Monday, March 02, 2020

நானி பல்கிவாலா

தமிழ் வருடப்பிறப்பு, ஆடிப் பெருக்கு, ஆயுதபூசை, தீபாவளி, பொங்கல், என கடந்து வந்த பண்டிகை நாட்களை நினைத்துப் பார்க்கும் போது, ஆச்சரியமாக இருக்கிறது. ஒவ்வொன்றையும் நாம் எவ்வளவு மகிழ்வோடு கொண்டாடினோம். குழந்தைகளாக நாம் அதைக் கொண்டாடினோம் என்றால், பெரியவர்களும் அவர்கள் பங்கிற்கு நம்மோடு இணைந்து கொண்டாடித் தீர்த்தார்கள். இன்று நம் குழந்தைகளும், தயாராக இல்லை, நாமும் தயாராக இல்லை. பண்டிகைகளும், சிறப்பான நாட்களும் வெறும் சம்பரதாயங்களாகவே மாறிவிட்டிருக்கின்றன. அடுத்த தலைமுறை இந்த நாட்களை நினைவில் வைத்துக் கொள்வதே, விடுமுறை நாள் என்பதிலாகத்தான் இருக்க வேண்டும்.
”பட்ஜெட் பண்டிகையும்” அப்படியான ஒரு முடிவை எட்டிவிட்டிருப்பது பெரும் கவலையளிக்கிறது. ஒரு காலத்தில், ஆகாசவாணி செய்தி நேரத்தின் போது ஊரே, தெரு டீக்கடைகள், முக்கிய சந்திப்புகளில், கூடி நின்று வானொலிச் செய்திக்காகக் காத்திருக்கும். பெரும்பாலும் என்னென்ன பொருட்களின் மீது வரி கூட்டியிருக்கிறார்கள் என்பதே முக்கியமான தேடலாய் இருக்கும். நேரடி வரி பற்றிய கவலையாருக்கும் இருந்ததில்லை. காரில் வைத்திருப்பவர்கள் மட்டும்தான் வருமானவரி கட்டவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த காலம் அது. அடுத்த நாள் செய்தித்தாள்களில் மக்கள் முகம் புதைத்துக் கிடப்பார்கள். அது விலை குறையும், இது விலை கூடும் என்ற பேச்சு நகரெங்கும் நிரம்பியிருக்கும். ஊர், இயல்புநிலைக்கு வருவதற்கு, ஓரிரு நாட்களாகும். ஒரு பொருளின் மீது வரி விதிப்பதற்காகத்தான் பட்ஜெட் கூட்டப்படுகிறது என்று நம்பிய நாட்களும் உண்டு.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட, பட்ஜெட் என்பது பெரும் பண்டிகை நாளாகத்தான் இருந்தது. காலைச் செய்தித்தாள்களில் பட்ஜெட் தவிர்த்த வேறு எந்தச் செய்தியும் அதிகம் இடம் பெறாது. நிதி அமைச்சர்களின் பொருளாதார முழக்கங்கள், நாட்டின் கடன் சுமை, கிடைக்கபோகும் திட்டங்கள், இந்த வருசமாவது நம்மூருக்கு ரயிலு வருமா? என்ற ஆதங்கங்கள், இப்படி எல்லாவற்றிர்க்கும், ஏதோவொரு பதில் அன்றைய செய்தித்தாளில் இருக்கும்
”நானி பல்கிவாலா” இந்தப் பெயரை இன்றைய தலைமுறை அறிந்திருக்காததில் வியப்பு ஏதுமில்லை. நாம் மறந்த எத்தனையோ பேர்களில் அவரும் ஒருவர். 1920 மும்பையில் ஒரு சாதாரண பார்ஸி குடும்பத்தில் பிறந்து ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்று, பம்பாய் பல்கலைக் கழகத்தில் பேராசிரியரானவர், அதை விடுத்து சட்டக் கல்லூரியில் சேர்ந்து, இந்தியாவின் மிகச்சிறந்த வழக்கறிஞராகச் செயல்பட்டவர். வருமானவரி மற்றும் வணிக வரிச் சட்ட வழக்குகளை மட்டும் நடத்திவந்த இவர், பின்னாளில் உச்ச நீதிமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டங்களைப் பகுத்தாய்வதில், பெரும் பங்காற்றினார்.