Monday, January 04, 2010

நம்ம ஈரோடு-தொடர்ச்சி




ஈரோடு நகரின் அருகில் அமைந்திருக்கும் ஒரு கல்லூரியின் தாளாளர், இந்த நிகழ்வுகளை முன்னின்று நடத்துவதால்,  மேடை நிகழ்வுகளில் ஈரோட்டின் குறிப்பிட்ட இரண்டு மூன்று பள்ளி கல்லூரிகள் மட்டுமே நிகழ்வுகளில் பங்கெடுத்ததோடல்லாமல்,  பள்ளி கல்லூரிகளுக்கிடையிலான கலை நிகழ்சிகள், போட்டிகள் போல மாறிப்போனது நிகழ்வின் அபத்தம்.


குறிப்பிட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் இசை வடிவங்களாக ஆக்கப் பட்ட, அவர்கள் மட்டுமே கட்டி காத்து வரும்  பறை, தப்பு போன்றவற்றை கல்லூரி மாணவ மாணவியர் இசைத்தது, மனதிற்கு மகிழ்ச்சி தந்தது.




கொங்கு மண்ணில், துக்க நிகழ்ச்சிகளுக்கும், சில குறிப்பிட்ட கோவில்களில் மட்டுமே இசைக்கப் படுகின்ற அவற்றை அனைவர் மத்தியிலும் கொண்டு சென்ற பெருமை திரைத் துறையே சாரும்.  அவர்களின் இந்த குத்தாட்டாங்களினாலே இவை மக்கள் அனைவரும் ரசிக்கும் ஒரு இசை வடிவமாக மாறியிருக்கிறது.

பொதுவாக, கொங்கு மண்ணின் பெருமையை பரைசாற்றும், ஓரங்க நாடகங்கள், ஒயிலாட்டம், தெருக்கூத்துக்கள் இடம் பெறாதது வருத்தமே.


தமிழக கலாச்சார நிகழ்வுகளில், ஒன்றாக கோலாட்டத்தை, சேர்த்து, நவராத்திரி டாண்டியாவாக ஒரு கல்லூரி மாணவியர்  கொண்டாடியது கொஞ்சம் வருத்தமளித்தது.


" அதுஆட....இது ஆட...." போன்ற தொலைகாட்சிகளில் வரும் நிகழ்ச்சிகள் போல் நிகழ்வுகள் மாறிப்போனதை என்ன வென்று  சொல்வது?  மக்கள் ரசித்தார்கள், கை தட்டினார்கள், பங்கு கொண்டவர்களும் மிகத்திறமையாகத்தான் நடனமாடினார்கள். ஆனால்......இதைச் செய்வதற்கு தமிழ் மையம் எதற்கு.....?


கிராமியக் கலைஞர்களைக் கொண்டு நடத்தப் பட்டாலும், அனைத்திலும் சினிமாத்தனமான  நடன அசைவுகளின் சாயல் இருந்ததை மறுக்க முடியவில்லை.  மக்கள் இதைத்தான் ரசிக்கிறார்கள் என்ற முடிவுக்கு அவர்களும் வந்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது.


"சென்னை சங்கமத்தை"ப் போல் தமிழகம் முழுவதும் தமிழ் மையத்தின் மூலம் நடத்தத் திட்டமிட்டோம், அதற்கான முதல் முயற்சி தான் "நம்ம ஈரோடு" என்று அருட்தந்தை ஜகத் காஸ்பர் பேசினார்.  முதலில் தமிழ் கலாச்சாரம் எது என்பதை இவர்களுக்கு தமிழ் மையம் சொல்லித்தரவேண்டும் என்று தோன்றியது.


குறிப்பிட்ட பகுதிகளில் நடக்கும் போது, அந்த பகுதிகளைச் சார்ந்த, கலை மற்றும் கலாச்சாரத்தை வளர்க்கும் விதமாகவும், அழிந்து போகும் நிலையில் உள்ள கலைகளை தெரிவு செய்து அதை வளர்க்கும் விதமாகவும் அமைய வேண்டும் என்பது என் போன்றோர் அவா..


