Tuesday, March 03, 2020

சொல் பொருள் மௌனம் – ஆசிரியர். கவிஞர். மோகனரங்கன்

வேர்கள், கணையாழி, காலச்சுவடு, வேட்கை, சாம்பல், புது எழுத்து, யாதுமாகி, உயிர்மை, இந்தியா டுடே, மழை, பனிக்குடம் ஆகிய பத்திரிக்கைகளில் பல்வேறு காலகட்டங்களில் வெளிவந்த தம் கட்டுரைகளோடு, மேலும் சிலகட்டுரைகளை இணைத்து, இந்த நூலை வெளிக் கொணர்ந்திருக்கிறார், கவிஞர் மோகனரங்கன்.
மொத்தம் 42 கட்டுரைகளை உள்ளடக்கிய இந்த நூல், கிண்டில் நூலாக வெளிவந்திருக்கிறது.
”விமர்சனம் என்பதன் பணி ஒரு படைப்புக்கு சாத்தியமான மிகச்சிறந்த வாசிப்பின் வழி அதை மதிப்பிட்டுக் கூறுவதுதான். எந்த விமர்சனமும் இலக்கிய ஆக்கத்தையும் இலக்கிய வாசிப்பையும் கட்டுப்படுத்தவோ வழிநடத்தவோ முடியாது. விமர்சனம் என்பது படைப்பு - வாசிப்பு என்ற இலக்கிய செயல்பாட்டை புரிந்துகொள்ள உதவக்கூடியது மட்டுமே. அவ்வகையில் நிபந்தனைகள் முன்முடிவுகள் ஏதுமின்றி ஒரு படைப்பின் முன் திறந்த மனதுடன் தன்னை நிறுத்திக்கொண்டு ஒருவன் உருவாக்கிக்கொள்கிற கருத்துக்களும் மதிப்பீடுகளுமே ரசனை அடிப்படையிலான விமர்சனம் எனப்படும். ஒரு ரசனை விமர்சகன் தன் வாசிப்பு செயல்பாட்டில், முதலாவதாக தன் வாழ்க்கை அனுபவத்தையும் இரண்டாவதாக தன் வாசிப்பு அறிவையும் மூன்றாவதாக பொதுச்சூழலில் இருந்து பெறப்பட்ட பிற துறை அறிவினையும் பயன்படுத்தி தனது மதிப்பீட்டிற்கான தர்க்கங்களை உருவாக்கிக் கொள்கிறான் என்கிறார். இலக்கிய விமர்சனம் வாசகனுக்கு எந்த உண்மைகளையும் அறுதியிட்டுக் கூறமுடியாது.
வடிவம் பற்றிய படைப்பாளியின் ஆழமான பிரக்ஞையுடன் எழுதப்படும் கச்சிதமான படைப்புகளை விடவும், எவ்விதமான கட்டுப்பாடுமின்றி படைப்பின் இச்சா சக்திக்கு தன்னை முற்றிலுமாக ஒப்புக்கொடுத்துவிடும் எழுத்தாளனின் எழுத்துகள் முக்கியமானவை. அத்தகைய படைப்புகள் பலவும் வடிவரீதியாக பல குறைபாடுகளைக் கொண்டிருந்தாலுமேகூட அவற்றினூடாக அப் படைப்பாளியின் ஆழ்மனம் (ஒருவிதத்தில் அது சமூகத்தின் கூட்டு நனவிலி மனமும் கூடதான்) மொழியைச் சந்திக்கும் தருணங்கள்தான் மிகவும் மதிப்புடையவை.”
என்ற எழுத்தாளர் ஜெயமோகனின் விமர்சனக்கலை வரிகளோடு வருகிறது, முதல் கட்டுரை.
