Thursday, August 06, 2009

எத்தனை பெரியார் வந்தாலும் இவனுங்களைத் திருத்த முடியாது

பார்ப்பணீயம், ஆதிக்க சமுதாயம், மனு தர்மம், வர்ணாசிரமம், சூத்திரன், சண்டாளன்,ஆரிய மயமாக்கல் என்றெல்லாம் பலரும் பல்வேறு காரணங்களுக்காக பேசி வருகின்றனர். இலக்கிய உலகிலும் இது பல்கி பெருகி வருவதை காணமுடிகிறது. நவீன இலக்கியத்தின் வரைகளாக தலித்தியம், பெண்ணியம், இன்னும் இது போல பல இசங்கள்,இயங்கள் கூட பெரியார் தயவில் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
சமீப காலங்களில், பெரியாரை வம்பிற்க்கும் வழித்துணைக்கும் இழுக்காத ஆட்களே இல்லை. கட்சிகளே இல்லை, கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இந்த “பெரியார் மயமாக்கல்” எதற்காக? என்பது தான் புரியாத புதிர். பலரும் பெரியாரைப்பற்றியும், அவரின் சமூக விழிப்புணர்வு கருத்துக்களைப் பற்றியும் பரவலாக மேடைகளில் பேசுவதை காணமுடிகிறது. திராவிடர்கழக நண்பர்கள் மத்தியில் மட்டுமே பேசப்பட்டு வந்த பெரியாரி(சம்?) இன்று பேசப்படாத மேடைகளே இல்லை, எழுதப்படாத வலைத்தளங்களும் இல்லை,பேசாத இலக்கிய வாதிகளும் இல்லை. மேல் தட்டு சீமாண்கள்(திறனாளர். சீமான் அல்ல) கூட தங்களை சமூக நீதி காப்பாளர்களாக காட்டிக் கொள்ள பெரியாரை துணை கொள்கின்றனர்.
பல தலித் இலக்கிய வாதிகளின் பேச்சு மற்றும் எழுத்துக்களை கவனிக்கும் போது, அவர்கள் இன்னும் பார்ப்பண ஆதிக்க சமுதாயம், சூத்திரன் என்ற வார்தைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இவர்கள் எந்த பார்ப்பணனிடம் அடிமையாக இருந்தனர் என்று தெரியவில்லை. உயர்ஜாதி இந்துக்களாக தங்களை சித்தரித்து கொள்கிற அல்லது சொல்லித் திரிந்துகொண்டிருக்கிற மதவாதிகளுக்கு எதிரான போராட்டங்களை இவர்கள் முன்னெடுத்துச் செல்வதில்லை.   பிறப்பால் உயர்ந்தவன் என்பதை பார்ப்பணன் சத்திரியனிடமும்,   பார்ப்பணன், சத்திரியன், இருவரும் சேர்ந்து வைசியனிடமும்.   இம்மூவரும் சேர்ந்து சூத்திரனிடமும்  நிலைநிறுத்த முற்படுகின்றனர் என்ற உண்மையை இவர்களால் ஏன் சொல்லமுடியவில்லை? எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் பார்ப்பண வட்டம், தனக்குச் சமமாக இல்லையென்றாலும், சாதகமாக இருக்கின்ற படியால் மற்ற இருவரையும் கூட்டு சேர்ந்து, தன் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வது இங்கே இயல்பாகிவிட்டது. 


பிற்படுத்த பட்டோரின் பாதுகாவலர்களும், தாழ்த்தப்பட்டோரின் நல்வாழ்விற்காக போராடுவதாக கூறிக்கொள்ளும் சமூக நீதி காவலர்கள், யாரை? எதற்காக? எதிர்த்து போராடுகிறோம் என்பது தெரியாமலே போராடுகிறார்களா? அல்லது (மிக) தெரிந்து, நம்மை முட்டாளாக்கி, அவர்களும் பின்னாளில் முட்டாளாகப் போகிறார்களா? என்று தெரியவில்லை.  
ஒரேடியா போரடிக்க கூடாதில்ல…… அதான் ஒரு சின்ன பிளாஷ்பேக் 

மாமல்லன் மகேந்திர பல்லவன் தளபதி பரஞ்சோதி என்பவர் 7ஆம் நூற்றாண்டில், வாதாபியை வென்று, அங்கிருந்த கோட்டை வாயிலில் இருந்த தும்பிக்கையுடன் இருந்த சாமி சிலையை வெற்றிச் சின்னமாக தன் அரசனுக்கு கொடுக்க எடுத்துவந்தது தான், முதன்முதலில் விநாயகர் தமிழ்நாட்டுக்கு வந்த கதை. இதற்கு முன் விநாயகர் வழிபாடு தமிழகத்தில் இல்லை.
ஆற்றங்கரை, ஊரின் நடுவில் இருக்கும் நிழல் தரு ஆல, அரச,வேம்பு மரத்தடிகளில், வீரர்களின், குடும்பத்தலைவர்களின் நடுகல் மட்டுமே இருந்திருக்க வேண்டும். பின்னாளில் மன்னர்களின் நாடுபிடி சண்டையில், பிடிக்கப்பட்ட நாட்டில் தன் மதம், கலாச்சாரத்தை திணிக்கத் தொடங்கினர். சமணத்தை பின்பற்றிய மன்னர்கள் சமண துறவிகள் சிலைகளை நிறுத்தி இருந்தனர். இதற்கு பிறகு வந்த இந்து சமயவாதிகள் சமண சமயத்தை ஒழிக்க முற்பாட்டு, பல இடங்களில் இருந்த சமண மத சின்னங்கள் இந்தப் புள்ளையாரை பதிலியாக்கினர். இதன் பின் தான் ஆத்தங்கரை, அரசமரத்தடிகளில் பிள்ளையார் வழிபாடு துவங்கியது. 


