Sunday, March 15, 2020

பட்ஜெட் அறிவோம்







          இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர். கே. சண்முகம் செட்டியார்


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பட்ஜெட் என்ற வார்த்தை எந்த இடத்திலும் பயன்படுத்தப்படவில்லை. இங்கிலாந்தில் நிதிநிலை அறிக்கையை பையில் போட்டு எடுத்துவருவார் நிதியமைச்சர். அந்தப் பையிற்கு பட்ஜெட் என்று பெயர்.  நாளடைவில் அதுவே ஆகுபெயராகி நிலைத்துவிட்டது.

நிதிநிலை அறிக்கை:

நிதிநிலை அறிக்கை என்பது ஒரு அரசின் வரவு செலவு கணக்குகளைக் குறிப்பிடும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து மார்ச் 31ஆம் தேதிவரையிலான கால கட்டத்திற்கு, அரசிடம் எந்தெந்த வகையில் பணம் வரும், அதை எந்தெந்த வகையில் செலவிடப்போகிறார்கள் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு, சட்டமன்றத்தில், அல்லது பாராளுமன்றத்தில் சம்பந்தப்பட்ட நிதியமைச்சர்கள் வெளியிடுவார்கள்.  இந்த வரவு செலவு திட்டம்

1.   வருவாய்க் கணக்கு (revenue accounts)
2.   மூலதனக் கணக்கு  (capital accounts)
3.   பொதுக் கணக்கு    (general accounts)

என்ற மூன்றையும் உள்ளடக்கியிருக்கும்.


வருவாய்க் கணக்கு:

வருவாய் கணக்கில் வரவினங்கள்( revenue receipts), வருவாய் கணக்கில் செலவினங்கள்(revenue expenditure) என்று இரண்டு பகுதிகள் இருக்கும்.  வருவாய் வரவினங்களில், (i) வரி வருவாய் (tax revenue), (ii) வரி அல்லாத பிற வருவாய், (non tax revenue) (iii) உதவி மான்யங்களும் பங்களிப்புத் தொகைகளும் (grants and assistance) என்றும் வருவாய் வரவினம் மூன்றையும் உள்ளடக்கியிருக்கும்.
விற்பனை வரி, கலால் வரி, வருமானவரி போன்ற வரி இனங்களில் இருந்து பெருவது வரி வருவாய்.  வட்டி, வாடகை, சேவைகளின் மீது பெறும் தொகை வரியல்லாத வருவாய், மத்திய அரசிடமிருந்து பெறப்படும் உதவித்தொகைகள் மானியங்கள் மூன்றாவது வருவாயாகும்.

     வருவாய் வரவினங்கள்             வருவாய் செலவினங்கள்


1 வரி வருவாய்
2 வரிவருவாய் அல்லாத பிற வருவாய்கள் (வட்டி, வாடகை, ஈவுத்தொகை(dividend) போன்றவை
3.உதவிகளும் மானியங்களும்

1.   சம்பளம், பென்ஷன், மற்றும் அரசு செய்யும் பொது செலவுகள்
2.   சமூகப்பணிகளுக்கான செலவுகள்
3.   பொருளாதாரப் பணிகளுக்கான செலவுகள்
4.   உதவிகளும் மாநியங்களும்

மூலதன வரவினங்கள்                மூலதன செலவினங்கள்

1.   மத்திய அரசிடமிருந்தோ, சந்தையிலிருந்தோ பெறப்படும் கடன்கள்
2.   சொத்தையோ பங்கையோ(disinvestment) விற்று வரும் தொகைகள்
3.   வெளிநாட்டுக் கடன்கள்
1.   மூலதனத்தை உருவாக்கும் செலவுகள்
2.   கட்டிடங்கள்,சாலைகள், பாசனவசதிகள், இயந்திரங்கள், பங்கு மூலதனம்
3.   வாரியங்கள், கழகங்கள், கூட்டுறவு சங்கங்களுக்கு, வழங்கப்படும் கடன் தொகைகள்
அரசின் வருவாய் வரவினங்களைவிட(revenue receipts) வருவாய்செலவினங்கள் கூடியிருக்கும் நிலையை,  நிதிப் பற்றாக்குறை (BUDGET DEFICIT) என்கிறோம்.

வழக்கமான வரி வசூல்,  சமூக நலத்திட்டங்கள் என்று அரசுகள் செயல்பட்டாலும், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கும், கூட்டுறவுச் சங்கங்களுக்கும், உள்ளாட்சி மன்றங்களுக்கும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக(infrastructural development), தொடர்ந்து நடத்துவதற்காக,  பெரும் தொகை செலவிடவேண்டியிருக்கிறது. அதற்காக மத்திய அரசிடமிருந்தோ, நிதிச் சந்தையிலிருந்தோ, பொதுமக்களிடமிருந்தோ, குறிப்பிட்ட வட்டியில் பணத்தைப் பெற்று செலவுகள் செய்கின்றன.