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் முடிந்த வாரத்தில், பட்ஜெட் குறித்த பெரும் ஆய்வைப், பொது மக்கள் மத்தியில் நிகழ்த்துவார் பல்கிவாலா. ஒருகாலத்தில் மிகப்பிரபலமான ”பல்கிவாலா பட்ஜெட் ஆய்வுகள்” 1958ஆம் ஆண்டு ”கிரீன் ஹோட்டல்” என்ற சிறிய ஓட்டலில் துவங்கியது. பின்னாளில் பம்பாய் கிரிகெட் மைதானம் நிரம்பும் அளவு, பெரும் கூட்டமாக மாறியிருந்தது. எந்த விதக் குறிப்பும் கைகளில் வைத்துக் கொள்லாமல், இரண்டு மணி நேரத்திற்கு, பட்ஜெட் குறித்த தகவல்களை அலசி ஆராய்வார். பல்கிவாலாவின் நண்பரும் இணைந்து பணியாற்றியவரும் முன்னாள் அட்டர்னி ஜென்ரல் சோலி சொராப்ஜி கூறுவார் “ நானியின் பட்ஜெட் பேச்சைக் கேட்க தொழிலதிபர்கள், வழக்கறிஞர்கள், வணிகர்கள், பொது மக்கள் என அனைத்துத் தரப்பினரும் காத்து இருந்திருக்கிறார்கள். இந்திய கிரிகெட் கிளப் வளாகத்தில் நடக்கும் இந்தப் பட்ஜெட் உரையைக் கேட்க 20000 பேர்களுக்கு வசதிகள் செய்யப்படும். உண்மையில் இந்தியாவில் நிதியமைச்சரால் ஒரு பட்ஜெட் உரையும், நானியால் மற்றொன்றும் வழங்கப்பட்டது”
“ politically cleaver, but economically un sound” 1971ல் நானி தலைப்பிட்டுப் பேசிய பேச்சில் துவங்கி, 1989 வரை தொடர்ந்து ஒவ்வொரு பட்ஜெட் குறித்தும் ஒரு விமர்சனத்தை வைத்து வந்தார்.
இந்திய வருமான வரிச் சட்டங்களில் இருக்கும் சிடுக்குகள் குறித்துப் பேசும் போது, இந்தியாவின் ”தேசிய அவமானம்” என்று குறிப்பிடும் அளவிற்கு கடுமையான விமர்சகராக இருந்தார். வருமானவரிச்சட்டங்கள் எளிமையாக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக செயல்பட்டு வந்தார். அதன் தொடர்ச்சியாக, பேங்க் ஆப் இந்தியா, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ஆகியவற்றின் தலைவராக இருந்த திரு A.D செரிஃப் அவர்களால் துவங்கப்பட்ட, “forum for free enterprise” ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் குறித்த உரைகளை இன்றும் நடத்திவருகிறது. நானி பல்கிவாலா அறக்கட்டளையும் கடந்த 2/2/2020 அன்று ஒரு கூட்டத்தை மும்பையில் நடத்தியது.
கடந்த பிப்ரவரி 18 ஆம் நாள், முன்னாள் திட்டக் கமிஷனின் துணைத்தலைவராக இருந்த மாண்டெக் சிங் அலுவாலியா அவர்கள் வெளியிட்ட ”பேக் ஸ்டேஜ்” என்ற நூலில், UPA ஆட்சி செய்த தவறுகளையும் சேர்த்தே குறிப்பிட்டிருக்கிறார். அதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டு, வாழ்த்தியும் பேசியிருக்கிறார்.
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி, நாமெல்லாம் காதலர் தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்த போது, தமிழக துணைமுதல்வர், மற்றும் நிதியமைச்சர், இந்த ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை வெளியிட்டார்.
யாரோ?, யாருக்காகவோ?, எதற்காகவோ? பட்ஜெட் என்ற மனநிலையில் தான் நாம் செயல்பட்டுவருகிறோம். சட்டமன்றத்தில் சொன்னால் போதாது, என்று நினைத்தோ என்னவோ, தற்போது பட்ஜெட் விளக்கூட்டங்களை நடத்த உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
மாநில நிதி நிலை அறிக்கையையோ, மாநில வரவு செலவு கணக்குகளையோ, படிக்காமல் விட்டுவிடுகின்றோம். குறைந்த பட்சம், நாம் வசிக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் வரவு செலவு திட்டங்களையாவது படிக்க முயற்சி செய்வோமே. அனைத்துமே அந்தந்த அமைப்புகளின் இணைய தளத்தில் கிடைக்கின்றன. நாம் வசிக்கும், ஊரின் மொத்த மனிதர்களும் சேர்ந்து, அரசுக்கு வரியாக எவ்வளவு தொகையைக் கொடுத்திருக்கிறோம், அதை அவர்கள் நமக்கு எந்த விதத்தில் பயனுள்ளதாக செலவு செய்திருக்கிறார்கள் என்பதையாவது தெரிந்து கொள்வோமே. நம் குழந்தைகளுக்கும் அதை வாசிக்கக் கற்றுக் கொடுப்போமே.
