Wednesday, November 04, 2009

ஆசை முகமறந்து போச்சே............தொடர்ச்சி(2)


கற்பனைகளோ, கனவுகளோ
இல்லாத நிச்சலனத்தில்-உள்ளம்

இயந்திரத்தனமான உலகில்
எப்பொழுதும் போலியான-புன்சிரிப்பு

செல்லரித்த சொந்தங்களின்
சுயநல பந்தங்களின் பிடியில்-வாழ்க்கை

கண்டதே காட்சி,
கொண்டதே கோலம் எனும்-கொள்கை

சாக்கடைச் சமுதாயத்தில்
சத்தமில்லாமல் தொலைந்தது-சந்தோசம்

வெளியெங்கும் வர்ணஜாலம்
வழி தவறிய குழந்தையாய்-நான்
 

பல்லாண்டுப் போரில்
புண்ணாகிப்போனது-உடலும், உள்ளமும்.

வசந்தங்களை வார்த்தைகளால்
மட்டுமே அறிந்தவன்

அன்பையும், பாசத்தையும்
கனவுகளில் மட்டுமே கண்டவன்

 
எத்தனை யுத்தங்கள்
எத்தனை காயங்கள், எஞ்சியது
வலியும் வேதனைகளும் தான்.

கனவுகளை நனவாக்க
வசந்தத்தை வாழ்க்கையாக்க
முறையாக வரவேண்டும் உயிரேஉன் மார்பில்
முகம் புதைத்து அழவேண்டும்.
                       
இரவோடு இணையாக
களவோடு களியாக
இன்பங்கள் இழைந்தாட நானும்-இனியேனும்
இளைப்பாற வேண்டும்.
          

தோளோடு தோள்சாய்ந்து
உடலோடு, உயிர்சேர்ந்து
உறவாடி விளையாடி நானும்-இனியேனும்
வலி நீங்க வேண்டும்.


இது நான் அவளுக்கு எழுதிய முதல் கடிதம். 


உண்மையில் ஆண் ஒரு கோழை.  பயம் அவன் உள்ளத்தில், 
ஒளிந்திருக்கும்.  காலம் காலமாக நடைமுறையிலிருக்கும் 
சமூக கோட்பாடுகளும், நம்பிக்கைகளும் அவனை ஒரு
கோழையாகவே வளர்த்து வருகிறது.

தன்னை உயர்ந்தவனாக, தைரியமானவனாக காட்டிக் கொள்ள 
படாத பாடு படவேண்டியிருக்கிறது.


சமூகம் ஆண்பிள்ளை என்ற,  ஒரு  உதவாத பட்டத்தை
கொடுத்திருப்பது மிகப் பெரிய வேடிக்கை.  சிறு குழந்தைகளாக
இருக்கும் போது கூட வீட்டில் பெண்கள் ஆண் பிள்ளைகளுக்கு
முக்கியத்துவம் கொடுப்பதும்,

“அவனுக்கு எல்லாந் தெரியும்”.  “அவனுக்கு கோவம் வரும்”  “ அவனுக்கு பிடிக்காது”  “அவன், அவனோட அப்பா மாதிரி”  “ஆம்பிளைப் பையன் அப்படித்தான் இருப்பான்”

இப்படி ஏத்திவிட்டே “அவனுக்கு” ஒரு உருவகம் கொடுத்துவிட்டார்கள். உருவகப்படுத்தப்பட்ட “அவனுக்கு”  இயல்பான, உண்மையான அவனோடு ஒத்துப் போக முடிவதில்லை.


“தி லாஸ்ட் எம்பரர்” திரைப்படத்தில் ஒரு காட்சி.
இரண்டு குழந்தைகள் வயது சுமார் 6 இருக்கும். 
ஒரு குழந்தை நாட்டின் மன்னனின் மகன். ஒருகுழந்தை அவன் நண்பன். 

நேற்றுவரை தன்னோடு விளையாடிய அரச குடும்பத்து 
வாரிசை விளையாட அழைப்பான் அவன் நண்பன்.
தந்தை இறந்ததால் நள்ளிரவில் அரசனாக முடிசூட்டப் பட்ட
அந்த ஆறுவயது   குழந்தை சொல்லும்
” அரசர்கள் விளையாடுவதில்லை” என்று.


இப்படித்தான் எல்லா பெண்களும் தன் பிள்ளைகளுக்கு முடிசூட்டி, 
பட்டம் கட்டி வளர்க்கின்றனர்.  அதனால் இல்லாத ராச்சியத்தை ஆள,
அவனுக்கு ஏவல் செய்ய, முகஸ்துதி செய்ய, ஒரு அடிமை 
தேவைப்படுகிறது.  அப்படிக் கிடைப்பவள் தான் மனைவி.   
எங்கும் வெளிக்காட்ட முடியாத அவன் இயலாமை அவனை இன்னும் மோசமாக்குகிறது.  அவனுக்கு கிடைத்த வடிகால் “மனைவி.”


இங்கே ஆணுக்கு ஒளிந்து கொள்ள ஒரு இடம் தேவைப்படுகிறது.
தன் வக்கிரங்களை வெளிக்காட்ட ஒரு இடம் தேவைப்படுகிறது.
ஊருக்காக, சமூகத்திற்காக, நட்பிற்காக, போடும் வேடத்தை 
கலைத்து இயல்பாய் இருக்க வேண்டிய அவசிமாகிறது.