அருட்தந்தை ஜெகத் கஸ்பர் "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று ஈரோட்டு மண்தான் ஆண்டவனையே குற்றஞ் சாட்டி  பேசியது என்ற வகையில் ஏதேதோ உணர்ச்சிகரமாக பேசினார்.   எனக்கும் ஒன்றும் புரியவில்லை.... .........



ஒன்றுமட்டும் புரிந்தது, இன்று காஸ்பர் இங்கு உங்களோடு பேசுவதற்கு காரணம், தந்தை பெரியார்,  ஏசுநாதருக்குப் பிறகு நான் ஒருவரை வணங்குவேன் என்றால் அது தந்தை பெரியாரைத்தான், அவர் இல்லையென்றால், நானெல்லாம் இன்று இந்த இடத்தில் இல்லை என்றார்.   மிக நிதர்சனமான வரிகள்.......வாழ்த்துக்கள் அருட்தந்தை அவர்களே.


நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவரின் பல பேச்சுக்கள், பார்வையாளர்களை முகஞ்சுளிக்க வைத்தது உண்மை. பொறுப்பாளர்களை துதி பாடியதும், உண்மையாக இருப்பினும், சபை நாகரீகம் மறந்து மேடையில் ரெக்கார்ட் டான்ஸ் பற்றிப்  பேசியது கொடுமை.

திரைப்படத்தில் "ஆடுங்கடா என்னைச் சுத்தி, நான் அய்யனாரு வெட்டுக்கத்தி" என்று நடிகர் விஜய் பாட, அவரைச் சுற்றி ஒரு பெண்கள் குழு பறை அடித்துக் கொண்டே ஆடுவார்கள்.   அந்த பாடலை தொலைக்காட்சிகளில் காணும்போதெல்லாம் இது சாத்தியமா?  பெண்களால் பறை அடித்துக்கொண்டே இவ்வளவு அழகாக ஆடமுடியுமா? என்று ஆச்சரியப்பட்டதுண்டு.   அதை இன்று நேரிலே கண்டேன்.






திண்டுக்கல் சக்தி கலைக்குடும்பத்தினர் நடத்திய முழுவதும் பெண்கள் பங்கேற்ற "வெற்றிப் பறை" என்ற நிகழ்வு.  அத்தனை பெண்களும், ஆண்களுக்கு நிகராக, பறை முழக்கி, ஆடியது,  நினைவில் நிற்கிறது.   மீண்டும் மீண்டும் அவர்களில் அசைவுகள், நடனமாடிய விதம், வெற்றி முழக்கமிட்டு அடித்த பறை ஒலி காதுகளில் இன்னும் இருக்கிறது......

வாழ்த்துக்கள் சக்தி குழுமம்.   விழா முடிந்ததும் அந்த குழுவின் இயக்குனர் சகோதரி. சந்திரா அவர்களையும் அவர்கள் குழுவையும் பாராட்டாமல் திரும்பி வரமுடியவில்லை.   வாழ்த்துக்கள்.  இந்த குழுவை நம் நண்பர்கள் கூட பயன் படுத்தி, ஆங்காங்கே இந்த நிகழ்ச்சியை நடத்தலாம்.  தொடர்புக்கு: சகோதரி சந்திரா அலைபேசி எண் 98421 10957-0451 2410957. www.sakthicentre.org. சுமார் 30 பேர் கொண்ட குழு 2 மணிநேரம் நடத்தும் நிகழ்ச்சிக்கு கட்டணம் ரூபாய் 25000/-

பள்ளியிலே படித்த அவ்வையாரின் ஆத்திச்சூடி படி  "ஊக்க    'மது'  கைவிடேல்" என்பதை இன்றும் நினைவில் நிறுத்தி பின்பற்றும் கல்லூரி மாணவர்களின் இசைக்கேற்ற குத்தாட்டம் ரசிக்கும்படி இருந்தது உண்மை.


தங்கமணியுடன் (வேறு வழியில்லாமல், ஞாயித்துகிழமை கூட தனியா ஊர் சுத்தினா எப்படின்னு திட்டுவாங்கறத தவிர்க்க)) வந்த நம் போன்ற பலரும், இசைக்கேற்ற குத்தாட்டம் போடமுடியாமல் தவித்தது போனது உண்மை.


ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் திரு. கணேச மூர்த்தி அவர்கள் வாழ்த்துரையில்  மனதிற்கு மிகுந்த ஆறுதல் அளித்தது.   அப்பாவை, தாடி என்றும் அம்மாவை மம்மி என்றும் அழைப்பதில் ஈரோடு மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.  தாத்தா, பாட்டி, தன் பேரக்குழந்தைகளை பேர் சொல்லி அழைக்கும் படியான தமிழ்ப் பேர்களை குழந்தைகளுக்கு வையுங்கள். எத்தனை தாத்தா, பாட்டிகளுக்கு தன் பேரன், பேத்தியின் பெயரை சரியாக சொல்லத்தெரியும்? என்ற அவரின் பேச்சுக்கு  திருவாளர் பொதுசனம் கைதட்டியது தான் நகைச்சுவையின் உச்சம்.

கிராமத்துக் கோவில்களில் மாரியாத்தாவுக்கும் வட மொழியில் அர்ச்சனை நடந்ததை கண்டித்து, கிராமக் கோவில் பூசாரிகளை கேட்டதற்கு, ஊர்க்கவுண்டர் தான் சமஸ்கிரதத்தில் பூசை செய்யச்சொன்னார் என்று சொன்னதையும் சொல்லி, தமிழ் வழிபடுவது அவசியம் என்றார்.

பாராளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதியிருந்தபோதும், அதை மொழிபெயர்த்து ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் கேட்க  முடியும் வசதிகள் இருக்கின்ற  போதிலும், நாம் உறுப்பினர்கள் தமிழில் பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் வைத்தார்.

பாராளுமன்றத்தில் மற்றவர்கள் பேசும் போது, அதை தமிழில் மொழி பெயர்த்து, வழங்க வேண்டும் என்ற தன் வேண்டுகோளுக்கு, பாராளுமன்ற அவைத்தலைவர், சுமார் 484 மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுவார்கள் இது சாத்தியமா? என்று கேட்டதாகவும், அவர் குறிப்பிட்டார்.


ஈரோடு மாவட்டத்தின் சிறப்புகளை விளக்கும் விதமாக புகைப்படக்கண்காட்சி ஏற்பாடு செய்திருந்தது அருமை.  பல அரிய தகவல்களையும், புகைப்படங்களையும் காண முடிந்தது.


அருட்தந்தையின் ஆசியாலோ என்னவோ,  தமிழ் தேசியத் தலைவர்  தம்பி பிரபாகரனின் வண்ணப்படங்களும், ஈழம் குறித்த புத்தக்கங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.  தேசியத்தலைவர் வண்ணப் படங்கள் அச்சிடப்பட்ட காலண்டர்கள் பரபரப்பாக விற்பனையாகியதும், அருகே நம்மூர் போலீஸ் அதற்கு பாதுகாப்பு கொடுத்ததும் ஆச்சரியமளித்தன.


நாளை பாரளுமன்ற உறுப்பினர் திருமதி, கனிமொழி அவர்கள் சமத்துவ பேரணியை தொடங்கி வைக்க இருப்பதாகவும்,  நாக்கு, மூக்கா புகழ் சின்னப் பொன்னு அவர்களின் கலை நிகழ்ச்சிகள் இருப்பதாகவும் மேடையில் அறிவிக்கப் பட்டது.



நிகழ்ச்சி நடத்துவதிலும், மேடை நிர்வாகத்திலும் பல குழப்பங்கள் இருந்தாலும், இது ஒரு பாராட்டப் படவேண்டிய நிகழ்வுதான்.  "சர்க்கரை இல்லாத ஊருக்கு இழுப்பப்பூ  சர்க்கரை" என்ற சொலவடை நினைவிற்கு வந்தது என் குற்றமல்ல.



நாளை மீண்டும் சந்திப்போம்..........

19 comments :

செந்தில் நாதன் Senthil Nathan said...

நிகழ்ச்சி பற்றி அருமையான தொகுப்பு... வாழ்த்துகள்...

இதே மாதிரி தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நிகழ்ச்சிகள் நடந்தால் ரெம்ப நல்லா இருக்கும்..

புலவன் புலிகேசி said...

நல்ல தொகுப்பு.