பொருளாதாரம், பட்ஜெட், போன்ற வார்த்தைகளின் மீதான ஒவ்வாமையே நம்மை தடுத்துக் கொண்டிருக்கிறது. நாம் கொடுக்கும், ஒவ்வொரு பணத்திற்கும் அரசுகள் கணக்குக் கொடுக்க வேண்டும். கொடுக்கின்றன. நாம் தான் அவர்களிடமிருந்து வெகுதூரம் தள்ளி நிற்கின்றோம். நாமே இந்த நிலையில் இருந்தால், விளிம்புநிலை மனிதர்கள் நிலை………..
பெரும் எதிர்பார்ப்புகளுக்கும், கடும் விமர்சனங்களுக்குமிடையே, வெளியான அரசின் வரவு செலவு திட்டங்கள், தங்களுக்கே உரித்தான சிறப்பினை இழந்து, வெறும் சம்பரதாயமாக, மாறிப்போனதற்கு நாம் மட்டுமே காரணம். படித்த, சமூக அக்கறை கொண்ட சமூகமாக மாறத்தான் வேண்டியிருக்கிறது. வரவு செலவுக் கணக்குகளை பகுத்தாய்ந்து பார்ப்போம். அதுகுறித்துப் பொதுவெளியில், சமூக வலைதளங்களில், பேசுவோம். முடிந்தால் தகுதியானவர்களைக் கொண்டு, அந்தந்த ஊர்களில் விவாதங்கள் நடத்துவோம். தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டுவோம். அரசின் நலத்திட்டங்கள், தேவைப்படுவோரைச் சென்றடைய உதவியாக இருப்போம்.
எந்த சார்பு நிலையோ, எதிர்பார்ப்போ இன்றி, தன் தேச மக்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் வரவு செலவு திட்ட அறிக்கையின் மீது பெரும் விவாதங்கள் நடைபெறக் காரணமாக இருந்த திரு. நானி பல்கிவாலா, தான் இறந்தபின், தன் ஆசைகளாக எழுதி வைத்த உயிலின் தமிழாக்கத்தைத் தந்திருக்கின்றேன்.
எனது சுவாசம்,
நிரந்தரமாக இளைப்பாற நேர்கையில்....
எனது விழிகள்...
கதிரவனின் வனப்பைக்
கண்டிராத ஒரு மானுடனுக்கு
வாழ்க்கையின் வரமாகட்டும்
எனது இதயம்...
வலியின் உச்சத்தில்
உறைந்து போனவனின்,
உயிர் துடிக்க உதவட்டும்
எனது ரத்தம்....
விபத்தில் சிக்கிய இளைஞனின்
உயிரைக் காத்து,
அவன் தலைமுறையை வளர்க்கட்டும்.
என் சிறுநீரகங்கள்……….
விஷம் தோய்ந்தவனின் இரத்தத்தை
வடித்தெடுக்கட்டும்.
என் எலும்புகள்……
முடமான ஒரு குழந்தையை,
நடமாடச் செய்யட்டும்.
எரிந்து மீந்த என் மிச்சம்…..
காற்றில் விரவி
மலர்களுக்கு எருவாகட்டும்.
என் பாவங்கள் சாத்தானுக்கும்,
ஆன்மா கடவுளுக்கும் படைக்கப்படட்டும்.
என்னில், எதையாவது புதைக்க வேண்டுமாயின்,
சகமனிதன் மீது நான் காட்டிய
பாரபட்சங்களையும், குற்றங்களையும் புதையுங்கள்.
என்னை நினைவிற்கொள்ள விருப்பம் கொண்டால்……
உன்னைத் தேடுவோர்க்கு,
கருணைமிகு வார்த்தைகளாலோ
செயலாலோ, உன்னால்
ஆனதைச் செய்துகொடு……
நான் உயிர்த்திருப்பேன், உன் நினைவுகளில்………..
-நானி
இந்த உயிலை, தமிழாக்கம் செய்து தந்த, ஈரோடு வாசல் சகோதரி திருமதி. ராதா மனோகரன் அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்.

3 comments :

soms erode said...

மகத்தான இவ்வகை மனிதர்களை ஆளும் அரசுகள் பயன்படுத்தாமல் போனது அரசியல் சாபம்....

Malar Selvam said...
This comment has been removed by the author.
Malar Selvam said...

சுவாரசியமான பொருளியல் கட்டுரை. நானிபல்கிவாலா பற்றி எத்தனை புதிய விஷயங்கள்!!