ஒரு எழுத்து எழுதப்படும் போது, பெரும் அங்கீகாரங்களையோ, கடும் விமர்னங்களையோ, தர்க்க வாதங்களையோ எதிர்பார்த்து எழுதப்படுவதில்லை. அது அந்த எழுத்தாளனின் சுயம் சார்ந்த அனுபவ வெளிப்பாடு. அந்த வகையில் ஜெமோவின் விமர்சனக் கொள்கையைப் படித்துவிட்டு, அவர் குறிப்பிடும்படியான ஒரு எழுத்தை, ஒருவன் எழுத முடியுமா? என்ற சந்தேகம் வருகிறது.
முன்னாலே சொல்கிறார், மிதமிஞ்சிய வடிவப் பிரஞ்யுடன், நவீன அழகியல் கூறுகளுடன் எழுதப்பட்டதால், மொளனி,சுரா,ஜி நாகராஜன் நகுலன் போன்றவர்கள் எல்லைக் குட்பட்டே செயல்பட்டார்கள் என்கிறார் ஜெமோ.
இதை எந்த வகையில் புரிந்து கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த விமர்சனங்கள், திரு.ஜெ.மோகனின் பழமை சார்ந்த சமூக வளர்ப்பு, சூழல், கலாச்சாரப் பின்னனி, சுய அனுபவம் போன்ற கூறுகளை உள்ளடக்கியதாகத்தான் பார்க்க முடிகிறது. ஒரு எழுத்தை, ஒரு படைப்பை விமர்சிப்பதற்கு, பொதுத்தன்மை சார்ந்த அளவீடுகள் இருக்கமுடியாது. அவரவர் வளர்ந்த பின்னனியில், மட்டுமே இதைப் பார்க்க முடிகிறது
.இந்தக் கட்டுரைகளில், திரு.ஜெ.மோ, தன் அனுபவங்களையும், தான் சார்ந்து வளர்ந்த சமூக கட்டமைப்புகளையும், தனிமனிதனாக தனக்குள் ஊட்டப்பட்டவைகளையும், தனது இலக்கியம் சார்ந்த நம்பிக்கைகளையும், தராசின் ஒரு தட்டில் வைத்துக் கொண்டு, மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளை, எதிர் தட்டில் வைத்துப் பேசுவதன் மூலம், அதை ஒரு கறாரான விமர்சனம் என்று சொல்லுகிறார்.
”தமிழ் இலக்கிய விமர்சன மரபிற்கு ஒரு பெரும் கொடை இந்நூல் வரிசை” என்ற கவிஞர் மோகனரங்கனின் வரிகளில், பெரிதாய் எனக்கு உடன்பாடு இல்லை.
இது தனிப்பட்ட சில படைப்பாளிகளின் படைப்புகளைப் பற்றி மதிப்பிடும் கட்டுரைகளாக இருந்தாலும், இன்னொரு பார்வையில் தமிழ் புனைகதைகளின் அரை நூற்றாண்டு கால வரலாறாகவும் இதை வாசிக்க முடியும் என்கிறார் நூலாசிரியர். இதைத்தாண்டி, எழுத்தாளர் ஜெயமோகனின் ”நூல் விமர்சனங்கள் குறித்த” கட்டுரைகளில் பெரிதாய் ஏதுமில்லை என்று எனக்குத் தோன்றுகிறது.
எழுத்தாளர் ஆ.முத்துலிங்கம் குறித்த கட்டுரை எனக்குள் பல திறப்புகளைக் கொடுத்திருக்கிறது. ஆ.முத்துலிங்கத்தின் நூல்களை, மீண்டும் ஒரு முறை வாசிக்க வேண்டும். அது கொடுக்கப்போகும் ஆனந்தம் குறித்த கற்பனை, அளவிடமுடியாததாக இருக்கிறது.