//குறிப்பிட்ட பகுதிகளில் நடக்கும் போது, அந்த பகுதிகளைச் சார்ந்த, கலை மற்றும் கலாச்சாரத்தை வளர்க்கும் விதமாகவும், அழிந்து போகும் நிலையில் உள்ள கலைகளை தெரிவு செய்து அதை வளர்க்கும் விதமாகவும் அமைய வேண்டும் என்பது என் போன்றோர் அவா..//


என்னுடைய அவாவும் இதேதான்...நன்றி தல

கண்ணகி said...

நல்ல வர்ணனை. ஈரோட்டில் இல்லையே என்று ஏங்கவைகிறது.தங்மணியுடன் போய் குத்தாட்டம் போட முடியாமல் ரொமப்த்தான் தவித்துவிட்டீர்கள். பாவம் சார் நீங்க.சக்தி குழுவின் தொடர்பு எண் தந்ததற்கு நன்றி.இனி பலபேருக்குத் தெரியும்.

பிரபாகர் said...

அருட் தந்தை பேசுவது எப்போதுமே புரியாது ஆரூரன், அப்படித்தான்.

நிறை குறைகளை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் (நிறை எங்கே பிரபா என்கிறீர்களா?)

பிரபாகர்.

Anonymous said...

நல்லா தொகுத்திருக்கீங்க.
நீங்கெல்லாம் குத்தாட்டம் ஆட ஆரம்பிச்சா விஜய்க்கு சான்ஸ் போயிருமில்லை. :)

பித்தனின் வாக்கு said...

நல்ல வர்னனை. சுவையாகவும், சூடாகவும் இருந்ததது. மிக்க நன்றி.

thiyaa said...

நிகழ்ச்சி பற்றி அருமையான தொகுப்பு..
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

sathishsangkavi.blogspot.com said...

நிகழ்ச்சி பற்றி அருமையான தொகுப்பு..

வால்பையன் said...

To follow

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி செந்தில்நாதன்...

நன்றி புலிகேசி

நன்றி பிரபா...

நன்றி கண்ணகி

நன்றி சின்ன அம்மிணி

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி பித்தன்...

நன்றி தியா

நன்றி சங்கவி

நன்றி வால்

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றி கணேஷ்....

க.பாலாசி said...

நேற்று மாலைதான் எனக்கு அங்கே செல்ல முடிந்தது. தாங்கள் சொல்வதுபோல் நிறைய குறைகள் இருந்தாலும் இதுபோன்றதொரு கிராமிய ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை பார்த்து நாளாகிவிட்டது. என்பார்வையில் அவ்வளவாக திரைப்படச்சாயல் தெரியவில்லை. நான் ரசித்தது வேளாளர் கல்லூரி மாணவியர்களின் பறையாட்டம். மிக நன்றாக இருந்தது.

நல்லமுறையில் நிகழ்ச்சியினை வர்ணித்துள்ளீர்கள்.

ஈரோடு கதிர் said...

மிஸ் பண்ணிட்டேன்

vasu balaji said...

இவ்வளவு குசும்போடு இடிக்கும் இடத்தில் இடித்து பாராட்டும் இடத்தில் மனதாரப் பாராட்டி ஒரு விமரிசனம் இப்போதுதான் படிக்கிறேன். நன்றி ஆரூரன்.

கலகலப்ரியா said...

அருமை அருமை

அன்புடன்
ப்ரியா

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/மிஸ் பண்ணிட்டேன்/
அல்லோ. வலையுலகத்துல இத வட போச்சேன்னு சொல்லணும். :))

ஆரூரன் விசுவநாதன் said...

//அருமை அருமை

அன்புடன்
ப்ரியா//

இது என் டயலாக்.......ம்ஹும் ஒத்துக்க மாட்டேன்........

ஆரூரன் விசுவநாதன் said...

//வானம்பாடிகள்//

//இவ்வளவு குசும்போடு இடிக்கும் இடத்தில் இடித்து பாராட்டும் இடத்தில் மனதாரப் பாராட்டி ஒரு விமரிசனம் இப்போதுதான் படிக்கிறேன். நன்றி ஆரூரன்.//


மெய்யாலுமா? தல......
பொய்தான????/