மறுபடியும் விசயத்திற்கு வருவோம்:
ஆதிமனிதன் தான், தன் சுற்றம் என்ற அளவில் வாழும்போது, அவர்களில் வயதில் மூத்தவன் குடும்பத்தலைவனானான். கூட்டம் பெருகிய போது வலிமையானவனும், திறமையானவனும், ஏமாற்றத் தெரிந்தவனும், இனத் தலைவன் ஆனான். பல இனங்களை ஒன்று திரட்டி தனக்கு அடிமையாக்கியவன் சிற்றரசனாகமும், பல சிற்றரசர்களை, ராஜ தந்திரத்தாலும் (வஞ்சகத்தாலும் )அடிமைப்படுத்தியவன் மன்னனானான். பல மன்னர்களை வென்றவன் பேரரசானான். இப்படி போர்களின் மூலம் சண்டையிட்டு, மக்களை அடிமைகளாக்கி, பின் அவர்கள் வாழ்வாதரம் தேடும் போது, அவர்களை காப்பவனாக தன்னைக் காட்டிக் கொண்டு அவர்கள் மீது அதிகாரம் செலுத்துவது காலம் காலமாக நடந்து வரும் நிகழ்வுகள்.
தன் அதிகாரத்தை மேம்படுத்தி, சக மனிதனிடமிருந்து தான் கல்வியில், பட்டறிவில், பணத்தில், பகட்டில், பிறப்பில், வலிமையில், வாதத்தில், கலையில், உயர்வானவன் என்பதை காட்டிக் கொள்வதில் பேராணந்தம் அடைகின்ற ஒரு பழக்கம் நம் அனைவரில் காணமுடிகிறது.
பள்ளிக்குழந்தைகளின் மதிப்பெண் பட்டியல்களும், அதற்காக பெற்றோர்கள் எழுதும் தேர்வுகளும்(?), அதற்கு சாட்சி. தனி மனித வளர்ச்சியையோ, மற்றவர்களிடமிருந்து தான் உயர்வாக இருக்கவேண்டும் என்பதில் அவர்கள் காட்டும் ஆர்வத்தையோ, அதற்காக எடுக்கும் முயற்சிகளையோ நான் குறை வில்லை. மாறாக தனி இவை மற்றவரின் அடிப்படை சுதந்திரத்தையும், காலாச்சாரத்தையும், இயல்புகளையும் பாதிக்கின்றன் என்பதில் தான்
பிரச்சனை.

மேற்கண்ட கட்டுரைக்கும், பின் வரும் என் சுய சரிதையின் ஏதோ ஒரு பக்கத்திற்கும் தொடர்பு இருப்பதாக யாரும் எண்ணக் கூடாது
சிறு குழந்தைகளாக இருந்த போது நம்மால் தொட்டு தடவி, சிறு குடத்தில் நீரிரைத்து குளிப்பாட்டி, தெருவோர காட்டு மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டவனும், நண்பர்களோடு நண்பனாய் பள்ளிவிடுமுறை நாட்களில் நம்மோடு இருந்தவனும் , பிறந்தநாளின் முதல் வாழ்த்துச் சொன்னவனும், தேர்வுக்காலங்களில் நம்பிக்கை விதை ஊன்றியவனும், பட்டணத்து பணக்கார வீட்டுக் குழந்தைகளின் கரடி பொம்மையை போல, நமக்கு உற்றதுணையாய் இருந்தவனும், வேளை வெட்டி இல்லாதோருக்கு போக்கிடமாய் இருந்தவனும், வேலை செய்து கலைத்து வரும் தொழிலாளத் தோழர்களின் மதிய உணவு மேசை வழங்கியவனும், வயது முதிர்ந்த நம் பெரிசுகள் அமர்ந்து ஆட்டோகிராப் எழுத இடம் கொடுத்தவனும், காக்கை, குருவி, போன்ற பறவைகள் எச்சமிட்டாலும், எட்டி நில் என்று சொல்லாமல், எல்லொருக்கும் எல்லாமாய், இருந்த நமது தெரு பிள்ளையாரை காணவில்லை. 

சக மனிதனை விட தான் உயர்ந்தவன், சிறந்தவன், பக்திமான், தருமவான், கோடி புண்ணியம் எனக்கும் என் குடும்பத்திற்கும் வேண்டும். நான் மட்டும் நல்லா இருக்கனும், என்ற நல்ல எண்ணத்தில் ஓரிரு நடிப்பு சுதேசிகள் ஒன்று சேர்ந்து, எங்கள் தெருப் பிள்ளையாருக்கு கோவில் கட்டி, (சொந்த காசிலல்ல, ஊரூ பூரா உண்டி தூக்கிதான்)தங்கத்திலே கவசம் செய்து, இரும்புக் கதவு கொண்டு பூட்டி, அதன் சாவியை, நமக்கு புரியாத மொழியில் நம்மையும் நம் புள்ளையாரையும் திட்டும், அயோக்கியன் கையில் கொடுத்து விட்டு

இவனும் வெளியே நிற்கிறான்….. நானும் வெளியே 
நிற்கிறேன்…….புள்ளையாரு மட்டும் உள்ளையா இருக்கப் போறாரு….

பின்குறிப்பு: அன்புச் சகோதரர் மாதவராஜ் அவர்களின் தீராத பக்கங்களில் வந்த பெரியார் இன்று இருந்திருந்தால்…… கட்டுரையை நான் படிக்கவில்லை என்று உறுதிகூறுகிறேன்.(mathavaraj.blogspot.com)