எம். எஸ் குறித்த கட்டுரை வாசித்த பிறகு, அவரின் நூல்களை வாசிக்கும் ஆவல் இருந்தாலும், வழக்கொழிந்த மொழி நடையை நினைத்தால் அச்சமாகவும் இருக்கிறது
வரலாற்றின் மனசாட்சியைத் தீண்டும் குரல்
நூலாசிரியர், கவிஞர் மோகனரங்கன், வாசிப்பில் உணர்ந்ததில் கொஞ்சமாவது, அதை எழுதிய எழுத்தாளர் திரு.ஜெயமோகன் உணர்ந்து எழுதியிருப்பாரா என்ற சந்தேகம் எனக்கு ஏன் வந்தது? என்று தெரியவில்லை. ஆனால் வாசிக்க வேண்டிய கட்டுரை. அது என்னை பல்வேறு தளங்களுக்கு இழுத்துச் செல்கிறது என்பதும் உண்மை
தான் வாசிக்கும் ஒவ்வொன்றையும், தனக்குள்ளே கட்டமைத்து வைத்திருக்கும் சட்டகத்திற்குள் வைத்து, தனது வாசிப்பின் மீதான நம்பிக்கைகளால் அவற்றை இறுக்கிக் கட்டி, ஏற்கனவே அடிக்கப்பட்டிருக்கும் மரபு ஆணியில் மாட்டித் தொங்கவிட்டு, அதில் தன் முகத்தைப் பார்க்கும் பாங்கிலேயே இந்த நூல் இருக்கிறது என்று தோன்றினாலும், அதைத் தாண்டி நான் எடுத்துக் கொள்வதற்கு நிறையவே இதில் இருக்கின்றன, என்று மனது சொல்லிக் கொண்டே இருக்கிறது. அத்தனையும் ஒருங்கே குவித்து, மனதில் நிறுத்துவது சாத்தியமில்லாக் கனவுதான். நிதானமாகத்தான், வாசிக்க முடிகிறது. வாசிக்க வேண்டிய நூல்.
எழுத்தாளர்கள் திரு.சு.வேணுகோபால், திரு.சி.சு.செல்லப்பா, திரு. பாவண்ணன் மொழிபெயர்ப்புகள், திரு. கோபிகிருஷ்ணன், திரு. பெருமாள்முருகன், திரு. எம்.ஜி.சுரேஷ்,திரு.ராஜகவுதமன்,திரு.மு.தளையசிங்கம்,திரு.சூத்திரதாரி கோபாலகிருஷ்ணன்,திரு.கி.ஆ.சச்சிதானந்தம், திரு.யூமா வாசுகி, திரு ஜெகதீஷ், திரு.எஸ்ரா, திரு யுவன் சந்திரசேகர்,திரு.ஜெயமோகன்,திரு.மெளனி, திரு.ஜோ டி குருஸ், போன்றவர்களின் படைப்புகளை, நமக்கு அறிமுகப்படுத்துகிறார். ஓரிரு இடங்களில், எந்த படைப்பு குறித்துப் பேசுகிறார்?, யார் குறித்துப் பேசுகிறார்? என்பது குறித்த தடுமாற்றம் வருகிறது. புதிதாய் வாசிப்பைத் தொடங்கியிருப்பவர்களுக்கு கொஞ்சம் கடினமாக இருக்கலாம்.
பகுதி இரண்டில், கவிஞர்கள், திரு.இராஜ சுந்தராஜன், திரு பிரம்மராஜன், திரு தேவதச்சன், கவிஞர் அபி, திரு.பாதசாரி, திரு.பிரமிள், திரு.நகுலன், திரு ஆத்மாநாம்,திரு.கலாப்பிரியா, திரு.யுமா வாசுகி, திரு.சி.மணி, போன்றவர்களின் கவிதை வரிகளை, உதாரணங்களோடு நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.
ஆழ்ந்த வாசிப்பு உள்ளவர்கள், நுல்களை விமர்சிக்க விரும்புகிற புதியவர்கள் புதுக்கவிதைகள் எழுதுபவர்கள், புதிதாய் வாசிப்பில் இறங்கியிருப்பவர்கள், என அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய படைப்பு இது.
#நூல் அறிமுகம்

No comments :