தன்னை வீரனாக, தைரியமானவனாக, மற்றவர்களிடமிருந்து 
உயர்ந்தவனாக காட்டிக் கொள்ளும் முயற்சிதான், 
குடித்துவிட்டு வீரம் பேசுவதும், தன்னைவிட பலம் 
குறைந்தவர்களை அடிக்க முற்படுவதும், சாதாரண மக்களிடம் தன் அறிவுஜீவித்தனங்களை காட்ட முற்படுவதும். அதுவும்,
பார்வையில் படும்படி ஒரு பெண் தெரிந்துவிட்டால் 
இவன் வீரம் அளவிடமுடியாது.



இவனுக்கு எதையும்  சாதிக்க ஏதோ ஒரு பெண்
பெரிதும் துணை நிற்கிறாள்.   அந்தப் பெண் 
மனைவியோ, தாயோ, தோழியோ, யாரோ 
முகமறியா விலைமகளாகவோ,கூட இருக்கலாம். 

பெண்ணை வெற்றி கொள்வது ஆணுக்கு பெருமகிழ்ச்சி
கொடுக்கிறது. பெண்ணிடம் தோற்பது இழிவாகவும், வெல்வது
கவுரமாகவும் சொல்லிக் கொடுக்கப்பட்டு வளர்க்கப் படுகிறது.

விலைமாதர்களின் வாடிக்கைக் காரர்கள் கூட அவளை
வருத்தி,அவள் வலியில் இன்பம் காண்பதாக சொல்லப்படுகிறது. 
வீட்டில் தன் மனைவியிடம் அல்லது அவள் முன் செய்ய முடியாததை,
கேட்க முடியாததை,விலைமகளிடம் கேட்கிறான், செய்கிறான்.
அதன் மூலம், ஏதோ சாதித்ததாக உணர்கிறான். 

அவளையும் பெண்ணாக  மதித்து, கொஞ்சி, தேவையை 
பூர்த்தி செய்து மகிழ்வித்து மகிழும் ஆண்கள் மிகக் குறைவே.


தன்னை மற்றவர்கள் கொண்டாட வேண்டும், பாராட்ட வேண்டும்,
தனக்காக ஏதாவது சிறப்பாக செய்யவேண்டும், என்பதில் ஆண்மனம் 
அளவில்லா மகிழ்ச்சி  கொள்கிறது.   தாயும், மனைவியும் மட்டுமே, எதையும் எதிர்பார்க்காமல், (வேறு வழியின்றி) அவனை அப்படி கொண்டாடமுடியும்.

அவர்களிடமும் அதை பெறமுடியாதவன்,  ஏதோஒரு வகையில் மன பாதிப்பிற்குள்ளாகிறான்.

ஆண்கள் பொதுவாக இரண்டு வகை. 
எதிர்க்க முடியாத ஆளுமைக்கு அடிபணிந்தாலும், அதை
வெளிக்காட்ட முடியாத போது அதை வீட்டிலோ, 
அங்கும் முடியாத போது, வேறெங்கோ செல்லுமிடத்தில் தன்
ஆளுமையை வெளிக்காட்டி வடிகால் தேடுவது ஒருவிதம். 

தனக்குள்ளே அழுத்தி, அழுது, அழுது, அன்பு, குடும்பம்
என்ற போர்வையால் அதை மூடி  வலிகளை மறைத்து, மறக்க 
முற்பட்டு தனக்குள்ளே அமைதி தேடுபவன் அடுத்த ரகம். 

இதில் நான் மட்டுமல்ல நம்மில் பலரும் இரண்டாம் ரகம் தான்.




இப்படி சில எதிர்பார்ப்புகளோடு நானும், அதே போல்
சில எதிர்பார்ப்புகளோடு அவளும் மணவாழ்வில் 
இணைந்தோம்.........................




நான் அவளிடம் தேடியதும், அவள் என்னிடம் தேடியதும்-நாளை




உங்கள் கருத்துரைகள் வரவேற்கப் படுகின்றன.
தமிழ் மணத்தில் வாக்கைப் பதிவு செய்யுங்கள்..


8 comments :

vasu balaji said...

ஆரூரன்! மூன்று முறை படித்தேன். இன்னும் படிப்பேன்.
/உண்மையில் ஆண் ஒரு கோழை. பயம் அவன் உள்ளத்தில்,
ஒளிந்திருக்கும். காலம் காலமாக நடைமுறையிலிருக்கும்
சமூக கோட்பாடுகளும், நம்பிக்கைகளும் அவனை ஒரு
கோழையாகவே வளர்த்து வருகிறது./

ரொம்பச் சரி.

/இதில் நான் மட்டுமல்ல நம்மில் பலரும் இரண்டாம் ரகம் தான்./

ம்ம்

கண்ணகி said...

ஆஹா. உண்மையை மனம் திரந்து சொல்லிவிட்டீர்கள். அழ்கு. கீப் இட் அப்.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி பாலாண்ணே......

எனக்குத் தெரிந்ததை, புரிந்து கொள்ள முயற்சிப்பதை, எழுதுகிறேன்.

நன்றி

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி வாத்துக் கோழி.....

என்னைப் பற்றி நான் அறிய முயலும் முயற்சியின் சிறு துளியே.

நன்றி

கலகலப்ரியா said...

அருமை ஆரூர்..! எழுத்தில் நிறைய முதிர்ச்சி தெரியறது...!

ஹேமா said...

எல்லா ஆண்களும் சொல்லத் தயங்கும் உண்மையை உண்மையாகவே வெளிப்படுத்தியமைக்கு வாழ்த்துக்கள்.

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி ப்ரியா.....

நன்றி ஹேமா.....

thiyaa said...

நல்ல கருத்துக்கள் எத்தனை முறை படித்தாலும் தகும்.நம்பிக்கை தரும் வரிகள்.