண்களும் அதைப் பிடித்து வருகின்றனர். அன்னப் பறவையின் அழகைக் கண்டு வியந்து அதனோடு பேசுகிறான். அன்னப்பறவையும் பயம் நீங்கி நளனோடு அளவளாவுகிறது.

இவ்வாறு தொடரும்போது, தமயந்தியைப் பற்றி அன்னப் பறவை கூறுகிறது. விதர்ப்ப நாட்டின் மன்னன் மகள் தமயந்தி அவள்தான் உனக்குப் பொருத்தமானவள் என்று கூறி தமயந்தியின் அழகைச் சொல்லுகிறது அன்னம்.  ரசனையான வரிகள்:


ஆளுமே பெண்மை அரசு:

நாற் குணமும் நாற்படையாம், ஐம்புலனும் நல் அமைச்சர்
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசாம், வேற்படையும்
வாளுமே கண்ணாம் வதனமதிக் குடைக்கீழ்
ஆளுமே பெண்மை அரசு.


புலம்பும் நூபுரங்கள் : (நூபுரம்-காற்சிலம்பு)

மேட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற
மாட்டது இடை என்று வாய்விட்டு-நாட்டேன்
அலம்புவார் கோதை அடியணையில் வீழ்ந்து
புலம்புமாம் நூபுரங்கள் பூண்டு

நுடங்கும் இடை:

என்றும் நுடங்கும் இடையென்ப ஏழுலகம்
நின்ற கவிகை நிழல் வேந்தே- ஒன்றி
அறுகால் சிறுபறவை அஞ்சிறகால் வீசும்
சிறுகாற்றுக்கு ஆற்றாது தேய்ந்து.

மலர்வாளி தீட்டும் இடை:

செந்தேன் மொழியாள் செறியளகப் பந்தியின் கீழ்
இந்து முறியென்று இயம்புவர்-வந்தென்றும்
பூவாளி வேந்தன் பொருவெஞ் சிலைசார்த்தி
ஏவாளி தீட்டும் இடம்

அன்னம் விடுதூது:
தமயந்தியின் அழகைக் கேட்டு வியந்த நளன் அன்னத்தை தூதாக அனுப்புகிறான்.

வீமன் திருமடந்தை மென்முலையை உன்னுடைய
வாம நெடும்புயத்தே வைகுவைப்பேன் என்று உறுதிகூறிப் பறக்கிறது அன்னம்.

விரகதாபத்தில் நளன்:

இவ்வளவிற் செல்லுங்கொல், இவ்வளவிற்காணுங்கொல்
இவ்வளவிற் காதல் இயம்புங்கொல் – இவ்வளவில்
மீளுங்கொல் என்றுரையா விம்மினான் மும்மதம் நின்
நின்றாளுங் கொல் அரசு.

சேவல் குயிற்பேடைக்குப் பேசும் சிறுகுரல் கேட்டு
ஆவி உருகி அழிந்திட்டான் – பூவின்
இடையன்னம் செங்கால் இளவன்னம் சொன்ன
நடையன்னம் தன்பால் நயந்து.


காமவிடாய் ஆறேனோ?

கொங்கை இளநீரால், குளிர்ந்த இளஞ் சொற்கரும்பால்
பொங்கு சுழி என்னும் பூந்தடத்தில் – மங்கை நறும்
கொய்தாம வாசக் குழல்நிழற்கீழ் ஆறேனோ
வெய்தாமக் காமவிடாய்

தூதாகச் சென்ற அன்னம் நளனின் அருமை பெருமைகளையெல்லாம் சொல்ல, தமயந்தியும் காதல் வசப் படுகின்றாள்.

மன்னன் மனத்தெழுந்த மையல் நோய் அத்தனையும்
அன்னம் உரைக்க, அகமுருகி – முன்னம்
முயங்கினாள் போல் தன் முலை முகத்தைப் பாரா
மயங்கினாள் என்செய்வாள் மற்று

காதல் வசப்பட்ட தன் நிலையை நளனுக்கு தெரிவித்து வருமாறு அன்னத்தை வேண்டுகிறாள் தமயந்தி.