மூலதனக்கணக்கிற்கான (capital account) பற்றாக்குறையை, வருமானக் கணக்கின் உபரித்தொகை( income over expenditure) சமண் செய்யுமானால், அது ஒரு சிறந்த நிதி நிலை அறிக்கையாக இருக்கும்.  ஆனால், தற்போதைய நிலையில், வருவாய் கணக்கின் பற்றாக்குறையைச் சமாளிக்க, முதலீட்டுக்கணக்கிலிருந்து எடுத்துவருகிறோம்.  அதாவது, கடன் வாங்கி வளர்ச்சிப் பணிகளுக்குச் செலவு செய்வதற்கு பதிலாக, கடன் வாங்கி செலவு செய்து வருகிறோம். இன்னும் எளிதாகச் சொன்னால், நம் வீடுகளில் நடப்பதுதான், கடன் வாங்கி தொழில் அபிவிருத்தி, இடம், கட்டிடம், வாங்குவது போன்ற முதலீட்டுச் செலவுகளைச் செய்யாமல், கடன் வாங்கி வீட்டுச் செலவுகளைச் செய்து வருகின்றோம். நம் வருவாய் உயராது, ஆனால் செலவினங்களோடு வட்டியும் கூடி, மேலும் கடனாளியாகிறோம். நம்மைப் போலவே தமிழக அரசும், ரிசர்வ் வங்கியில் over draft வசதியைப் பெற்று அவ்வப்போது தன் நிதி தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறது.

இந்திய அரசின் வருவாய் வரவினங்கள் மற்றும் செலவினங்களின்  ஏப்ரல் 2019 முதல் ஜனவரி 2020 வரையிலான தரவுகள் வெளியாகி இருக்கின்றன. 10 மாதங்கள் முடிவடைந்த நிலையில் வருவாய் வரவினம் 12.82லட்சம் கோடிகள். இதில் வரி வருவாய் 9.98லட்சம் கோடி, வரி அல்லாத வருவாய் 2.52 லட்சம் கோடி.  வருவாய் செலவினங்கள் பத்துமாத அளவிற்கு,22.68லட்சம் கோடி ரூபாய்கள். வருவாய் பற்றாக்குறை 9.85லட்சம் கோடிகள்.  இந்த வருவாய் செலவினங்களில், 20லட்சம் கோடிகள் வருவாய் செலவினங்களுக்கும் 2.68 லட்சம் கோடிகள் மட்டும் முதலீடுகளாக செலவிடப்பட்டிருப்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

பொதுக்கணக்குகள்:

உள்ளாட்சி மன்றங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் வைப்புநிதி, ஒப்பந்ததாரர்கள் செலுத்தும் முன்பணம், கருவூலங்களில்(treasury) நீதி மன்றங்களில் செலுத்தப்படும் வைப்புநிதிகள், போன்றவை பொதுக் கணக்கில் காட்டப்படும்.

நிதிநிலைக் குறிப்பும், அதன் இணைப்புகளும்:

2003 ஆம் ஆண்டு, தமிழ்நாடுநிதி நிலை நிருவாகப் பொறுப்புடமைச் சட்டம் என்ற ஒரு சட்டத்தால்,இந்த நிதிநிலை அறிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும், நிதியமைச்சரின் நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து, அதைப் புரிந்து கொள்வதற்கான வழிகாட்டி நூலாக,1993-94ல் இருந்து இந்த வெளியீடு அரசால் வெளியிடப்படுகிறது. இது அரசின் நிதிநிலை அறிக்கையைப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

இதன் முதல் பகுதியில், பொதுவான நிதிநிலை, ஆய்வுகள், புள்ளிவிவரங்கள் இருக்கும். இரண்டாவது பகுதியில் வருவாய் வரவினங்களையும், வருவாய் செலவினங்களையும், விளக்கதோடு தருகிறது.  கடந்த ஆண்டின் செலவு, இந்த ஆண்டு திட்டமிடப்பட்ட தொகை, (budget estimation) செய்யப்பட்ட செலவு, (actuals) போன்றவற்றை விரிவாகப் பேசுகிறது.

நிதி நிலை அறிக்கையைப் படிக்கும் முன் தமிழக அரசின் வரவு-செலவுத் திட்ட விளக்க நூலை ஒருமுறை படித்துப் பாருங்கள்? (தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் வெளியிடப்படுகிறது)



தமிழக அரசின் 2021 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் விளக்கக் குறிப்புகள் இந்தச் சுட்டியில் கிடைக்கின்றன.

தமிழக அரசின் வருவாய் கணக்குகள், வருவாய் செலவினங்கள்  உள்ளிட்ட பல தகவல்களும் இதில் அடங்கியிருக்கும்.  நிதியமைச்சரால், சட்ட மன்றத்தில் வழங்கப்படும் உரை, பொது தகவல்கள் மட்டுமே இருக்கும்.  ஆனால் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் (annual financial statement) புள்ளி விவரங்களோடு, கடந்த ஆண்டைய திட்டமிடப்பட்ட தொகை, அதில் கூடுதல் அல்லது குறைதல், வரும் ஆண்டுக்கு திட்டமிடப்பட்ட தொகை ஆகியவை புள்ளி விவரங்களாக இதில் அடங்கியிருக்கும். கீழ் உள்ள சுட்டியில் அதை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.



No comments :