மன்னன் புயம் நின் வனமுலைக்கு கச்சாகும்
என்ன முயங்குவிப்பேன் 

என்று அன்னம் உறுதிகூறி நளனைக் காணப் புறப்பட்டது.

தமயந்தியின் நிலை மாற்றத்தை உணர்ந்து தோழிகள் அவள் தாயிடம் கூற, அவளும் வீமராசனிடம் மகளுக்கு மணம் முடிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்த, அரசனும், சுயம்வரத்திற்காக முரசு அறிவிக்கிறார். பல நாட்டு மன்னர்களும், திரண்டு வருகின்றனர் சுயம்வரத்திற்காக.

நளனைக் காண  அன்னம்  வருதல்:

வழிமேல் விழிவைத்து வாள்நுதலால் நாம
மொழிமேல் செவிவைத்து மோகச் – சுழிமேல்தன்
நெஞ்சாட வைத்தயர்வான் கண்டான் நெடுவானில்
மஞ்சோட அன்னம் வர.

தமயந்தியின் காதல் குறித்துக் கேட்ட நளன்

கேட்ட செவிவழியே கேளாத உணர்வோட
ஓட்டை மனத்தோடு உயிர்தாங்கி – மீட்டும்
குழியிற் படுகரிபோல் கோமான் கிடந்தான்
தழலிற் படுதளிர் போற் சாய்ந்து.

வீமராசனின் தூதுவர் நளனிடம் வந்து சுயம்வரம் குறித்துக் கூறி அழைக்கின்றனர். நளனும் தேர் பூட்டிப் புறப்படுகின்றான்.

இந்த நேரத்திலே இந்திரனைக் காண வானுலகம் செல்லுகிறார் நாரதமுனி. அங்கே சென்றவர் தமந்தியின் சிறப்பையும், அவளின் சுயம்வரம் பற்றியும் கூறுகிறார்.

அழகு சுமந்திளைத்த ஆகத்தால் வண்டு
பழகு கருங்கூந்தற் பாவை – மழ களிற்று
வீமன் குலத்துக்கோர் மெய்த்தீபம் மற்றவளே
காமன் திருவுக்கோர் காப்பு.

தமயந்தியின் அழகில் மயங்கி, இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் சுயம்வரத்தில் கலந்து கொண்டு தமயந்தியை மணக்க விரும்பி வருகின்றனர்.

மீதியை மீண்டும் தொடர்வேன்……


http://tamilkirukkan.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D/

5 comments :

பவள சங்கரி said...

ஆகா.... தொடருங்கள். சுவையான பகுதியாக தேர்ந்தெடுத்தல்லவோ கொடுத்திருக்கிறீர்கள்....ம்ம் ..

அன்புடன்

பவள சங்கரி.

s.vinaitheerthan said...

திரு ஆரூரன்,
மிந்தமிழ் மூலம் தங்கள் தளத்தைப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
மிகச் சிறப்பாக எழுதுகிறீகள்.
நளவெண்பா பாடல்கள் தேர்ந்து தெள்ளிய அருமையான இணைப்புரையுடன் எழுதியுள்ளீர்கள்.
நற்பணி தொடர வாழ்த்துக்கள்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

s.vinaitheerthan said...

திரு ஆரூரன்,
மிந்தமிழ் மூலம் தங்கள் தளத்தைப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
மிகச் சிறப்பாக எழுதுகிறீகள்.
நளவெண்பா பாடல்கள் தேர்ந்து தெள்ளிய அருமையான இணைப்புரையுடன் எழுதியுள்ளீர்கள்.
நற்பணி தொடர வாழ்த்துக்கள்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

பழமைபேசி said...

சாயுங்காலம் வந்து நுகர்ந்து பயனுற வேண்டுமுங்க மாப்பு!!

Anonymous said...

புகழேந்திப் புலவரின் மொத்த நளவெண்பாவுக்கு உரை எழுதும் அளவிற்கு உங்களுக்குத் தமிழ்ப் புலமை உள்ளது. அதற்குண்டான பொறுமையும் உங்களுக்கு உண்டு. எனவே நீங்கள் ரசித்த எல்லாப் பாடல்களையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

அன்பன்
கி.காளைராசன்